By Village Missionary Movement
Monday, 20-Nov-2023இன்றைய தியானம்(Tamil) 20.11.2023
ஒற்றுமையாய் கரங்களை உயர்த்துவோம்
"…நானே கர்த்தர் என்று அறியும்படி இன்றைக்கு அதை உன் கையில் ஒப்புக் கொடுப்பேன்" – 1 இராஜாக்கள் 20:13
எறும்புகள் புற்று கட்டுவதை காகம் ஒன்று கவனித்தது. "நீங்கள் எத்தனை சிறியவர்கள், பெரிய புற்றை எப்படி கட்டப் போகிறீர்கள்" என்று காகம் கேலி செய்தது. எறும்புகள் அமைதியாக வேலை செய்தன. சில நாட்களில் மூன்று அடி உயரமான புற்றுக்குள் எறும்புகள் குடி புகுந்தன. காகத்திற்கு ஒரே ஆச்சரியம். "எப்படி உங்களால் முடிந்தது?" என்று கேட்டதற்கு எறும்புகள் "நாங்கள் ஒன்றிணைந்து செயல்பட்டோம்" என்றன. ஆம், தனியாக நின்று செய்யும் காரியங்களை விட ஒன்றிணைந்தால் பெரிய காரியங்களை சாதிக்கலாம்.
வேதத்திலே இப்படி செயல்பட்ட ராஜாதான் ஆகாப். பெனாதாத் என்ற சீரியாவின் ராஜா தன்னுடன் முப்பத்திரண்டு ராஜாக்கள் மற்றும் மிகுதியான ரதங்களோடும், குதிரைகளோடும் மிகச்சிறிய நாடான இஸ்ரவேலின் மேல் யுத்தத்திற்கு வருகிறான். முப்பத்து மூன்று ராஜாக்கள் சூழ்ந்திருக்கிறார்கள். ஒரு தீர்க்கதரிசி இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபினிடத்தில் வந்து "அந்த ஏராளமான ஜனக்கூட்டத்தை எல்லாம் கண்டாயா? இதோ நானே கர்த்தர் என்று நீ அறியும்படி இன்றைக்கு அதை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்கிறார்" என்றான். "யாரைக் கொண்டு?" என்று ஆகாப் கேட்டதற்கு "மாகாணங்களின் அதிபதிகளின் சேவகரைக் கொண்டு" என்று தீர்க்கதரிசி சொல்லுகிறார். "யுத்தத்தை யார் துவங்க வேண்டும்" என்றார். அந்த தீர்க்கதரிசி "நீர்தான்" என்கிறார். கர்த்தர் சொன்னபடி ராஜா செயல்பட்டு சீரியாவை முறியடித்தான்.
பிரியமானவர்களே, நாமும் கூட தேசத்தை சுதந்தரிக்கும் குடிகள்! நம் பாரத தேசத்திலுள்ள கோடிக்கணக்கான ஜனங்கள் தேவனை அறிய வேண்டும். திருச்சபைகள் எங்கும் எழும்ப வேண்டும். அதற்கு நாம் என்ன செய்ய போகிறோம். ஒருவரால் மாத்திரமே எழுப்புதல் வராது. நாம் ஒரு மனதோடு ஒற்றுமையாக செயல்படுகிறோமா? நம்மில் ஞானிகளோ, வல்லவர்களோ, பிரபுக்களோ அநேகரில்லை. ஆனாலும் பரிசுத்த ஆவியினாலே நாம் பிரசங்கிக்கிற சுவிசேஷத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்கு பிரியமாயிற்று. எனவே கல்வாரி அன்பினை எல்லோரும் கண்டிடச் செய்கிறோமா? உலகத்தின் முடிவு பரியந்தம் உங்களோடிருப்பேன் என்றவர் வாக்கை நம்பிச் சொல்லுவோம். நாடெங்கும் சுவிசேஷ விதை விதைப்போம். நரகத்தை நோக்கி விரைகின்ற மக்களைத் தடுத்து நிறுத்துவோம். ஆமென்!
- Sis. பியூலா
ஜெபக்குறிப்பு
நமது வளாகத்தில் தங்கியுள்ள ஓய்வு பெற்ற மிஷனெரிகளுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864