By Village Missionary Movement
Tuesday, 23-May-2023இன்றைய தியானம்(Tamil) 23-05.2023
பிள்ளைக்காக
"…எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்" - லூக்கா 23:28
ஜான் ஸ்கடர் அமெரிக்காவில் பிரபலமான டாக்டராக இருந்தவர். ஆனால் அவர் தனது வசதி வாய்ப்புகளை தியாகம் செய்து இந்தியாவிற்கு குடும்பத்தோடு வந்து மிஷனெரியாக பணியாற்றினார். அவர் மட்டுமல்ல, அவரது ஒன்பது பிள்ளைகளும் வட இந்தியாவில் மிஷனெரிகளாக ஊழியம் செய்தார்கள். ஏறக்குறைய 600 ஆண்டு காலம் ஸ்கடர் குடும்பத்தினர் ஒருவர் பின் ஒருவராக இந்தியாவில் ஊழியம் செய்து வந்துள்ளனர்.
ஒரு முறை ஸ்கடரிடம் அவரது நண்பர் கேட்டார், "உங்களது குடும்பத்தினரின் அர்ப்பணிப்புள்ள ஊழியத்தின் ரகசியம் என்ன?" என்றார். ஸ்கடர் சொன்ன பதில் என்ன தெரியுமா? "என் மனைவி ஒரு ஜெபிக்கும் தாயாராக இருந்தது தான். அவளது ஜெப வாழ்வின் மூலமாகவே பிள்ளைகள் இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்றனர். என் பிள்ளைகளின் ஒவ்வொரு பிறந்த நாளன்றும் அந்த முழு நாளையும் ஜெபத்தில் கழிப்பாள். அன்று விசேஷமாக அப்பிள்ளையின் இரட்சிப்பு, படிப்பு, உடல்நலம், எதிர்காலம் போன்ற அனைத்து காரியங்களுக்காகவும் ஜெபிப்பாள்" என்று கூறினார்.
தாய்மாரே! இப்படி ஒரு சாட்சி உங்களைக் குறித்து கூற முடியுமா? எத்தனையோ பரிசுத்தவான்களின் வாழ்க்கையின் திருப்புமுனைக்கு தாயாரே காரணமாக இருந்திருக்கிறார்கள். ஜான் வெஸ்ஸி, ஆபிரகாம் லிங்கன் போன்றோர் வெற்றியாளராக விளங்குவதற்கு காரணம் தேவபக்தி மிக்க அவர்களுடைய தாய்மார்களின் ஜெபமும், சாட்சியுள்ள வாழ்க்கையுமே காரணம். இன்று நாம் நம்முடைய பிள்ளைகளின் கீழ்ப்படியாமை, ஞானமின்மை, கெட்ட பழக்க வழக்கங்கள் இவைகள் மாற வேண்டும் என்று அனேக ஜெபக் குறிப்புகளை எழுதி ஊழியர்களுக்கு அனுப்பிவிட்டு, நாம் அயலகத்தாரோடும், உறவினர்களோடும் இந்தக் குறைகளைச் சொல்லி கண்ணீர் விட்டு அவர்களின் அனுதாபத்தை பெற வாஞ்சிக்கிறோமே தவிர தேவனிடம் அவர்களுக்காக மணிக்கணக்கில் ஜெபிக்கிறோமா? ஒரு நாளை ஒதுக்கி உபவாசம் இருந்து அவர்களுக்காக ஜெபிக்கிறோமா?
ஒரு தேவ மனிதர், "நான் சிறுபிள்ளையாய் இருந்தபோது எனது தாயார் ஒவ்வொரு நாளும் காலை 5 மணிக்கெல்லாம் எழுந்து என் சகோதர, சகோதரிகள் எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்கும் போது எங்கள் ஒவ்வொருவரின் அருகிலும் அமர்ந்து எங்கள் தலைகளில் கைகளை வைத்து ஜெபிப்பார்கள். அதன் விளைவாக இன்று நாங்கள் அனைவரும் கர்த்தருக்கு பயந்தவர்களாகவும், சமுதாயத்தில் உயர்ந்தும், கர்த்தருடைய ஊழியத்தை செய்கிறவர்களாகவும் இருக்கிறோம்" என்று சாட்சி பகர்ந்தார். ஆம், தாய்மார்களே உங்களின் பிள்ளைகளின் பழக்கவழக்கங்களுக்காக, படிப்பிற்காக, வேலைக்காக, திருமணத்திற்காக, ஏன் எந்த ஒரு சிறு காரியமாக இருந்தாலும் பரவாயில்லை. முதலாவது தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அவர் சகலத்தையும் மாற்ற வல்லவர்.
- Mrs.ஜெபா டேவிட்கணேசன்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864