By Village Missionary Movement
Monday, 21-Aug-2023இன்றைய தியானம்(Tamil) 22.08.2023
அறிவிக்கும் முன் . . .
"கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்" - சங். 126:5
பில்லிசண்டே என்ற தேவமனிதர் தன் பிரசங்கத்தில் கீழ்கண்ட சம்பவத்தை அடிக்கடி கூறுவதுண்டு. அவிசுவாசியான கொல்லன் ஒருவனிருந்தான். அவன் "எந்த ஒரு கிறிஸ்தவனும் என்னிடத்தில் வந்து கிறிஸ்தவத்தைப் பற்றி பேச முடியாது, நான் அவர்களோடு தர்க்கித்து, அவர்கள் வாயை அடைத்து விடுவேன்" என்று சவால் விட்டு கூறினான். இதை அறிந்த அவ்வூர் சபையை சேர்ந்த வயது முதிர்ந்த மூப்பர் ஒருவர், இந்த மனிதனை இயேசு எப்படியேனும் சந்திக்க வேண்டுமென்று நினைத்து தன்னுடைய மனைவியோடு சேர்ந்து அவருக்காக ஜெபிக்க ஆரம்பித்தார்.
ஒருநாள் மூப்பர் அந்த மனிதனைச் சந்தித்து, "நண்பனே நானும் என் மனைவியும் உனக்காக ஜெபித்து வருகிறோம்" என்று சொல்லும்போதே மூப்பரின் கண்கள் கண்ணீரால் நிறைந்தன. அதற்கு மேல் அவரால் எதுவும் பேசமுடியவில்லை. தன் வீட்டிற்கு திரும்பி வந்து விட்டார். மனைவியிடம் இதைச் சொன்னபோது, "நீங்கள் விட்ட கண்ணீரைக் கொண்டு கர்த்தர் அவரில் செயல்படுவார்" என்று கூறினார்கள். சொன்னது போலவே, இந்த மூப்பரின் வார்த்தைகளும், கண்ணீர் நிறைந்த கண்களும் கொல்லனுடைய இருதயத்தை அசைத்தது. மீண்டும் மீண்டும் மூப்பரின் தோற்றம் கண் முன் தோன்றவே, கொல்லன் அவரது வீட்டிற்கு சென்று தன்னிடம் ஏற்பட்ட மாற்றத்தைச் சொல்லி, அவர் முன்பாக தன்னைத் தாழ்த்தி முழங்கால்படியிட்டான். அன்றே தேவனுடைய பிள்ளையாக மாறினான்.
நாமும் நம்மை சுற்றியுள்ள ஜனங்களுக்கு, ஆண்டவரைப் பற்றிக்கூற வேண்டுமென்று விரும்புகிறோம். வாய்ப்பைத் தேடுகிறோம். அதே வேளையில் அந்த ஆத்துமாவைக் குறித்து இருதயத்தில் பாரத்தோடும், கண்ணீரோடும் நாம் ஜெபிக்கத் தவறுவோமானால், அவர்களுடைய வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படாது. நம்முடைய மற்ற முயற்சிகள் யாவும் பயனற்றதாகிவிடும். ஏனெனில் பரிசுத்த ஆவியானவர்தான் பாவியாகிய ஒருவனின் பாவங்களைக் குறித்து உணர்த்துவார். ஆகவே நாம் சொல்லுகிற சுவிசேஷத்தின் மூலம் பரிசுத்த ஆவியானவர் அவனுடைய இருதயத்தில் செயல்பட நாம் கண்ணீரோடு ஜெபிக்க வேண்டும்.
சபைகளுக்காகவும், தனிமனிதனின் இரட்சிப்பிற்காகவும் பவுல் கண்ணீரோடு ஜெபித்தார். நாமும் சுவிசேஷம் அறிவிக்க விரும்பும் நபருக்காக பாரத்தோடு ஜெபிப்போம். அப்போது தேவன் நிச்சயம் வாய்ப்புகள் ஏற்படுத்தித் தந்து அவரது இருதயத்தை நற்செய்திக்கு நேராய் திருப்புவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
- Mrs. சசிகலா பரமசிவம்
ஜெபக்குறிப்பு:
நமது வட இந்திய மாநில ஊழியங்களுக்காக மற்றும் அங்கு பணி செய்யும் ஊழியர்களுக்காக ஜெபிப்போம்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864