By Village Missionary Movement
Monday, 24-Jul-2023இன்றைய தியானம்(Tamil) 25-07.2023
வாய்மொழி
"மனுஷனுக்குத் தன் வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!." - நீதிமொழிகள் 15:23
பழைய ஏற்பாட்டில் மொர்தெகாய் எஸ்தரிடம், "நீ இந்தக் காலத்தில் மௌனமாயிருந்தால் யூதருக்கு இரட்சிப்பு வேறொரு இடத்திலிருந்து எழும்பும். நீ இப்படிப்பட்ட காலத்திற்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே. யாருக்குத் தெரியும்?" என்று சொன்ன வார்த்தைகள் எஸ்தரை உபவாசிக்கச் செய்து, சட்டத்தை மீறி ராஜாவிடத்தில் பிரவேசிக்கும் தைரியம் கொடுத்தது. அதன்மூலம் யூதகுலம் அழிவினின்று தப்பியது.
நேபுகாத்நேச்சார் உண்டாக்கிய பொற்சிலையை வணங்க மறுத்ததால் அக்கினிச் சூளையில் போடப்படும் தண்டனை பெற்ற சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் ராஜாவிடம், "நாங்கள் ஆராதிக்கும் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லமையுள்ளவராக இருக்கிறார்" என்ற வார்த்தைகளின்படியே தேவன் அவர்களைத் தப்புவித்தார். ராஜா மெய்தேவனை மகிமைப்படுத்தினார். அந்த மூன்று பேரும் தேசத்தில் உயர்த்தப்பட்டனர்.
புதிய ஏற்பாட்டில் ஒரு கானானிய ஸ்திரீ இயேசுவிடம் தன் மகளைப் பிசாசின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டியபோது, இயேசு தான் இஸ்ரவேல் வீட்டாரிடமே அனுப்பப்பட்டதாகவும், ஆகவே பிள்ளைகளின் அப்பத்தை நாய்குட்டிகளுக்குப் போடுவது நல்லதல்ல என்றும் கூறிவிட்டார். ஆனால் அந்தப் பெண், "நாய்க்குட்டிகள் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே" என்று கூறிய வார்த்தைகள், இயேசுவே அவள் விசுவாசத்தைப் பாராட்டும்படி செய்து, அவள் மகளுக்கு விடுதலையையும் கிடைக்கச் செய்தது.
இயேசு சிலுவையில் தொங்கியபோது, ஒரு கள்ளன், "ஆண்டவரே நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்" என்று ஏற்ற நேரத்தில் பேசிய வார்த்தைகள் அவனுக்குப் பரதீசையும், நித்திய மகிழ்ச்சியையும் பெற்றுத் தந்தன.
பிரியமானவர்களே! மேற்கண்ட வேத ஆதாரங்கள் மனிதனுக்கு அவன் வாய்மொழியால் மகிழ்ச்சி உண்டாவதையும் ஏற்ற காலத்தில் பேசப்பட்ட வார்த்தைகள் எவ்வளவு நல்லது என்பதையும் காட்டுகின்றன. இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும். நம் இருதயம் வேத வசனங்களால் நிரப்பப்படும்போது, வார்த்தையாகிய தேவன் நம் இருதயங்களில் ஆவியானவராக நிறைந்திருப்பார். அப்பொழுது பேசுவது நாம் அல்ல, ஆவியானவரே பேசுவார். நாம் தேவனிடமும், மனிதரிடமும் பேசும் வாய் மொழியால் நமக்கு மகிழ்ச்சி உண்டாகும். ஏற்ற காலத்தில் நாம் பேசும் வார்த்தைகள் நமக்கு மிகுந்த நன்மையைக் கொண்டுவரும்!
- Mrs. கீதா ரிச்சர்ட்
ஜெபக்குறிப்பு
ஆந்திராவில் கட்டப்பட்டு வரும் ஆலய கட்டுமானப் பணிக்காக ஜெபியுங்கள்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864