By Village Missionary Movement
Wednesday, 29-Nov-2023இன்றைய தியானம்(Tamil) 29.11.2023
கோபம் வேண்டாம்
"மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே" - யாக்கோபு 1:20
ஒரு இளைஞனுக்கு அதிகமாய் கோபம் வந்து கொண்டே இருந்தது. கோபம் வரும் போது அவன் கத்தி தீர்த்து விடுவான். ஒருநாள் அவன் அப்பா அவனிடம் சுத்தியலையும் நிறைய ஆணிகளையும் கொடுத்தார். "இனிமேல் கோபம் வரும்போது எல்லாம் வீட்டின் பின்புறம் உள்ள சுவரில் ஆணி அடிக்குமாறு கூறினார்". முதல்நாள் 10 ஆணி மறுநாள் 7, பின்பு 5, 2 என படிப்படியாக ஆணி அடிப்பது கோபம் குறைந்தது. ஒருநாள் ஒரே ஒரு ஆணி அடித்தான். "அவன் தன் அப்பாவிடம் மொத்தமாக 45 ஆணிகள் அடித்து உள்ளேன். இனி கோபம் வராது" என அவன் அப்பாவிடம் கூறினான். அப்பா அவனிடம், இனி மேல் கோபம் வராத நாளில் ஒவ்வொரு ஆணியாக பிடுங்கி விடு என்றார். 45 நாளில் அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன என பெருமையுடன் அப்பாவை அழைத்துக் காட்டினான். உடனே அப்பா சொன்னார் ஆணிகளைப் பிடுங்கிவிட்டாய். சுவற்றில் உள்ள ஓட்டைகளை என்ன செய்வாய்? உன் கோபம் இது போல பலரை காயப்படுத்தி இருக்கும் அல்லவா? அந்த இளைஞன் வெட்கி தலைகுனிந்தான்.
இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்திச் செல்வதற்கு கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்டு முன்குறிக்கப்பட்ட சிறந்த தலைவர் மோசே. மோசே கானான் தேசத்தில் பிரவேசிப்பதற்கு ஜனங்களை வழி நடத்திச் செல்கிற வழியில் பல பிரச்சனைகளும் தேவைகளும் ஏற்பட்டன. மோசே இவர்களுடைய தேவைகளுக்காக தேவ சமூகத்தில் காத்திருந்து தேவன் சொல்லுகிற ஆலோசனையைக் கேட்டு இவர்களுடைய தேவையை நிறைவேற்றுவார். அதுபோலவே ஒரு முறை ஜனங்களுக்கு தண்ணீர் தேவைப்பட்டபோது கர்த்தர் மோசேயிடம் அவர்கள் கண்களுக்கு முன்னே கன்மலையைப் பார்த்து பேசு, அப்பொழுது அது தன்னிடத்திலுள்ள தண்ணீரைக் கொடுக்கும் என்றார். ஆனால் மோசே கோபத்தினால் பேசுவதற்கு மாறாக தன் கையை ஓங்கி கன்மலையை தன் கோலினால் இரண்டுதரம் அடித்தார். மோசே கோபத்தினால் செய்த செயலினால் கானானுக்குள் பிரவேசிக்க முடியாமல் போனது.
பிரியமானவர்களே, பிறரை காயப்படுத்துவதை நிறுத்தினால் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் பிறக்கும். கோபத்தை விட்டுவிட வேண்டும். கோபம் அடுத்தவர்களின் மனதை குத்தி கிழித்து காயப்படுத்தி ரணமாக்கிவிடும் என்பதை அறிந்தால் நம்மில் ஒருவரும் கோபப்பட மாட்டோம். நாம் கோபத்தில் பேசுகின்ற வார்த்தைகளோ, செய்கின்ற செயல்களோ எதுவும் பலன் தராது. எனவே நாம் கோபத்தை விட்டுவிட ஆவியானவரின் உதவியை நாடி அவர் கரத்தில் நம்மை அர்ப்பணிப்போம்.
- Mrs. சக்தி சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:
சட்டீஸ்கர் மற்றும் குஜராத் ஊழியங்களுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864