By Village Missionary Movement
Friday, 15-Sep-2023இன்றைய தியானம்(Tamil) 15.09.2023
சகலமும் நன்மைக்கே
"…தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்" - ரோமர் 8:28
டோனாவூர் இல்லத்தின் தாயாக இருந்து, அநேக அனாதை சிறுபிள்ளைகளை ஆதரித்து வந்த ஏமி கார்மைக்கேல் அம்மையாரை நாம் மறக்க வாய்ப்பில்லை. அவர்கள் சிறுபிள்ளையாய் இருந்தபோது அவரது கவலை என்ன தெரியுமா? பொதுவாக, அவர் பிறந்த நாட்டிலுள்ளவர்களின் கண்களெல்லாம் நீல நிறத்தில் காணப்பட, ஏமியின் கண்கள் மட்டும் கருப்பு நிறத்தில் காணப்பட்டது. அதுதான் அவர் கவலைக்கு காரணம். ஆகவே இரவு படுக்கைக்குச் செல்லும் முன் தன் கட்டிலின் அருகில் முழங்கால்படியிட்டு, "இயேசப்பா! நான் காலையில் எழும்பும்போது எனது கண்களையும் நீல நிறத்தில் மாற்றி விடுங்க பிளீஸ்" என்று மிகவும் உறுதியோடு ஜெபித்து படுக்கைக்குச் சென்றாள். காலை எழுந்தவுடன் வேகமாக கண்ணாடி முன் சென்று தன் கண்களை அகல விரித்துப் பார்த்தாள். கருவிழி எந்த மாற்றமுமின்றி கருப்பு நிறத்தில் காணப்பட்டது. "அப்படியென்றால் ஜீசஸ் என் ஜெபத்தைக் கேட்கவில்லையா?" என உள்ளம் கேட்க, கலங்கின சின்னஞ்சிறு கண்கள்.
வருடங்கள் பல கடந்தன. ஆண்டவர் ஏமியை ஊழியத்திற்கு அழைத்தார். அவரும் தன்னை ஒப்புக்கொடுத்து தான் செல்ல வேண்டிய இடத்தைக் காட்டும்படி, தேவ வழிநடத்துதலுக்காக காத்திருந்தபோது, கர்த்தர் இந்தியாவை காட்டினார். தேவ வார்த்தைக்கு கீழ்ப்படிந்து இந்தியாவிற்கு வந்து நம் தமிழ்நாட்டிலுள்ள டோனாவூரில் ஊழியத்தை ஆரம்பித்தார். அப்போதுதான் அவருக்குப் புரிந்தது, இந்தியர்களின் கண்களைப் போல் தன்னுடைய கருவிழியும் கருப்பு நிறத்தில் காணப்படுகிறது என்று. நான் இந்தியர்களோடு இருக்க வேண்டுமென்பதே தேவனின் சித்தம் என்பதை புரிந்து கொண்டார் ஏமி. சிறுவயதில் அது கஷ்டமாயிருந்தாலும் சகலத்தையும் தேவன் நன்மையாகவே நடத்தியிருக்கிறார் என்பதை அறிந்து தேவனை துதித்தார்.
இன்று நாமும் கூட என் வாழ்வில் இருக்கும் இந்த பாடு என்னை விட்டு நீங்கட்டும் என்று கதறுகிறோம். ஏன் எனக்கு மட்டும் தேவன் இதை அனுமதிக்க வேண்டும் என்று சொல்லி அநேக கேள்விகளோடு வாழ்கிறோம். ஆனால் நாம் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? தேவனுடைய பாதத்தில் அமர்ந்து, ஆண்டவரே உம்முடைய சித்தம் செய்ய என்னை தத்தம் செய்கிறேன் என்று அர்ப்பணிப்பது மட்டுமே. இன்று வாசித்த வேதப்பகுதியில், ஒரு பிறவிக் குருடனைப் பார்த்து, இவனது இந்நிலைக்கு காரணம் யார் செய்த குற்றம் என்று சீஷர்கள் கேட்கிறார்கள். இயேசு கிறிஸ்துவோ, "இது இவன் செய்த குற்றமோ, இவன் பெற்றோர் செய்த குற்றமோ அல்ல, என்னுடைய கிரியை வெளிப்படும்படிக்கே இதை அவன் வாழ்வில் அனுமதித்திருக்கிறேன்"என்பார். ஆம், நாம் பிறக்கும் முன்பாகவே நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதை தேவன் குறித்துவிட்டார். அதற்காகவே நம் வாழ்வில் ஒவ்வொரு காரியத்தையும் அனுமதிக்கிறார். நாம் அவருக்காக பயன்பட நம்மை அர்ப்பணிக்கும்போது நம்மைக் கொண்டு அநேகரை அவருடைய ராஜ்யத்திற்கு வழிநடத்துவார். ஆமென்!
- Mrs. தவமணி வைரவேல்
ஜெபக்குறிப்பு
ஆமென் வில்லேஜ் டிவி சேனல் சாட்டிலைட் சேனலாக மாற்றப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864