By Village Missionary Movement
Wednesday, 19-Apr-2023இன்றைய தியானம்(Tamil) 20-04.2023
அற்பமாய் எண்ணாதிருங்கள்
“ஆனபடியினால் ஒருவனும் அவனை அற்பமாய் எண்ணாதிருப்பானாக:..” - 1 கொரி. 16:11
மிகவும் எழ்மையான குடும்பத்தில் பிறந்தாள் வசந்தா. தோற்றத்திலும் பேச்சுத்திறமையிலும் யாருடைய கவனத்தையும் ஈர்க்க இயலாதவள். உலகத்தாரால், ஏன் குடும்பத்தாரால் கூட அற்பமாய் எண்ணப்பட்டவள். ஆனால் ஆண்டவருடைய பார்வையில் விலையேறப் பெற்றவளாய், ரூபவதியாய் இருந்தாள். காரணம், கர்த்தருக்குப் பயப்படுவதிலும் வேத வசனங்களுக்குக் கீழ்ப்படிவதிலும் அவ்வளவு உண்மையாய் காணப்படுவாள். ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, அவளது அப்பாவித்தனத்தினிமித்தம் அனைவரின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானாள். அவர்கள் தங்கள் வேலையையும் அவ்வப்போது வசந்தாவின் தலையில் கட்டிவிடுவர், எதுவுமறியாத வெகுளியாக அதையும் முகமலர்வோடு செய்து முடிப்பாள். அவளுடைய திருமணக் காரியமும் ஒரு எட்டாக் கனியாகவே இருந்தது. இதினிமித்தம் வீட்டிலுள்ளவர்களுக்கு அவள் பாரமாகவே இருந்தாள். பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டாரும் அவளது வெளித்தோற்றத்தை வைத்து விலகிச் சென்றனர். ஆனால் தேவன் அவளுக்கு யாரும் எதிர்பாராத, பிரகாசமான வாழ்வைக் கொடுத்தார். அந்த மணமகன் கர்த்தருக்குப் பயப்படுகிறவராய், அவளது உள்ளான அழகில் பிரியப்படுகிறவராய், வெளித்தோற்றத்தையும் முழுமனதாய் ஏற்றுக்கொள்கிறவருமாய் அமைந்தார். இன்றும் அவர்கள் மனமகிழ்ச்சியோடு குடும்பமாய் வாழ்கிறார்கள்.
வேதத்தில் அற்பமாய் எண்ணப்பட்ட ஸ்திரீயைக் குறித்து நாம் அறிவோம். அவள் தான் லேயாள். யாக்கோபு லேயாளைப் பார்க்கிலும் ராகேலை மிகவும் அதிகமாய் நேசித்தார். லேயாள் அற்பமாய் எண்ணப்பட்டாள் என்று கர்த்தர் கண்டு, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார். (ஆதி. 29: 30- 31) ஆம், அற்பமாய் எண்ணப்பட்ட லேயாளைக் கர்த்தர் நினைவுகூர்ந்தார்.
இதை வாசிக்கின்ற பிரியமானவர்களே! மனிதர்களுடைய பார்வையில் நாம் அற்பமாய் எண்ணப்படலாம், மறக்கவும்படலாம். ஆனால் நம்முடைய தேவன் அப்படிப்பட்டவரல்ல இந்த உலகத்தாரின் பார்வையில் அற்பமாய் எண்ணப்படுபவர்கள் யாரோ, அவர்களைத் தூசியிலிருந்தும் குப்பையிலுமிருந்தும் எடுத்து அவர்களை உயர்த்துவது தேவனுடைய உன்னத திட்டமாகும். உலகம் ஞானமுள்ளவர்களையும், அழகானவர்களையும் தேர்ந்தெடுத்து பதவிகளையும், பொறுப்புகளையும் கொடுக்கிறது. இது உலகத்தின் தெரிந்தெடுப்பு. ஆனால் தேவன் அற்பமானவர்களையே தெரிந்தெடுப்பார். எனவே நாம் யாரையும் அற்பமாக நினைத்து விட வேண்டாம். சிறிய தீக்குச்சியின் வலிமை தான் பெரும் இருட்டையே மாற்றி விடுகிறது.
- Mrs. சக்தி சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மனமுவந்து இந்த எழுப்புதல் வாலிபர் முகாமிற்கு அனுப்பிவைக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864