By Village Missionary Movement
Tuesday, 21-Nov-2023இன்றைய தியானம்(Tamil) 21.11.2023
நம்மை அறிந்திருக்கும் ஆண்டவர்
"இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்" - லூக்கா 19:10
நாம் இன்றைக்குப் பார்க்கப் போகிற மனுஷன் சகேயு. யூதர்களிடம் வரி வசூலிக்கிறவர்களுக்குத் தலைவனும், பணக்காரனுமாயிருந்தான். அவன் அநியாயமாக ஆஸ்திகளை சேர்த்து வைத்ததினால் மக்கள் அவனை வெறுத்தார்கள். பாவியான மனுஷனாக பார்த்தனர். இப்படிப்பட்ட மனிதனாகிய சகேயு, இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகை தேடினான். அவன் குள்ளனானபடியால் இயேசு போகும் வழியில் முன்னாக ஓடி அவரைப் பார்க்கும்படி தன் பதவியையும் பெருமையையும் அந்தஸ்தையும் மறந்து ஒரு காட்டத்தி மரத்தில் கஷ்டப்பட்டு ஏறினான். சகேயுவிற்கு மரம் ஏறியெல்லாம் பழக்கம் இருக்காது. ஆனால் இயேசு கிறிஸ்துவைப் பார்க்க இருந்த ஆசையால் ஏறினான். இயேசு அந்த இடத்திற்கு வந்த போது அவனைக் கண்டு அண்ணாந்து பார்த்து "சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா. இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்க வேண்டும்" என்றார்.
சகேயு உடனே மரத்தை விட்டு இறங்கி வந்து சந்தோஷத்தோடே அவரை தன் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போனான். இயேசு அவனிடம் "உன்னிடத்திலுள்ளதை விற்றுக் கொடு" என்று எதுவுமே சொல்லவில்லை. ஆண்டவரை கண்ட சகேயு பாவ உணர்வு அடைகிறான். பாவமன்னிப்பைப் பெற்றுக் கொள்வதோடு மட்டுமல்ல, கிரியையில் அதை காண்பிக்கிறான்.
பாவம் தேவனையும் மனிதனையும் பிரிக்கிறது. பாவமன்னிப்பை பெற உலகிலுள்ள மக்கள் விதவிதமான வழிகளை பின்பற்றுகின்றனர். இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம் மட்டுமே பாவத்திலிருந்து விடுதலை என்பதை ஜனங்கள் அறியவில்லை. பாவம் என்றால் என்ன? மாற்கு 7:20-23 ல் மனுஷனுக்குள்ளேயிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்று வாசிக்கிறோம். மனுஷனுடைய இருதயத்திற்குள்ளே இருந்து புறப்படுபவை பொல்லாத சிந்தைகளும், விபச்சாரங்களும், வேசித்தனங்களும், கொலை, களவு, பொருளாசை, கபடு, காமவிகாரம், வன்கண், தூஷணம், பெருமை, மதிகேடு போன்றவை. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டு விட்டு விட்டால் அவைகளை மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீங்கி நம்மை சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும், நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
நண்பர்களே, நாமும் பாவத்தில் வாழ்ந்து கொண்டிருப்போமானால் சகேயுவைப் போல ஆண்டவரைத் தேடி வருவோம். அவர் நம் பாவங்களை மன்னித்து நமக்கு புதுவாழ்வு தர ஆவலாயிருக்கிறார். நாம் பெற்ற பாவமன்னிப்பின் நிச்சயத்தை பிறருக்கும் அறிவிப்போம். அல்லேலூயா!.
- Bro. முரளி கிதியோன்
ஜெபக்குறிப்பு:
"ட்ரக் அடிட்" சென்டர் திட்டத்திற்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864