By Village Missionary Movement
Saturday, 22-Apr-2023இன்றைய தியானம்(Tamil) 22-04.2023
இயேசுவின் கண்ணீர்
“அவர்… கண்ணீர் விட்டழுது, உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்தாயானால் நலமாயிருக்கும்...” - லூக்கா 19 :41- 42
இயேசுகிறிஸ்து எருசலேம் பண்டிகைக்காக கழுதைக் குட்டியாகிய மறியின் மேல் வருகிறார். அங்கு சீஷர்களும், திரளான ஜனங்களும் அவருடன் ஆர்ப்பரிப்புடன் வருகிறார்கள். “கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர்” என்று தேவனைப் புகழ்ந்தார்கள். அவர் எருசலேம் நகரை நெருங்கியவுடன் அந்த பட்டணத்திற்கு நேரிடப்போகிற காரியங்களைக் குறித்து அவர் அறிந்திருந்தபடியினால், நகரத்தைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதார்.
இயேசு கண்ணீர் விட்டழுதது இரு சமயங்களில், ஒன்று லாசரு மரித்த போது, மற்றொன்று எருசலேம் நகரத்தைப் பார்த்து! அவர் சிலுவையைச் சுமந்து சென்ற போது அவருக்குப் பின்னே அழுது கொண்டு சென்ற ஸ்திரீகளைப் பார்த்து “எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல் உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்”எனக் கூறினார். ஜனங்கள் இயேசுவின் பாடுகளை நினைத்து அழுதார்கள். இயேசுவோ எருசலேம் நகரத்துக்கும் ஜனங்கள் யாவருக்கும், தேவாலயத்துக்கும் நேரிடப்போகிற அழிவை எண்ணிக் கண்ணீர் விட்டார். சமாதானக் காரணராகிய தன்னை அறியாமல் அலட்சியம் செய்கிறார்களே என்று அவர்களுக்காக பரிதபிக்கிறார். அவர்களுக்காக மாத்திரமல்ல இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை, விலையேறப்பெற்ற இரட்சிப்பை, அசட்டை செய்யும் நம் ஒவ்வொருவருக்காகவும் கண்ணீர் வடிக்கிறார்.
இதனை வாசிக்கின்றதான அன்பு சகோதர சகோதரிகளே! அவர் உங்களுக்காகக் கண்ணீர் வடிக்கிறாரா? அல்லது உங்களைக் குறித்து மகிழ்ச்சி அடைகிறாரா? என்று உங்களை நீங்களே சோதித்துப் பாருங்கள். “உனக்குக் கிடைத்த இந்த நாளிலாவது, உன் சமாதானத்துக்கேற்றவைகளை நீ அறிந்து கொள்” என்றவரின் அன்பைப் பாருங்கள் அவர் சிலுவை சுமந்து, வாரால் அடிபட்டது, முள்முடியேற்றது, சிலுவையில் அறையப்பட்டது யாருக்காக? அவருக்காகவா? இல்லை, உனக்காக! அவர் கண்ணீரைத் துடைக்க நீ விரும்பினால் அவரை இரட்சகராக ஏற்றுக்கொள்! அப்பொழுது உன் சமாதானத்தைப் பெற்றுக்கொள்வாய்!, சிலுவையில் அறையப்பட்டவராக அல்ல, உயிர்த்தெழுந்த கிறிஸ்துவாய், பரலோக இராஜனாய் அவரைச் சந்திக்கப் போகும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. நாம் ஆயத்தமாவோம்! ஆமென்.
- Mrs. புவனா தனபாலன்
ஜெபக்குறிப்பு:
வாலிபர் முகாமில் செய்தியாளர்களை தேவன் வல்லமையாய் பயன்படுத்த ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864