By Village Missionary Movement
Monday, 04-Sep-2023இன்றைய தியானம்(Tamil) 05.09.2023
ஜொலிக்கும் நட்சத்திரங்கள்
"ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்" - தானியேல் 12:3
இராஜா ஒருவர் தன் நாட்டின் தலைசிறந்த குடிமகனை கனம் பண்ண விரும்பினார். இதற்காக நடந்த தேர்வில் நான்கு பேரை தேர்வு செய்திருந்தனர். அந்த நால்வரில் ஒருவரை தேர்ந்தெடுப்பதற்காக இறுதி சுற்றுக்கு அனைவரையும் அழைத்து வந்திருந்தனர். அதில் ஒருவர் சிறந்த மருத்துவர் என்றும், இவரால் குணமடைந்தவர்கள் ஏராளம் என்றும் ஏழைகளுக்கு இலவச மருத்துவ உதவிகள் செய்தவர் என்றும் அறிமுகப்படுத்தப்பட்டார். இரண்டாமவர் சிறந்த சமூகப் பணியாளர் என்றும் இவரால் ஏராளமான கிராமங்கள், பட்டணங்களில் வாழ்ந்த ஏழைகளின் வாழ்க்கைத்தரம் உயர்ந்தது எனவும் கூறினர். மூன்றாம் நபர் மிகவும் நியாயமுள்ள, உண்மையான நல்ல தீர்ப்புகளை வழங்கிய நல்ல நீதிபதி எனவும் அறிமுகப்படுத்தப்பட்டார். முடிவில் மிகவும் எளிமையான தோற்றத்தில் வந்திருந்த ஒரு வயதான மூதாட்டியை அறிமுகப்படுத்தினார்கள். இத்தனை கனவான்களின் மத்தியில் இந்த அம்மாவை ஏன் அழைத்து வந்தார்கள் என அநேகரது நெற்றியும் சுருங்கியது. இந்த அம்மாதான் இம்மூவரின் ஆசிரியை. இவர்கள்தான் இம்மூவரையும் தலைசிறந்தவர்களாக உருவாக்க தன் வாழ்வை அர்ப்பணித்தவர்கள் என அறிமுகப்படுத்தியதும், கூட்டத்தில் பெரும் கரவொலி எழும்பியது.
இன்று ஆசிரியர் தினம்; சமுதாயத்தில் ஒரு தனிமனிதனை உருவாக்குவதில் ஆசிரியர்கள் பெரும்பங்கு வகிக்கிறார்கள். பெற்றோரை பிரிந்து வரும் சின்னஞ்சிறு மழலைகள் முதல் கட்டிளங்காளைகள், யுவதிகள்வரை உள்ள மாணவச்செல்வங்களை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு மிக மிக முக்கியமானதாக உள்ளது.
எனக்கன்பான ஆசிரியப்பெருந்தகைகளே! பள்ளி ஆசிரியர்களாகவோ அல்லது கல்லூரி பேராசிரியர்களாகவோ நீங்கள் இருக்கலாம். உப்பாக, ஒளியாக திகழும் நீங்கள் அநேக மாணவச்செல்வங்களை அழகாக செதுக்கும் சிற்பிகள் என்பதை மறந்து போகவேண்டாம். நீங்கள் தினந்தோறும் நுழைவது வகுப்பறைக்குள் மட்டுமல்ல; உங்கள் மாணவர்களின் வாழ்க்கைக்குள்ளும்தான். மதிப்பெண்கள் மட்டுமே மாணவனின் வாழ்வை வளம்பெறச் செய்துவிடமுடியாது என்பதை தாங்கள் அறிவீர்கள். அவன் வாழும் முறைதான் அவன் யார் என்பதை பறைசாற்றும்.
நீங்கள் மாணவர்களின் கல்விக்கண்களை மாத்திரம் திறந்துவிடாமல் அவர்களின் மனக்கண்களையும் திறக்க சிறுசிறு பிரயாசம் எடுப்பீர்களானால், நிச்சயம் பரலோகம் மகிழும். இதைச்செய்ய நிச்சயம் உங்களால் முடியும். எனவே உங்களிடமுள்ள மாணவ மணிகளை "மாண்புமிகு மா மனிதர்களாக" உருவாக்க இன்னொருவிசை உங்களைத் தேவனிடம் அர்ப்பணித்து செயல்படுங்கள். தேவன் உங்கள் திறமைகளையும், கற்பிக்கும் திறனையும் அதிகரிக்கச் செய்து, ஆசீர்வதித்து உங்கள் மாணவர்களை மண்ணிலே பட்டை தீட்டிய வைரங்களாகவும் , விண்ணிலே ஜொலிக்கும் நட்சத்திரங்களாகவும் உருவாக்க ஆண்டவர் உங்களுக்கு அருள்புரிவாராக.
- Mrs. சரோஜா மோகன்தாஸ்
ஜெபக்குறிப்பு
தெபொராள் குழுக்களில் இணைந்து செயல்படும் ஊழியர்களை தேவன் வல்லமையாய் பயன்படுத்த ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864