By Village Missionary Movement
Thursday, 05-Oct-2023இன்றைய தியானம்(Tamil) 05.10.2023
கர்த்தருக்குள்ளே திடப்படுத்தி
"…தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக் கொண்டான்" - 1 சாமுவேல் 30:6
வில்லியம் ஆல்ட் என்ற மிஷனெரி (1778-1815) தனது 7 வயதிற்குள் 6 முறை முழுவேதாகமத்தையும் படித்தவர். தமிழ்மொழியை இரண்டே மாதங்களில் படித்து தமிழ்மொழியில் பிரசங்கம் செய்தவர். 1778 - ம் ஆண்டு இங்கிலாந்து தேசத்தில் பிறந்ததான இவர் ஆண்டவரின் அன்பை அறிந்தவராய், 17 வயதில் தான் இருக்கும் பகுதியில் பைபிள் ஸ்கூல் ஒன்றை நடத்தி வந்தார். கடல் கடந்து மிஷனெரி ஊழியம் செய்ய வேண்டியதான ஆர்வம் இவருக்குள் ஏற்பட்டதால், ஆறு பேர் உள்ளடங்கிய குழுவாக கடற்பயணம் மேற்கொண்டு இலங்கை சென்று ஊழியம் செய்ய நிர்ணயித்தனர். வில்லியம் ஆல்ட் மற்றும் இவருடைய மனைவி சாராளும் இந்த குழுவில் இருந்தனர். வில்லியம் ஆல்ட் தனக்கு திருமணமான ஐந்து நாட்களிலேயே மனைவியுடன் மிஷனெரி பயணத்தை தொடங்கினார். மேலும் இவருடைய மனைவி கடற்பயணத்தில் வழியிலேயே உடல்நிலை பாதிக்கப்பட்டு திருமணமான ஐந்து வாரங்களிலேயே உயிரிழந்தார். புதைக்க இடம் இல்லாமல் கடலே இவருடைய கல்லறையானது. இந்த குழுவை நடத்திச் சென்றதான தலைவரும் கடல் பயணத்திலே மரித்துவிட்டார். ஆறுமாதங்களுக்கு பிறகு இலங்கை சென்றடைந்து தன்னுடைய ஊழியத்தை தொடங்கினபோது, பஞ்சம் நிறைந்த பகுதி, இருக்க இடம் இல்லாமல் சுவிசேஷ ஊழியத்தை செய்ய தொடங்கினார். எல்லாம் இழந்த சூழ்நிலையிலும் கர்த்தருக்குள் தன்னை திடப்படுத்திக் கொண்டு, பட்டிகோலா பகுதியில் 8 மாதத்தில் 6 பள்ளிகளும், ஒரு வேதாகம கல்லூரி மற்றும் ஒரு சபையையும் நிறுவினார்.
தாவீதும் அவன் மனுஷரும் சிக்லாகுக்கு வந்தபோது அந்த பட்டணம் அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது என்றும், தங்கள் மனைவிகளும் தங்கள் குமாரரும், குமாரத்திகளும் சிறைபிடித்துக் கொண்டு போகப்பட்டார்கள் என்று கண்டார்கள். இந்த சூழ்நிலையில் தாவீது மிகவும் நெருக்கப்பட்டார். அப்போது சகல ஜனங்களும் மனக்கிலேசமானதினால் தாவீதை கல்லெறிய வேண்டும் என்று சொல்லிக் கொண்டார்கள். தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள் தன்னை திடப்படுத்திக் கொண்டார். பின்பு தாவீது கர்த்தரிடத்தில் விசாரித்து எல்லாவற்றையும் திருப்பிக் கொண்டார்.
பிரியமானவர்களே! மிஷனெரி வில்லியம் ஆல்ட் வாழ்க்கையும், தாவீதும் எல்லாம் இழந்த சூழ்நிலையிலும் கர்த்தருக்குள்ளே தன்னை திடப்படுத்தினதன் விளைவாக தொடர்ந்து செய்ய வேண்டிய காரியங்களை செய்ய முடிந்தது. நம்மிடம் ஆசீர்வாதம் இருக்கும்போது நம்முடைய இருதயத்தை திடப்படுத்துவது எளிது. ஆனால் எல்லாம் இழந்த சூழ்நிலை நமக்கு ஏற்பட்டால் அந்த நிலையிலும் நம்மை கர்த்தருக்குள் திடப்படுத்த முயற்சி செய்வோம். நிச்சயமாகவே கர்த்தர் நமக்கு உதவி செய்வார்.
- Mrs. சக்தி சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு
நம் வளாகத்தில் செயல்படும் மருத்துவமனைக்கு அர்ப்பணிக்கப்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கிடைக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864