By Village Missionary Movement
Wednesday, 22-Nov-2023இன்றைய தியானம்(Tamil) 23.11.2023
பிள்ளைகள்
"பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்" - நீதிமொழிகள் 22:6
ஒரு விதவைத் தாய் தன் மகனைப் பார்க்க சிறைக்குச் செல்கிறாள். அங்கு மகன் தன் தாயைப் பார்க்க விருப்பம் இல்லை என்று கூறி வர மறுக்கிறான். மகன் செய்த திருட்டு குற்றத்திற்காக அடுத்த நாள் அவனை கோர்ட்டுக்கு கொண்டு செல்கின்றனர். அங்கும் அவனது தாய் வருகிறார். ஆனால் மகன் தாயை பார்க்க விரும்பவில்லை. தாய் வற்புறுத்தி கேட்டுக் கொண்டதால் மகன் பார்க்க வந்தான். வந்தவன் "என்னுடைய இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்" என்று கூறினான். தாய் அவனை அழுது கொண்டே பார்க்கிறாள். அதற்கு மகன் "நான் சிறு வயதில் சின்ன பொருட்களைத் திருடிக் கொண்டு வரும் போது நீங்கள் என்னை கடிந்து கொண்டு திருத்தவில்லை, அதனால் தான் நான் தொடர்ந்து இந்த திருட்டை பண்ணினேன்" என்றார். அப்பொழுது தாய், "நீ சொல்வது சரிதான். உன் மீது கொண்ட பாசத்தால் உன்னைக் கடிந்து கொள்ளவில்லை. ஆனால் அது எவ்வளவு பெரிய தவறு என்பதை இப்போது உணர்கிறேன்" என்றாள்.
ஆம், வேதத்தில் கூட ஏலி என்ற ஆசாரியரைப் பார்க்கிறோம். அவர் ஆலயத்தில் பணிவிடை செய்தவர். ஆனால் அவரது பிள்ளைகளான ஓப்னி, பினெகாஸ் தேவனுக்குப் பிரியமில்லாமல் நடந்து கொண்டார்கள் என்பதை வேதத்தில் வாசிக்கிறோம். இதனால் அவர்கள் இளவயதில் ஒரே நாளில் இறந்து போனார்கள். அதுபோலவே இஸ்ரவேலை 40 வருஷம் நியாயம் விசாரித்த சாமுவேல் தீர்க்கதரிசியின் பிள்ளைகள் யோவேல், அபியா ஆகியோர் பரிதானம் வாங்குகிறவர்களாகவும், பொருளாசைக்காரராகவும் நியாயத்தைப் புரட்டுகிறவர்களாகவும் இருந்தார்கள் என்பதை 1சாமு. 8ம் அதிகாரத்தில் பார்க்கிறோம். இதனால் நியாயாதிபதியாய் இருக்க வேண்டியவர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள்.
ஆம், நாமும் நம்முடைய பிள்ளைகளை எப்படி வளர்க்கிறோம்? கர்த்தரின் கரத்தில் ஒப்புக் கொடுத்து வளர்க்கிறோமா? அல்லது உலக காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வளர்க்கிறோமா? சிந்திப்போம். யோபு தன்னுடைய பிள்ளைகளுக்கு முன்பாக உத்தமனாய் இருந்தார். மேலும் பிள்ளைகள் பாவம் செய்திருப்பார்களோ என்று எண்ணி அவர்களுக்காகவும் தேவனிடம் விண்ணப்பம் பண்ணினார். நாமும் கூட நம்முடைய பிள்ளைகளை சிறுவயதிலேயே நேர்மையான வழியில் சத்தியத்தில் நடத்துவோமாக! மாயையான இந்த உலகில் ஒத்த வேஷம் தரியாமல் கர்த்தருக்கென்று வைராக்கியமாய் ஓடுகிற ஒரு சந்ததியை உருவாக்க முயற்சி செய்வோம்! ஆமென்!
- Mrs. திவ்யா அலெக்ஸ்
ஜெபக்குறிப்பு:
24 மணி நேர சங்கிலித் தொடர் ஜெபம் எல்லா பணித்தளங்களிலும் தடையின்றி நடைபெற ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864