By Village Missionary Movement
Friday, 07-Apr-2023இன்றைய தியானம்(Tamil) 07-04.2023
முடிந்தது
‘’இயேசு... முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.’’ – யோவான் 19:30
இயேசு சிலுவையில் மொழிந்த ஆறாம் வார்த்தை:
சிலுவையில் தொங்கிய இயேசு கிறிஸ்து திருவாய் மலர்ந்தருளிய 7 வசனங்களில் 6வது வசனம் ‘’முடிந்தது’’ . எவையெல்லாம் முடிந்தது என்று பார்ப்போமா?
1. தேவ குமாரனின் மனித சஞ்சாரம் முடிந்தது: ஆதாம், ஏவாள் செய்த பாவத்தைப் போக்கிட, மனிதனாக அவதரித்து, மனிதர்களை மீட்டெடுக்க பாவநிவாரணமான பலியானதில் முடிந்தது.
2. தீர்க்கதரிசனங்கள் நிறைவேறி முடிந்தது: மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாம் நிறைவேறி முடிந்தது.
3. தேவனாகிய பிதா கொடுத்த பணி முடிந்தது: இயேசு சீடர்களிடம், “நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து, அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது” என்று கூறுகிறார். இரட்சிப்பின் திட்டம் சிலுவைப் பலியில் நிறைவேறி முடிந்தது. எனவேதான், யோவான் 17.4- ல் ‘”பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்து முடித்தேன்’’ என இயேசுகிறிஸ்து உறுதியாகக் கூறுகிறார்.
“நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்” என்று கூறின இயேசு கிறிஸ்து, அதை சிலுவையில் நிறைவேற்றி முடித்தார். (எபிரெயர் 9:22) நியாயப்பிரமாணத்தின் படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும். ‘’இரத்தஞ் சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது’’ என்றபடி தம் சொந்த இரத்தத்தைக் கொட்டிக் கொடுத்து பாவ மன்னிப்பை நமக்குக் கொடுத்த மகத்தான பணி முடிந்தது. இவ்வாறு இயேசு கிறிஸ்து எல்லாவற்றையும் முடித்து முடிந்தது என்று கூறினார். அது வேதனையின் குரல் அல்ல, வெற்றி முழக்கம்! தேவசித்தத்தை நிறைவேற்றிய நிம்மதி.
தன் வாழ்க்கை ஓட்டத்தை முடிக்கும் நேரத்தில் சிலர் பேசிய வார்த்தைகளைப் பார்ப்போம். கடவுள் இல்லை, என்று கூறி வாழ்ந்த வால்டேயர் தம்முடைய மரணத் தருவாயில், ‘’ஐயோ, மனுஷராலும் தெய்வத்தாலும் கைவிடப்படுகிற நிலைமைக்கு வந்தேனே நரகத்திற்கல்லவா போகிறேன்’’ என்று சத்தமிட்டுப் புலம்பினார்.
சுவிசேஷத்திற்காக உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு அநேகரை இயேசுவண்டை வழிநடத்திய தேவமனிதர் டி.எல் மூடி தன் இறுதி வேளையில், ‘’இது மரணநாள் அல்ல. என் பட்டாபிஷேக நாள். என் இயேசுகிறிஸ்து கிரீடத்தை வைத்துக்கொண்டு எனக்காகக் காத்திருக்கிறார்’’ என்று முழங்கினார்.
நாம் எப்படி நம் இறுதி நாளை முடிக்கப் போகிறோம்? சிந்திப்போம்! செயல்படுவோம்!!
- Mrs. வனஜா பால்ராஜ்
ஜெபக்குறிப்பு:
ஆமென் வில்லேஜ் டிவியில் பணி செய்ய நல்ல அனுபவம் வாய்ந்த டெக்னீஸியன்கள் கிடைக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864