By Village Missionary Movement
Monday, 26-Jun-2023இன்றைய தியானம்(Tamil) 26-06.2023
கவலை வேண்டாம்
"...நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்;... அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும்" - மத்தேயு 6:34
பொதுவாகவே நாம் நமது அன்றாட வாழ்வில் சிறிய காரியங்களுக்காகக் கூட கவலைப்பட்டு கலங்கிப் போகிறோம். அன்றாட வேலைகளின் மத்தியில் மனதில் கவலையான எண்ணங்கள் ஓடிக்கொண்டிருப்பதால் எப்போதும் துக்கமுகத்தோடு காணப்படுகிறோம். இப்படி கவலைப்பட எந்த சிறுசிறு பிரச்சனைகளும் இல்லாவிட்டாலும் நாளைய தினத்தை குறித்து கவலைப்படுகிறோம். என் பிள்ளைக்கு வேலை கிடைக்குமா? நாங்கள் விரும்புகிறபடி மாப்பிள்ளை கிடைக்குமா? எனக்கு வயதானால் யார் வீட்டுக்குச் செல்வேன்? ஒருவேளை நான் படுத்த படுக்கையாகிவிட்டால் யார் என்னை கவனிப்பார்கள்? இப்படியெல்லாம் நடக்காததை குறித்து விதவிதமாக கவலைப்படுகிறோம். ஏதாவதொன்றைக் குறித்து கவலைப்படாமல் சும்மா நம்மால் இருக்க முடிவதில்லை. உண்மையைச் சொல்லப்போனால் கவலையும் மனிதனும் பிரிக்க முடியாத ஒன்றாகிவிட்டது.
ஆனால் விசுவாச வீரரான ஜார்ஜ் முல்லர், மனிதன் இரண்டு காரியங்களுக்காக மாத்திரம் தான் கவலைப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார். ஒன்று நான் இரட்சிக்கப்படவில்லையே என்று கவலைப்பட வேண்டும். மற்றொன்று நான் இன்னும் சாத்தானுடைய பிடியிலிருந்து கொண்டு பாவத்திலேயே வாழ்கிறேனே என்று கவலைப்பட வேண்டும். இந்த இரண்டு காரியங்களையும் தவிர மனிதன் எதற்கும் கவலைப்பட தேவையில்லை என்கிறார். அவர் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும்போது என்னுடைய வாழ்க்கையில் கடந்த 70 ஆண்டுகளாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட சந்தர்ப்பங்களில் இரண்டாயிரம் பிள்ளைகள் அடங்கிய என்னுடைய அனாதை இல்லங்களை நடத்துவதற்கு எல்லா காரியங்களிலும் தேவனை மட்டுமே நோக்கி பார்த்தேன். எதை குறித்தும் கவலைப்பட்டதில்லை. நான் எதிர்பார்த்ததற்கும் மேலாக தேவன் எனக்கு உதவி செய்திருக்கிறார். ஒரு சிறுபிள்ளை தன் பெற்றோர் மீது எப்படிப்பட்ட விசுவாசம் வைத்திருக்கிறதோ அதைப்போன்ற விசுவாசத்தோடு உங்கள் எல்லா கவலைகளையும், பாரங்களையும் அவர் மீது வைத்து விடுங்கள். "ஆண்டவரே, என் பிரச்சனைகளை மாற்ற நீர் வல்லவர் என்பதை விசுவாசிக்கிறேன்" என்று இருதயத்தில் சொல்லுங்கள். என் வெற்றியுள்ள, கவலையற்ற, விசுவாச வாழ்க்கைக்கு இதுவே ரகசியம் என்று சொல்கிறார்.
ஆம், பிரியமானவர்களே! நம்மை விசாரிக்க ஒரு தேவன் உண்டு. அவரிடம் நம் கவலைகள் அனைத்தையும் வைத்துவிட பழகிக் கொள்வோம். நாளைய தினம் திரையினால் மூடப்பட்டுள்ளது. அதில் இப்படி நடந்து விடுமோ, அப்படி நடந்து விடுமோ என எண்ணி திரையை விலக்கிப் பார்ப்பது நமக்கு உரியது அல்ல, நாளைய தினம் தேவனுடையது. அவரே சகலத்தையும் நேர்த்தியாய் செய்திடுவார். இன்றைய பிரச்சனை சிறியதோ பெரியதோ அதையும் தேவனிடம் விசுவாசமாய் சொல்லுவோம் தேவ சமாதானம் உள்ளத்தை நிரப்புவதை காணலாம்.
- Mrs. ஜீவா விஜயகுமார்
ஜெபக்குறிப்பு:
24 மணிநேர சங்கிலித்தொடர் ஜெபம் எல்லா பணித்தளங்களிலும் தொடர்ந்து தடையின்றி நடைபெற ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864