By Village Missionary Movement
Saturday, 25-Nov-2023இன்றைய தியானம்(Tamil) 25.11.2023
யோசேப்பு
"…மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது" - மத்தேயு 5:16
பரிசுத்த வேதாகமத்தில் மூன்று யோசேப்புகளை குறித்து நாம் காணமுடியும். முதலாவது, பழைய ஏற்பாட்டில் காணப்படும் யோசேப்பு. அடுத்து இயேசுவின் தாய் மரியாளின் கணவர் யோசேப்பு. (மத்தேயு 1:9-20) மூன்றாவது, அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு (மத்தேயு 27:57) யோசேப்பு என்னும் எபிரெயச் சொல்லின் பொருள் "அவர் சேர்த்துக் கொள்வார்" என்பதாகும்.
முதலாவது, யோசேப்பைக் குறித்து ஆதியாகமத்தில் வாசிக்கும் பொழுது அவன் இளமையில் கடந்து வந்த பாதைகளை அறிவோம். ஆனாலும் அவன் தனக்கு துரோகம் செய்த சகோதரர்களை பஞ்சகாலத்தில் சேர்த்துக் கொண்டு எகிப்து தேசத்திலே அவர்கள் தங்குவதற்கு கோசேன் நாட்டையும் பெற்றுக் கொடுத்தான். அவனுக்கு அவர்கள் செய்த கொடுமைகளை எண்ணி அவர்கள் மேல் பகைமை கொள்ளவில்லை. மாறாக உங்களை ஆதரிக்கிறதற்காகவும், உயிரோடே காப்பதற்காகவும் தேவன் என்னை உங்களுக்கு முன்னமே அனுப்பினார் என்று கூறி அனைவரையும் பெருந்தன்மையோடு மன்னித்து தன்னோடு அவர்களை சேர்த்துக் கொண்டான்.
இரண்டாவது, இயேசுகிறிஸ்துவின் தாயாகிய மரியாள் யோசேப்பிற்கு நியமிக்கப்பட்டிருக்கையில் அவள் கர்ப்பவதியாகி இருக்கிறாள் எனத் தெரிந்த போது யோசேப்பு நீதிமானாக இருந்தபடியினால் அவளை இரகசியமாகத் தள்ளிவிட யோசனையாயிருந்தான். ஆனால் தேவதூதன் யோசேப்பிடம் வந்து நீ உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக் கொள் எனக் கூறியபோது அவன் அதற்கு உடனே கீழ்ப்படிந்து மரியாளைத் தன்னோடு சேர்த்துக் கொண்டான் என காண்கிறோம்.
மூன்றாவதாக, அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பைக் குறித்து பார்ப்போம். இயேசுகிறிஸ்து சிலுவையில் மரித்தபின், பிலாத்துவிடம் துணிந்து போய் இயேசுவின் சரீரத்தைப் பெற்றுக் கொண்டு வந்து தன் குடும்பத்தினருக்காக கன்மலையில் வெட்டியிருந்த தன்னுடைய புதிய கல்லறையிலே வைத்தான் என காண்கிறோம். அதாவது இயேசு கிறிஸ்துவை தன்னுடைய குடும்பத்தில் ஒருவராக சேர்த்துக் கொண்டான்.
யோசேப்பு என்ற பெயரின் அர்த்தத்திற்கேற்ப இந்த மூவரும் வாழ்ந்தார்கள் என்று நாம் காண்கிறோம். இன்று நம் வாழ்க்கை நம் பெயருக்கேற்ப உள்ளதா? கிறிஸ்தவர்கள் என்று கூறிக் கொள்ளும் நாம் கிறிஸ்துவை வெளிக்காட்டுகிறவர்களாக, கிறிஸ்துவை அறிவிப்பவர்களாக இருக்க வேண்டும். நம் வாழ்க்கை அநேகருக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். உயிருள்ள சாட்சிகளாய் இவ்வுலகில் வாழ்ந்து, நித்திய ஜீவனை சுதந்தரித்துக் கொள்ள அனுதினமும் பிரயாசமெடுப்போம்.
- Mrs. ஜெபக்கனி சேகர்
ஜெபக்குறிப்பு:
கிறிஸ்துமஸ் நற்செய்தியை கைப்பிரதி வழியாக கொண்டு செல்ல 20 லட்சம் கைப்பிரதிகள் தேவையுள்ளது. தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864