By Village Missionary Movement
Friday, 17-Nov-2023இன்றைய தியானம்(Tamil) 17.11.2023
அர்ப்பணிப்பு
"நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர்" - அப். 9:6
மனிதர்களைக் கொன்று சாப்பிடும் பாப்பூவா தீவு காட்டுவாசிகளை கிறிஸ்துவின் மனிதர்களாய் மாற்றியவர்தான் ஜான் ஹென்றி ஹோல்ம்ஸ் என்ற மிஷனெரி. (1866-1934) இவர், அம்மக்களுக்கு கிறிஸ்துவின் அன்பை எடுத்துரைக்க தீவிரப்பட்டவர். ஒரு மிஷன் ஸ்தாபனத்தின் மூலமாக கப்பலில் பாப்பூவா என்ற தீவுக்கு சென்று அங்கேயிருந்த ஜனங்களின் நிலை கண்டதும் ஒரு நொடி கதி கலங்கிப் போனார். உடலில் ஆடைகள் இல்லாமலும், சகிக்க முடியாத துர்நாற்றங்களுடனும் நின்று கொண்டிருந்தனர். முதலில் அம்மக்களின் மொழியைக் கற்றுக் கொண்டு அவர்களுடன் நட்புறவாக பழக ஆரம்பித்தார். அவர்களிடையே நிலவிய மூடப் பழக்கவழக்கங்களை முற்றிலுமாக மாற்றினார். பள்ளிக்கூடங்களையும் வீடுகளையும் கட்டினார். அவர்களுடைய மொழியிலே வேதாகமத்தை வாசிக்க உதவி செய்தார். இதனால் பாப்புவா தீவு மக்களின் வாழ்க்கைத் தரம் மாறியது. மனிதர்களை கொன்று சாப்பிடும் மக்கள் இயேசுவின அன்பினால் மனிதர்களை நேசிக்க ஆரம்பித்தனர். இதற்கு எல்லாம் காரணம், ஜான் ஹென்றி அவர்கள் பாப்புவா தீவு மக்களின் இரட்சிப்பிற்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்ததுதான்.
அப். 9ம் அதிகாரத்தில் சவுல் எனப்பட்ட பவுலை கர்த்தர் சந்தித்த விவரத்தை அறிவோம். இந்த சவுல், கிறிஸ்தவ மக்களை கட்டி எருசலேமுக்கு கொண்டு வரும்படி நிருபங்களை கேட்டு வாங்கினான். அதற்காக பிரயாணப்பட்டு கொண்டிருக்கிற நேரத்தில் ஓர் ஒளி அவரை சந்தித்தது. அந்த இடத்தில் பவுல் கர்த்தருடைய சத்தத்தைக் கேட்டு, "நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர்" என்று தன்னை தேவனிடம் அர்ப்பணித்தார். இப்படி அர்ப்பணித்த பவுலைக் கொண்டுதான் கர்த்தர் 13க்கும் மேலான நிருபங்களை எழுத வைத்தார். தீமோத்தேயு என்ற இளைஞன் தேவனுக்கு ஊழியம் செய்ய காரணமாகவும் இருந்தார்.
பிரியமானவர்களே, அர்ப்பணிப்பு என்பது நம்மையும், நம்முடையதையும், தேவன் நமக்கு தர இருக்கிறதையும் அவரிடம் ஒப்புவிப்பதே ஆகும். கிறிஸ்தவர்களுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருந்த பவுலின் அர்ப்பணிப்பினால் அநேக ஊழியர்கள் உருவாக்கப்பட்டனர், நிருபங்கள் எழுதப்பட்டன. இந்த பவுல் இன்றும் திருச்சபைகளாலும், ஊழியர்களாலும், விசுவாசிகளாலும் பேசப்பட்டும், பிரசங்கிக்கப்பட்டும் வருகிறார். இன்று நீங்கள் உங்களை தேவனுக்கென்று அர்ப்பணிக்கும்போது அநேகமாயிரம் ஜனங்களின் இரட்சிப்பிற்கு பாத்திரவான்களாக மாற முடியும். நமக்கு பூமியில் கொடுக்கப்பட்ட வாழ்நாட்கள் குறுகினது என மனதில் வைத்து அவருடைய சத்தம் கேட்டு, சித்தம் செய்ய நம்மை அர்ப்பணிப்போம்!
- Mrs. சக்தி சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:
நமது வளாகத்தில் தங்கி பயிற்சி பெறும் இளம் மிஷனெரிகளுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864