By Village Missionary Movement
Monday, 08-May-2023இன்றைய தியானம்(Tamil) 08-05.2023
சோதனையோ!
“எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்” - மத்தேயு 6:13
இவ்வுலகில் வாழும் அனைவருக்குமே ஒவ்வொருவிதமான சோதனைகள் உண்டு. வேதத்திலே சோதனையைக் குறித்து பார்ப்போமென்றால், ஆபிரகாமின் விசுவாசம் சோதிக்கப்பட்டது. இயேசு கிறிஸ்து பிசாசினால் சோதிக்கப்பட்டார். யோபு பொன்னாக விளங்கும்படி சோதிக்கப்பட்டார். யோசேப்பிற்கு வந்ததோ பாவ சோதனை. இப்படி ஏதோ ஒரு காரியத்தின் மூலம் நாம் சோதிக்கப்படுகிறோம். இன்று யோசேப்பின் வாழ்வில் வந்த சோதனைகளையும், அதை வென்று அவன் செய்த சாதனைகளையும் குறித்துக் காண்போம்.
யோசேப்பு அழகு நிறைந்த வாலிபன். இவன் போத்திபாரின் வீட்டில் அடிமை, இருப்பினும் தேவனுக்கு சுதந்திரவாளி! எப்போதும் தேவன் அவனோடிருந்தார். அடிமையான யோசேப்பை தேசத்தின் ஆளுநராக மாற்ற தேவன் சித்தம் கொண்டார். பந்தயம் இல்லாமல் பதக்கம் பெற முடியுமா? இல்லையல்லவா? ஆகவே பரிசுத்தத்தின் மீது ஒரு சோதனையை நியமிக்கிறார். மிகக் கடினமான சோதனைதான். காரணம் ஒன்று எளிதில் ஆட்டங்காணும் வாலிபம், மற்றொன்று பெரிய இடத்திலிருந்து வரும் அழைப்பு. ஆனாலும் யோசேப்பு சோதனையில் ஜெயித்தான். காரணம் தேவனுக்கு பயந்த வாழ்க்கை, இருப்பினும் வீண் குற்றச்சாட்டுகள், சிறைவாசம், நம்பிக்கை துரோகம், ஆனால் முடிவோ தேசத்தை ஆளும் பொறுப்பு.
பிரியமான வாலிபர்களே! இந்த பாவ சோதனை தற்காப்பில்லாத சமயத்தில் தந்திரமாய் நுழையும் தன்மையுடையது. இதற்கு தாவீது அடிபணிந்து விட்டார். யோசேப்போ, உறுதியாய் நின்றான். முதலாவது இந்த சோதனைக்கு இடமளித்து விடுவோமானால், பாவத்திற்கு எதிர்த்து நிற்கிற வலிமையை இழந்து விடுவோம். ஒரு முறை ஒரு பாவத்தை செய்து விட்டால் அது மீண்டும் செய்வது எளிது. ஆகவே ஜாக்கிரதையாக நம்மை காத்துக் கொள்ளவேண்டும். சரி... இந்த பாவ சோதனைக்குத் தப்ப சில நடைமுறை ஆலோசனைகளைக் காண்போமா?
1. வேதத்தை நாடுங்கள்: மூடி வைக்கப்பட்டுள்ள வேதம் நம்மை எச்சரிப்பதில்லை. ஆகவே ஒவ்வொரு நாளும் வேதத்தைத் திறந்து வாசித்து எச்சரிப்பையும், புத்தி புகட்டுதலையும், ஊக்கத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள்.
2. தனிமையை தவிருங்கள்: தனியே செல்லும் ஆடு ஓநாய்க்கு இரையாகும். நெருப்புத் தழலிருந்து எடுக்கப்பட்ட கட்டை சீக்கிரமாய் அணைந்து போகும். ஆகவே தேவனோடும், சபை ஐக்கியத்தோடும் நல்ல நண்பர்களோடும் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்.
3. சோம்பேறித்தனத்தை உதறித் தள்ளுங்கள்: சோம்பேறியின் இதயம் பிசாசின் தொழிற்கூடம் என்றார் ஒருவர். ஆகவே தேவன் உங்களுக்குக் கொடுத்திருக்கிற உலகப் பணியை முழுபெலத்தோடு, ஆர்வமாய், சுறுசுறுப்பாய் செய்யுங்கள்.
ஆம், சிந்தையில் கட்டுப்பாடோடிருந்து தேவையற்ற எதிர்பாலின நெருக்கத்தைத் தவிர்த்து, பாவசோதனைகளை ஜெயித்து வாடாத ஜீவ கிரீடத்தைப் பெறுவோம்.
- Sis. ஷேல் கிறிஸ்டி
ஜெபக்குறிப்பு:
ஆமென் வில்லேஜ் டிவி தடையில்லாமல் எல்லா சேனல்களிலும் ஒளிபரப்பப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864