By Village Missionary Movement
Saturday, 08-Apr-2023இன்றைய தியானம்(Tamil) 08-04.2023
கடைசியாக....
“…பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்;…” - லூக்கா 23:46
இயேசு சிலுவையில் மொழிந்த ஏழாம் வார்த்தை:
மரணத்தின் விளிம்பிலிருக்கும் ஒரு நபர் மரிப்பதற்கு முன்னால் அவர் வாயிலிருந்து ஏதாவதொரு வார்த்தை வருமா என்று ஆவலோடு அவரது தலைமாட்டில் குடும்பத்தார் காத்திருப்பர். அவர் கடைசியாக பேசிய வார்த்தையை முக்கிய வார்த்தையாக கருதுவர். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபோது பேசிய 7 வார்த்தைகளில் 7வது வார்த்தை, ”பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்” என்பதே. முதல் வார்த்தையிலும் பிதாவே என்று கூப்பிட்டு கடைசி வார்த்தையிலும் பிதாவே என்று கூப்பிட்டு ஜெபம் செய்கிறதை பார்க்கிறோம்.
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து பிதாவால் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டதற்கான ஒரே காரணம், மனுக்குலத்தின் பாவத்திற்காக தன்னை பலியாக ஒப்புக்கொடுக்கவே! பாவத்திலிருந்து மீட்க அவர் இவ்வுலகில் மனிதனாய் 33½ ஆண்டுகள் சற்றேனும் ஓய்வெடுக்காமல் பிதா தந்த பொறுப்பை நிறைவேற்றும்படி பாடுகள், நெருக்கங்கள், சோதனைகள், வேதனைகள் அனைத்தையும் சகித்து வெற்றியாய் பூரணமான ஒரு வாழ்க்கை வாழ்ந்து முடித்தார்.
ஒருவர் இப்பூமியில் எத்தனை ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார் என்பது முக்கியமல்ல; எவ்வாறாக வாழ்ந்தார் என்பதே முக்கியம். நம்முடைய வாழ்க்கை ஆண்டவரை மகிமைப்படுத்திய வாழ்க்கையாக, நமக்குக் கொடுத்த காலத்தில் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பை நிறைவேற்றிய வாழ்க்கையாக, இருக்கிறதா என்பதை ஆராய்ந்து பார்ப்போம்.
பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுவதே இயேசுகிறிஸ்துவின் போஜனமாயிருந்தது என்று வேதத்தில் வாசிக்கிறோம். பசி மிகுந்த ஒருவன் எப்படி உணவின் மேல் ஆவலுள்ளவனாய் இருப்பானோ, அப்படியே இயேசுவும் தேவ சித்தத்தை நிறைவேற்றுவதில் மிகுந்த ஆவல் உள்ளவராய் இருந்தார்.
ஒலிம்பிக் பந்தயத்தில் ஒலிம்பிக் தீபத்தைப் பிடித்துகொண்டு வருபவர் சிறிது தூரம் ஓடிய பின்பு அதை மற்றவரிடம் கொடுத்துவிட்டு அதைப் பெற்றுக்கொண்ட நபர் சிறிது தூரம் ஓடி அதை 3வது நபரிடம் கொடுத்துவிட்டு உடன் ஓடுவார். அத்தீபம் 4வது நபர், 5வது நபர் என்று pass on செய்யப்பட்டு இறுதியாக அந்த தீப்பந்தம் பற்ற வைக்கப்பட்டு சுடர்விட்டு எரியும். இதே போன்று பிதா கொடுத்த பொறுப்பதனை இயேசுவானவர் நிறைவேற்றி, நம்மிடம் அதைக் கொடுத்துள்ளார். அந்த பொறுப்பை நாம் நிறைவேற்றி ஒளிப் பந்தத்தை பற்ற வைப்போம். நாமும் கடைசி வரை ஆண்டவரின் சித்தத்தை நிறைவேற்றி நம் வாழ்க்கை ஓட்டத்தை ஆண்டவருக்குள் மகிழ்ச்சியோடு நிறைவு செய்வோம்.
- Mrs. ஜெபா டேவிட்கணேசன்
ஜெபக்குறிப்பு:
திருச்சியில் நடைபெறுகிற எழுப்புதல் வாலிபர் முகாமிற்கென்று நம் ஊழியர்கள் எடுக்கிற பிரயாசங்களில் தேவகரம் உடனிருக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864