By Village Missionary Movement
Wednesday, 25-Oct-2023இன்றைய தியானம்(Tamil) 25.10.2023
சவ்வு மிட்டாயல்ல
"…நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாயிரு" - ஆதியாகமம் 17:1
நான் சிறுவனாக இருக்கும்போது எங்கள் ஊரில் பழைய ஈயம், தகரம், பித்தளைக்கு பேரீச்சம்பழம், கொய்யாபழம், சவ்வுமிட்டாய், பஞ்சுமிட்டாய் எனக்கூறிக்கொண்டே சைக்கிளில் வியாபாரிகள் வருவதுண்டு. நானும் ஆசையாக சவ்வுமிட்டாயை வாங்குவேன். சுவைத்துச் சாப்பிடுவதற்கு முன் அதை வைத்து மேலும் கீழுமாக இழுத்து வட்டம், சதுரம், செவ்வகம் என பலவாறு எனக்கு ஏற்றபடி இழுத்து விளையாடுவேன். அதுவும் நான் இழுத்தபடியெல்லாம் வருவது எனக்கு அளவில்லாத ஆனந்தமாயிருக்கும்.
வேதத்திலே, கழுதையைத் தேடிச் சென்ற சவுலை ராஜாவாக்கினார் கர்த்தர். ஆனால் சவுல் கர்த்தரை சர்வவல்லவராக பாராமல் தன்னுடைய இஷ்டப்படியெல்லாம் இழுத்துக் கொள்ளலாம் என்று சவ்வுமிட்டாய் போல நினைத்துவிட்டார். கர்த்தரின் வார்த்தை சவுலை நோக்கி வந்தது. "இப்போதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து இரக்கம் வைக்காமல் புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்று போடக்கடவாய்" என்பதே. ஆனால் சவுலோ அமலேக்கியரின் ராஜாவான ஆகாகை உயிரோடே பிடித்து ஆடுமாடுகளில் முதல்தரமானவைகளையும், இரண்டாம் தரமானவைகளையும் நலமான எல்லாவற்றையும் தப்பவைத்தான். அற்பமானவைகளையும் உதவாதவைகளுமான சகல வஸ்துக்களையும் அழித்துப் போட்டான். சவுலின் உள்ளத்தில் இருந்ததெல்லாம் தான் செய்வது நீதிதான். இதெல்லாம் ஆண்டவர் கண்டுகொள்ள மாட்டார் என்று ஆண்டவரை தன் செயலுக்கு சாதகமாய் நினைத்துக் கொண்டார்.
இன்று பலர் இதைப் போன்று செய்து விட்டு நம் கர்த்தர் சும்மாவிட்டுவிடுவார். இதில் என்ன தவறு இருக்கிறது என்று தங்கள் செய்கைளைக் குறித்து தாங்களே நியாயப்படுத்திக்கொள்வார்கள். மாறாக ஏசாயா 64:6 "எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது" என்ற உணர்வே இருக்க வேண்டும். பிரியமானவர்களே கர்த்தரின் பரிசுத்த வேதாகமம் நீதி என்று எதையெல்லாம் கூறுகிறதோ அதுவே நீதி. அநீதி என்று எதையெல்லாம கூறுகிறதோ அது அநீதியே. அதற்கு மிஞ்சினது ஒன்றுமில்லை.
எனவே சர்வ வல்லமையுள்ள தேவனை சவ்வுமிட்டாய்போல நமக்கு ஏற்றபடி இழுத்துவிடலாம் என்று மறந்தும் நினைத்து விடாதீர்கள். நீங்களும் நானும் தான் கர்த்தரின் கரத்தில் சவ்வுமிட்டாய்போல இருக்க வேண்டும். அவர் வசனத்தின் மூலம் நம்மை எப்படி இழுத்தாலும் அதற்கு வளைந்து கொடுக்கும் வண்ணமாக நாம் இருக்க வேண்டும். அதுவே நமக்கு ஆசீர்வாதம்.
- Bro. சிமியோன்
ஜெபக்குறிப்பு:
வாலிபர்மாலை ஜெபக்குழுக்கள் மூலம் சந்திக்கப்படும் வாலிபர்கள் ஒவ்வொருவரும் தேவனுடைய கரத்தில் கருவியாக பயன்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864