By Village Missionary Movement
Thursday, 22-Jun-2023இன்றைய தியானம்(Tamil) 23-06.2023
கனி கொடுக்கும் ஜீவியம்
"…மரமானது அதின் கனியினால் அறியப்படும்" - மத்தேயு 12:33
இயேசுகிறிஸ்து பெத்தானியாவிலே தனது ஊழியத்தை முடித்துவிட்டு திரும்புகையில் அவருக்கு பசி உண்டாயிற்று. ஆகவே தூரத்திலே செழிப்பாகத் தெரியும் ஒரு அத்திமரத்தைக் காண்கிறார். அதன் கனிகளை புசித்து பசியாற்றிக் கொள்ளலாம் என விரைந்து அருகில் வருகிறார். அந்நாட்கள் அத்திப்பழ காலமாயிராதபடியினால், இலைகளின்றி பழம் ஏதுமில்லை. கனியற்ற அதனைப் பார்த்து இயேசு சபிக்கிறார். இது நியாயமா? என்று நம் உள்ளத்தில் ஒரு கேள்வி எழும்பலாம். அத்திப்பழ சீசன் இல்லாதபோது கனிகொடாதது அத்திமரத்தின் தவறா? என நாம் யோசிக்கலாம். இயேசு அத்திமரத்தை சபித்ததற்கு பல காரணங்கள் இருந்திருக்கலாம். ஆனால் இச்சம்பவம் வேதத்தில் இடம் பெற்றுள்ளதற்கு ஒரு காரணம் உண்டு. இதன்மூலம் நம்மை எச்சரிக்கவே.
வசந்தகாலம் தான் அத்திமரம் கனிகொடுக்க ஏற்றகாலம். வசந்தகாலம் அல்லாத மற்ற நாட்கள் அத்திமரம் கனி கொடுக்க அனுகூலமற்ற நாட்கள். இவ்வுவமையை அப்படியே நம்முடைய நடைமுறை வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்ப்போம். வசந்தகாலம் என்பது நம் வாழ்க்கையின் சூழ்நிலைகள் அனைத்தும் சாதகமாக இருந்து, நாம் குறைவின்றி மகிழ்ச்சியோடு வாழும் காலம். இப்படிப்பட்ட காலத்திலே நாம் தேவனை மகிழ்வோடு துதிப்போம். ஏழைகளுக்கு இரங்குவோம். பிறருக்கு அன்பு, சந்தோஷம், சமாதானம், தயவு, நற்குணம் போன்ற கனிகளை கொடுக்கும் காலமாய் நமக்கு இருக்கிறது. ஆனால் நமது வாழ்க்கையின் சூழ்நிலைகள் சாதகமற்று இருக்கும்போது, அதாவது போராட்டம், குறைச்சல்கள், நிம்மதியின்மை, விசுவாசம் குறையும் நேரம், வீணான குற்றச்சாட்டுகள் சூழும் நாட்கள் போன்றவை வசந்தகாலம் அற்ற நாட்கள். இப்படிப்பட்ட காலத்தில் நமது செயல் எப்படி காணப்படுகிறது? தவறான குற்றச்சாட்டுகளிலும் நாம் பொறுமை, சாந்தம் என்னும் கனியை கொடுக்கிறோமா? எல்லாம் எதிராக இருக்கும் போதும் தேவனை நம்பி சமாதானமாக இருக்கிறோமா? நமக்கு நாமே இக்கேள்விகளை கேட்போமென்றால் பதில் " இல்லை" என்றே இருக்கும்.
தேவனின் எதிர்பார்ப்பு என்ன? வாழ்வின் சாதகமான சூழ்நிலையில் மட்டுமல்லாமல் பாதகமான சூழ்நிலையிலும் கனி கொடுக்க வேண்டுமென்பதே. நண்பர்களே! தேவனை நம்பி அவரோடு அடி எடுத்து வைத்துச் செல்லும் நம்மை சோதனைகள் கனியற்றவர்களாக மாற்றிவிட நாம் இடம் கொடுக்கக் கூடாது. நம்மிடம் பொருள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் "நாம் தேவனுடைய பிள்ளை" என்னும் சாயலை எந்த சூழ்நிலையிலும் இழந்துவிடக்கூடாது. ஜெபித்து முயற்சிப்போம். தேவன் கைகொடுத்து உதவுவார்.
- K. காந்தி ராஜன்
ஜெபக்குறிப்பு:
Peace centre திட்டத்திற்காக ஜெபியுங்கள்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864