By Village Missionary Movement
Saturday, 06-May-2023இன்றைய தியானம்(Tamil) 06-05.2023
நொறுங்குண்ட இருதயம்
“நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்” - சங்கீதம் 46:10
நவீன காலத்து மிஷனெரிகளின் தந்தை என அழைக்கப்பட்ட வில்லியம் கேரியின் வாழ்வில் ஒருநாள் மதிய வேளையில் அவரது அச்சகத்திலும் சேமிப்பு அறையிலும் அக்கினி ஜூவாலை கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. அச்சு இயந்திரங்கள் அனைத்தும் எரிந்தன. எதிர்பாராத இந்த இழப்பினை அவரால் தாங்கிக் கொள்ள இயலாத ஒரு ஏமாற்றம். அவரது இருதயம் நொறுங்கிப் போனது. கேரி மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளர். முழு வேதத்தை 20 மொழிகளிலும், புதிய ஏற்பாட்டை 40 மொழிகளிலும் மொழி பெயர்க்கக் காரணமாயிருந்தார். வேதத்தின் சில பகுதிகளை 12க்கும் அதிகமான இந்திய மொழிகளில் மொழி பெயர்த்தார். இவ்வாறு, தான் மொழி பெயர்த்த அநேக முக்கிய எழுத்து சுருள்களை தன் சேமிப்பு அறையில் பத்திரப்படுத்தி வைத்திருந்தார். இது, ஒரு நாள் இரண்டு நாள் முயற்சியல்ல. பல ஆண்டுகள் இரவு பகலாய்க் கண்விழித்து செய்த கடினமான மற்றும் விடா முயற்சியின் பலன்கள். அன்று அவர் எழுதியதை சேமித்து வைக்க கம்ப்யூட்டர் வசதியோ, எழுத்துப் பணியை எளிதாக்க ஜெராக்ஸ் வசதியோ இல்லை. கட்டுக் கட்டாக எழுதி வரிசைப்படி அடுக்கி வைத்திருந்த எல்லா முக்கிய தாள்களும் அந்தோ இரண்டு மணி நேரத்திற்குள் சாம்பலாய் கிடந்தன. என்ன ஒரு இழப்பு! ஆனாலும் அவர் தேவசமூகத்தில் அமைதியோடு அமர்ந்திருந்து, மீண்டும் அனைத்து வேலைகளையும் செய்தார்.
சங்கீதம் 46:10 - ல் இப்படியாக வாசிக்கிறோம், "நீங்கள் அமர்ந்திருந்து நானே தேவனென்று அறிந்து கொள்ளுங்கள்" என்று. ஆம், கர்த்தருடைய சமூகத்தில் அமருகிறவர்களாக இருக்க வேண்டும். நாம் அவருடைய சமூகத்தில் அமர்ந்தால் மட்டுமே காரியத்தின் ஆழத்தை நாம் அறிய முடியும். அந்த சங்கீதத்தில் தொடர்ந்து நாம் வாசிக்கும் போது, இவ்வளவு பெரிதான இழப்புகள், பயங்கள், ஆபத்துக்கள் நம்மைச் சுற்றி நேரிட்டாலும், நாம் அவருடைய சமூகத்தில் அமரும்போது எல்லாவற்றையும் மேற்கொள்ளுவதற்கான இருதயத்தை அவர் நமக்குக் கொடுப்பார் என வசனம் உணர்த்துகிறது.
ஆம், பிரியமானவர்களே! நாம் முற்றிலும் சோர்ந்து விடாதபடி தேவனுடைய கரத்தில் காக்கப்பட்டு வருகிறோம். சகலத்தையும் ஆளுகை செய்யும் தேவனின் தெய்வீக தன்மையையும், ஞானத்தையும் நாம் சிந்தித்துப் பார்த்தால் தேவனிடமிருந்து ஆறுதலைப் பெறலாம். தேவன் நமக்குச் செய்யக்கூடிய எல்லாவிதமான காரியங்களையும் நாம் அமைதியுடன் ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாக இருக்க வேண்டும். நஷ்டத்தின் மத்தியிலும் தேவன் மீது நாம் அசையாத நம்பிக்கை வைப்போம். வில்லியம்கேரியின் மனநிலை நம்மையும் உற்சாகப்படுத்தட்டும். செழிப்பின் நேரத்தில் தேவனை மனதார துதிப்பது எளிது. ஆனால் தோல்வியில், நஷ்டத்தில், வியாதியில், கடனில் கண்ணீரில் அவர் மேல் நம்பிக்கை வைப்போம்!
- Mrs. சக்தி சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:
ஒரு கிராமத்தில் VVBS நடத்த தேவையான ரூ.5000 கொடுத்து உதவும் நபர்கள் எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864