By Village Missionary Movement
Thursday, 25-May-2023இன்றைய தியானம்(Tamil) 25-05.2023
உண்மையான ஆராதனை
“தேவனையே நோக்கி என் ஆத்துமா அமர்ந்திருக்கிறது" - சங்கீதம் 62:1
ஒருமுறை, புகழ்பெற்ற பிரசங்கியாகிய ஹென்றி வார்ட் பீச்சர் ஒரு பெரிய ஆலயத்தில் பிரசங்கிக்க அழைக்கப்பட்டிருந்தார், ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தினால் அங்கு செல்ல இயலாமல் போய்விட்டது. எனவே அவரது சகோதரன் அவ்விடத்திற்கு பிரசங்கிக்க சென்றார். அந்த ஆலயம் மக்களால் நிரம்பியிருந்தது. ஆனால் சிறந்த பேச்சுத் திறமையைக் கொண்டிருந்த ஹென்றி பீச்சர் அன்று பிரசங்கிக்கப் போவதில்லை என்பது உறுதியானவுடன், அநேகர் ஆலயத்தை விட்டு வெளியே செல்ல ஆரம்பித்தனர். பீச்சரின் சகோதரன் அதைக் குறித்து சோர்வடையவில்லை. முறுமுறுத்துக் கொண்டிருந்த அந்த கூட்டத்தாருக்கு முன்பாக எழுந்து நின்று "இன்று காலையில் ஹென்றி பீச்சரை ஆராதிப்பதற்காக வந்திருந்தவர்கள் அனைவரும் ஆலயத்தை விட்டு வெளியே செல்லுங்கள். மீதியாக இருப்பவர்கள் இங்கு அமர்ந்திருந்து தேவனை ஆராதியுங்கள்" என்று கூறினார்.
நம்முடைய ஆராதனைகளில் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? தேவன் எனக்கு அந்த ஊழியர் மூலம் என்ன பேச சித்தமாய் இருக்கிறார் என்று ஊழியரில் தேவனைக் காண்கிறோமா? ஊழியரின் பிரசங்கத்தை கவனித்து "சூப்பர், சுமார், நன்றாக இல்லை" என கருத்துக்கணிப்பு செய்கிறோமா? அல்லது புகழ்பெற்ற ஊழியர் மூலமே தேவன் நம்மோடு பேசுவார் என எண்ணுகிறோமா? இப்படிப்பட்ட சிந்தனையோடிருந்தால், நாம் ஆராதனை விட்டுச் செல்லும் போது பல குறைகளை கண்டுபிடித்தவர்களாகவே செல்லுவோம்.
எனக்கு நன்கு தெரிந்த ஒரு மூத்த தேவ ஊழியர் அதிகாரத்தோடும், எச்சரிப்போடும் பிரசங்கம் செய்ய கிருபை பெற்றவர். ஒருமுறை ஒரு கூட்டத்தில் பிரசங்கித்து முடித்தவுடன், ஒரு பெண்மணி அவரிடம் வந்து "ஐயா பிரசங்கம் ரொம்ப நல்லா இருந்தது" என்றார்கள். உடனே ஊழியர் கேட்டார். "கீழ்ப்படிந்தீர்களா?" என்று. ஆம், யார் பிரசங்கம் செய்கிறார்? எப்படி பிரசங்கம் செய்கிறார்? என்பதை விட கேட்ட சத்தியத்திற்கு கீழ்ப்படிகின்றோமா? என்பதே முக்கியம்.
பிரியமானவர்களே! நீங்கள் உண்மையாய் தேவனை ஆராதிக்க விரும்புகிறீர்களா? அப்படி என்றால் பாடல்களின் கருத்தை உணர்ந்து பாடுங்கள். வாசிக்கிற வேத பாடங்களின் மூலம் தேவன் என்னோடு இடைப்படுகிறார் என்பதை விசுவாசியுங்கள். அறிவிப்புகளை கவனமாய் கவனித்து அதில் சொல்லப்படும் அவ்வார நிகழ்வுகளுக்காகவும், திருமணத்தில் இணையும் தம்பதிகளுக்காகவும் தினந்தோறும் ஜெபியுங்கள். பிரசங்கத்தின் போது இந்த எச்சரிப்பு எனக்கல்ல பிறருக்குத் தான், ஏனென்றால் நான் அப்படி இல்லையே என சுயபெருமை கொள்ளாமல் தாழ்மையோடு வேத வசனத்திற்கு கீழ்ப்படியுங்கள். இப்படிப்பட்ட சிந்தையோடு ஆலயத்திற்கு வருபவர்களால் மட்டுமே, உண்மையான ஆராதனையின் விலைமதிப்பை அறிய முடியும்.
- Mrs. எபன் சந்தோஷ்
ஜெபக்குறிப்பு:
தோழமை ஊழியர்கள் ஒவ்வொருவருக்காகவும், அவர்கள் மூலமாய் சந்திக்கப்படும் நபர்களுக்காகவும் ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864