By Village Missionary Movement
Monday, 12-Jun-2023இன்றைய தியானம்(Tamil) 13-06.2023
காத்திருத்தல்
"நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம் போல் இருக்கும்" - நீதி 13:12
"காத்திருத்தல்" என்பது நமக்குப் பிடிக்காத செயலாகும். சில ஆசீர்வாதங்களுக்காக நாம் வெகு நாட்களாய் ஜெபித்துக் கொண்டிருந்தும் அது நமக்குக் கிடைக்கா விட்டால் மனவருத்தம் ஏற்படுகிறது. பின்பு அதற்காக ஜெபிப்பதைக் கூட விட்டு விடுகிறோம். வேலைக்காக, திருமணத்துக்காக, வீடு கட்ட, குழந்தைச் செல்வத்துக்காக என்று பல காரியங்களுக்காகக் காத்திருக்கும் போது சோர்வு ஏற்படுகிறது. ஆனால் இயேசுவை அறிந்த நாம் எதற்கும் சோர்வடைய வேண்டிய அவசியம் இல்லை. வேதத்திலே அதிக நாட்கள் காத்திருந்தவர்கள் அதிக ஆசீர்வாதங்களைப் பெற்றார்கள் என்று காணலாம்.
அன்னாள் குழந்தையில்லாமல் மலடியாய் இருந்தாள். கணவன் அவளிடத்தில் அன்பாயிருந்தாலும் அவனுயை இன்னொரு மனைவியான பெனின்னாள் தன் வார்த்தைகளினாலும், தன் செய்கைகளினாலும் அன்னாளைக் காயப்படுத்திக் கொண்டே இருந்தாள். அவள்தன் இருதயத்தின் சஞ்சலத்தை எல்லாம் ஆண்டவரிடம் ஊற்றி, பொருத்தனை பண்ணி, ஜெபம் பண்ணினாள். அவளுக்கு இரங்கிய ஆண்டவர் அவளுக்கு அருமையான குமாரனாகிய சாமுவேலைக் கொடுத்தார். அவர் இஸ்ரவேல் தேசத்தாருக்கு தீர்க்கதரிசியாய், ராஜாக்களை அபிஷேகம் பண்ணுகிறவராய், ஜனங்களை நியாயம் விசாரிக்கிறவராய் இருந்தார்.
ரெபேக்காளும் 20 வருடங்களாய் மலடியாய் இருந்தாள். நீண்ட காத்திருப்பின் ஆண்டுகளுக்குப் பின் அவளுக்கு தேவன் ஏசா, யாக்கோபு என்ற இரட்டைப் பிள்ளைகளைக் கொடுத்தார். இரண்டு பெரிய ஜாதி அவள் வயிற்றிலிருந்து தோன்றியது. அதிலும் யாக்கோபிலிருந்து யூதாவும், யூதா கோத்திரத்தில் இயேசு கிறிஸ்துவும் தோன்றினார்கள்.
அவ்வாறே அநேக வருடங்களாய் மலடியாயிருந்த மனோவாவின் மனைவியும், பலசாலியான சிம்சோனைப் பெற்றெடுத்தாள். அவன் இஸ்ரவேலரை பெலிஸ்தரின் கையிலிருந்து விடுவிக்கிறவனாயிருந்தார். புதிய ஏற்பாட்டிலும் சகரியா-எலிசபெத் தம்பதியினர் கிழவனாகும் வரை காத்திருந்து நம்பிக்கையற்றுப் போன சூழ்நிலையிலும், வயது முதிர்ந்த காலத்தில் கர்ப்பம் தரித்து யோவான்ஸ்நானகனைப் பெற்றெடுத்தார்கள். அவர் இயேசு கிறிஸ்துவுக்கு முன்னே வழியைச் செவ்வை பண்ணி, ஜனங்களை பரலோக ராஜ்யத்துக்கு நேராய் வழிநடத்தின தீர்க்கதரிசியாய் இருந்தார்.
நாமும் பல காரியங்களுக்காக வெறுமனே காத்திருந்து சோர்ந்து போகாமல், கர்த்தருக்காக பொறுமையுடன் காத்திருப்போம். ஏசாயா 40:31 என்ற வசனத்தின்படி கர்த்தர் நமக்குப் புதுப்பெலன் கொடுப்பார். நம் வாழ்க்கை ஓட்டத்தில் இளைப்படையாமல் ஓட பெலன் தருவார். விரும்புகிற காரியம் வாய்க்கும் போது ஜீவவிருட்சத்தைக் கண்டடைந்தது போல் மிகுந்த மகிழ்ச்சியையும், சமாதானத்தையும் கொண்டு வரும். கர்த்தர் தாமே, நம் காத்திருப்புகளை ஜீவவிருட்சமாய் மாற்றுவாராக.
- Mrs. புவனா தனபாலன்
ஜெபக்குறிப்பு
வடமாநில ஊழியங்களுக்காக அங்கு பணிபுரியும் மிஷனெரிகளுக்காக ஜெபியுங்கள் .
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864