By Village Missionary Movement
Saturday, 20-Mar-2021இன்றைய தியானம்(Tamil) 20-03-2021
மகிழ்ச்சியுண்டாக்கும் வார்த்தை
“மனுஷனுக்குத் தன் வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்;…” – நீதி. 15:23
இரவு நேரத்தில் அம்மா, அம்மா என்ற முனகல் சத்தம். தாய் சிறிய விளக்கு வெளிச்சத்தில் மகனை உற்று நோக்கி அமர்ந்திருந்தார்கள். அந்த சிறுவன் தன் தாயிடம், “என்னால் மூச்சு விடவே முடியவில்லை நான் செத்துப் போய் விடுவேனா?” என்று கேட்டான். அவனது தாய் அவனை அணைத்துக் கொண்டு “இல்லை மகனே....உனக்கு ஒன்றும் செய்யாது. நீ என் வயிற்றில் இருக்கும்பொழுதே நான் உன்னை ஆண்டவருடைய திருப்பணிக்கென்று அவர் கைகளில் சமர்ப்பித்து விட்டேன். நீ வளர்ந்து ஆண்டவருக்கு சேவை செய்யுமட்டும் வாழ்ந்திருப்பாய். உனக்கு ஒன்றும் செய்யாது. நீ தேவனிடம் அர்ப்பணிக்கப்பட்டவன். தேவன் உன்னை பார்த்துக் கொள்வார்” என்றார்கள். இந்த ஆறுதலான வார்த்தைகள் சிறுவனின் பயத்தை நீக்கி, தைரியத்தை தந்தது. அன்னையின் அணைப்பில் அயர்ந்து தூங்கி சுகத்தோடு எழும்பினான்.
வேதத்திலே பெரிய செல்வந்தனான நாபால் தன் ஆடுகளுக்கு மயிர் கத்திரிக்கும் விழாவை தன் ஊழியர்களோடு விருந்துண்டு கொண்டாடிக் கொண்டிருந்தார். இந்த சமயத்தில் தாவீது தன் நண்பர்களுக்கு உணவு தரும்படி கேட்க ஆட்களை அனுப்பினார். ஆனால் நாபால் என் வேலைக்காரர்களுக்கு பண்ணுவித்ததை, ஊர் தெரியாத மனுஷருக்குக் கொடுப்பேனோ என்று சொல்லி வெறுமையாய் அனுப்பினான். ஆனால் தாவீதும், அவன் நண்பர்களும், நாபாலின் மேய்ப்பர்கள் ஆடு மேய்க்கும்போது வனாந்தரத்தில் பாதுகாவலாக இருந்தனர். ஆயினும் நாபால் பேசின வார்த்தைகள் கடினமாயிருந்ததை கேட்ட தாவீது கோபமடைந்தார். நாபாலுக்குரிய எல்லாவற்றையும் அழிக்க வேண்டுமென புயலாய் கிளம்பினார். செய்தி அறிந்த நாபாலின் மனைவி அபிகாயில் தேவையான உணவு பொருட்களோடு தாவீதை பார்க்கச் சென்று தாவீதிடம் தன் கணவரின் குற்றத்தை ஏற்றுக்கொண்டு, “நீர் ராஜாவாகப் போகிறவர், உம் கையில் இரத்தக்கறை படிய வேண்டுமோ?” எனக் கேட்டாள். தாவீதிடம் மன்னிப்பும் கேட்கிறாள். தாவீது அபிகாயிலின் வார்த்தையினால் மனம் மாற்றப்படுகிறான். புயலாக கிளம்பிய தாவீது அபிகாயிலின் தாழ்மையுள்ள தயைபொருந்திய வார்த்தையால் அமர்ந்த தண்ணீராகத் திரும்பச் சென்றார்.
அன்பானவர்களே! உங்களுடைய பேச்சு எவ்வாறு உள்ளது என சிந்தியுங்கள். வர இருக்கும் பெரிய அழிவை தடுத்து மகிழ்ச்சியை உண்டாக்கும் அபிகாயிலின் வார்த்தைகளாக உள்ளதா? அல்லது சீறியெழும்பிய நாபாலின் வார்த்தை போல் உள்ளதா? சிந்தியுங்கள் நாம் பேசும் வார்த்தைகள் கிருபை பொருந்தினதாய், காயம் கட்டுவதாய், ஆறுதலாய் இருக்கட்டும். அப்படிப்பட்ட வார்த்தைகளைப் பேச இன்று தீர்மானிப்போமா! தேவன் தாமே அப்படிப்பட்ட வார்த்தைகளை இன்று நம் வாயில் வைப்பாராக ஆமென்!
- Mrs. அன்பு ஜோதி ஸ்டாலின்
ஜெபக்குறிப்பு:
மோட்சப் பயணம் தின தியான இதழை அச்சடிப்பதற்கான தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250