By Village Missionary Movement
Tuesday, 12-Sep-2023இன்றைய தியானம்(Tamil) 12.09.2023
திகையாதே
"…திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்" - யோசுவா 1:9
மேற்கு இந்தியத் தீவின் கிரிக்கெட் அணியில் கிளைவ் லாயிட் தலைவனாயிருக்கும் போது அந்த அணி அதிக வெற்றி பெற்றது. எப்படிப்பட்ட மோசமான சூழ்நிலை இருந்தாலும் அந்த அணியின் வீரர்களை கிளைவ் உற்சாகப்படுத்தி விளையாடச் செய்வார். அவரின் திறமையான வழி நடத்தலினால் அந்த அணி அதிக வெற்றியினைப் பெற்றது.
இதைப் போலவே கர்த்தர் யோசுவாவோடும் உடனிருந்து நடத்தினார். எத்தனை அற்புதங்கள் கண்டாலும் சிறு குறைவு வந்ததும் முறுமுறுத்து, எதிர்த்து கூட்டங்கூடுகிற இஸ்ரவேல் ஜனங்களை எப்படி வழிநடத்துவது என்று திகைத்து நின்ற யோசுவாவிற்கு திகையாதே நான் உன்னுடனே இருக்கிறேன் என்று சொன்ன தேவன் உடனிருந்து அதிசயமாய் நடத்தி, தேசத்தைப் பங்கிடச் செய்தார். அதேபோல் பவுல் கொரிந்து பட்டணத்திற்கு வந்தபோது எதிராய் அரசாங்க கட்டளை ஒரு பக்கம், எதிர்க்கும் மக்கள் மறுபக்கம் இந்நிலையில் கர்த்தர் பவுலிடம் "நீ பயப்படாமல் பேசு, மவுனமாயிராதே, நான் உன்னுடனே கூட இருக்கிறேன்" என்றார். அதே போல் பவுலும் அந்தப் பட்டணத்திலே ஒன்றரை ஆண்டுகள் தங்கி சுவிசேஷ ஊழியம் செய்தார். அது மாத்திரமன்று பல உபத்திரவங்களிலும், அடிகளிலும், காவல்களிலும் கூட அவர் தைரியமாய் சுவிசேஷத்தை அறிவித்தார். நான் உன்னுடனே இருக்கிறேன் என்று வாக்களித்த தேவன் உடனிருந்து எல்லாவற்றிலும் தைரியமும், பெலனும், கிருபையும் தந்து நடத்தினார். ஏனெனில் நம் தேவன் வாக்கு மாறாதவர். "நல்ல போராட்டத்தைப் போராடினேன் ஓட்டத்தை முடித்தேன்" என (2தீமோ. 4:7) மரணத்தை கூட தைரியமாய் எதிர்கொள்ள தேவன் கிருபை செய்தார். அதனால்தான் தைரியமாய் "நான் கிறிஸ்துவை பின்பற்றுகிறதுபோல நீங்கள் என்னை பின்பற்றுகிறவர்களாயிருங்கள்" (1கொரி. 11:1) என்றார்.
பிரியமானவர்களே, நீங்களும் கூட சூழ்நிலைகளைக் கண்டு, எதிராய் உள்ள மனிதர்களைக் கண்டு, பயந்து கலங்கி செய்வதறியாமல் திகைத்து இருக்கிறீர்களா? உங்களைப் பார்த்து இன்று கர்த்தர் சொல்கிறார் திகையாதே நான் உன்னுடனே கூட இருக்கிறேன். எனவே நம் தேவன் சர்வ வல்லவர் அவரை உறுதியாய் பற்றிக் கொண்டால் திகைத்து நின்ற யோசுவாவை பயன்படுத்தின கர்த்தர் உங்களையும் பயன்படுத்துவார். சூழ்நிலையைக் கடந்து வர உதவி செய்வார். பவுலைப் போல "என்னைப் பின்பற்றுங்கள்" என்று சொல்லுமளவிற்கு உங்களை முன் மாதிரியாய் வாழச் செய்வார். "நான் உன்னுடனே இருக்கிறேன்" என்று சொன்ன கர்த்தரைப் பற்றி முன்னேறுங்கள். உயர்த்தப்படுவீர்கள்.
- Bro. சாமுவேல் மோரீஸ்
ஜெபக்குறிப்பு:
பணித்தளங்களில் நடைபெறும் வீட்டு ஜெபக்குழுக்களுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864