By Village Missionary Movement
Wednesday, 09-Aug-2023இன்றைய தியானம்(Tamil) 10.08.2023
ஜார்க்கண்ட்
"மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும்" - யோவான் 12:25
பீகார் மாநிலத்திலிருந்து பிரிந்து புதிதாக உருவாக்கப்பட்ட மாநிலம் தான் ஜார்க்கண்ட் ஆகும். "மிஷனெரிகளின் கல்லறை" என்று அழைக்கப்படும் பீகாரைப் போன்று ஜார்க்கண்ட்டும் சுவிசேஷத்திற்கு கடும் சவாலாக காணப்பட்டது. ஜார்க்கண்ட் மக்கள் மத்தியில் எதிர்ப்பு என்பதை விட, அங்குள்ள ஆரோக்கியமற்ற சூழ்நிலைகளால் சுவிசேஷத்திற்காக செல்லும் ஒவ்வொரு மிஷனெரிகளும் வியாதிப்பட்டு மரித்தது பெரிய சவாலாயிருந்தது. ஒரு கட்டத்தில் ஜார்க்கண்ட் ஊழியம் என்றாலே ஊழியத்திற்கு செல்ல யாரும் முன்வராமல் ஒதுங்க ஆரம்பித்தார்கள். இந்த மாநிலத்தில் மால்டோ எனும் பழங்குடியின மக்கள் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் காணப்பட்டனர்.
தமிழ்நாட்டின் கடைகோடி மாவட்டத்தில் நடைபெற்ற மாலை நேர கூட்டமொன்றில் ஒருவர் இயேசுவை ஏற்றுக் கொண்டார். இயேசுவை ஏற்றுக் கொண்ட அந்த நபர் மிஷனெரி ஊழியத்திற்கு தன்னை அர்ப்பணித்தார். முதலாவது தர்மபுரி மாவட்டத்தில் சில வருடங்கள் மிஷனெரி பணியை செய்தார். பின்பு ஜார்க்கண்ட் மாநிலம் மால்டோ இன மக்களை குறித்து கேள்விப்பட்டு, ஆத்தும பாரம் கொண்டவராக அங்கு செல்ல தனது விருப்பத்தை தனது ஊழிய ஸ்தாபனத்தில் தெரிவித்தார். பல போராட்டங்கள் மத்தியில் அவர் மனைவி, பிள்ளைகளோடு குடும்பமாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஊழியத்தை செய்ய ஆரம்பித்தார். எந்த மக்களை நேசித்து ஊழியத்திற்கு சென்றாரோ அங்கு அவர் எதிர்பார்த்தபடி மிஷனெரி பணியில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை. மேலும் இவருடைய மிஷனெரி பணிக்கு எதிர்ப்புகள் கிளம்பி, எதிர்ப்பாளர்கள் இவரை குற்றுயிராய் போட்டு விட்டார்கள். ஆனாலும் மனம் தளராத அவர் தொடர்ந்து மிஷனெரி பணியை செய்து வந்தார். ஒரு கட்டத்தில் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அதில் சுகம் பெறாமலே அவரும் அவருடைய மகனும் அதே மால்டோ மக்கள் மத்தியில் கோதுமை மணியாய் மரித்துப் போனார்கள்.
இவருடைய அடக்க ஆராதனையில் இவர் அலைந்து திரிந்து ஊழியம் செய்த மலைவாழ் கிராம மக்களில் அநேகர் இயேசுவானவர் கண்ணீர் வடிக்கிறவராக நிற்பதை தரிசனத்தில் பார்த்திருக்கிறார்கள். இந்த மிஷனெரியின் பெயர் ஜெயராஜ். இவர் மூலம் மால்டோ மக்கள் மத்தியில் எழுப்பப்பட்ட ஆலயங்கள் 116 ஆகும். மால்டோ இன மக்கள் மத்தியில் பெரிய அளவில் அறுவடை காணப்பட, ஜெயராஜ் எனும் மிஷனெரி தன்னை கோதுமை மணியாக நிலத்தில் விதைத்திருக்கிறார். இவரைத் தொடர்ந்து ஸ்டான் அவெளரி என்ற மிஷனெரியும் இந்த மக்கள் மத்தியில் குழுவாக ஊழியம் செய்து அனேக சபைகளை கட்டி எழுப்பினார். கிறிஸ்தவர்களே இல்லாத ஒரு மாநிலத்தில் இன்றைக்கு எட்டு சதவீத அளவில் கிறிஸ்தவர்கள் காணப்படுவதற்குக் காரணராகத் தங்களையே தியாகமாய் ஒப்புக்கொடுத்த மிஷனெரிகளுக்காக நாம் தேவனைத் துதிப்போம். அறியப்படாத இடங்களுக்கு இயேசுவை அறிவிக்க அடுத்த தலைமுறையினரை உற்சாகப்படுத்துவோம்.
- Mrs. ஜேக்கப் சங்கர்
ஜெபக்குறிப்பு:
திருநெல்வேலி எழுப்புதல் வாலிபர் முகாமில் மைதானத்தில் மேடை மற்றும் ஒளி, ஒலி அமைப்புகள் நேர்த்தியாய் காணப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864