By Village Missionary Movement
Sunday, 02-Apr-2023இன்றைய தியானம்(Tamil) 02-04.2023
இயேசுவின் கல்வாரி அன்பு
“நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்...” - ஏசாயா 53:5
“ஐயோ, ஒரு தப்பும் பண்ணாத என் பிள்ளையை இப்படி ரத்தம் சொட்ட சொட்ட அடித்து கொடுமைப்படுத்துகிறார்களே” என்று இருதயம் நொறுங்கி அழுத அந்த தாயாரின் அழுகுரலையும், அவளது பிள்ளைபடுகிற வேதனையையும் பார்த்த ஜனங்களின் இருதயமும் உடைந்தது. அந்த தாயாருக்கு ஆறுதல் கூட சொல்ல முடியாமல் அவர்களும் சேர்ந்து அழுதார்கள். எனது வாலிப மகனுக்கு அழகான ஆடை அணிந்து அழகு பார்க்க நினைத்தேன். ஆனால் கிழிந்த ஆடையை அணிந்தவனாய் நிற்கிறானே! எல்லோருக்கும் முன்மாதிரியாய் இருந்த என் பிள்ளைக்கு பொற்கிரீடம் சூட்டி மகிழ்விப்பார்கள் என்று நினைத்தால், இப்படி முள் கிரீடத்தை சூட்டி முகமெல்லாம் இரத்தம் வழிய பார்க்கவே முடியாதபடி என் பிள்ளை இருக்கிறானே என்று எண்ணி இன்னும் குமுறி அழுதார்கள். அந்தத் தாயாரின் நிலையைக் கண்டால் நம்முடைய இருதயம் கூட கஷ்டப்படுமல்லவா?
யார் அந்த பிள்ளை? ஏன் அந்த பிள்ளைக்கு இவ்வளவு கொடுமை? அப்படி என்னதான் தப்பு பண்ணினது என்று பார்ப்போமா? அவர்தான் நமது ஆண்டவர் இயேசுகிறிஸ்து. அங்கே அழுத அந்தத் தாய் இயேசுவின் அம்மா மரியாளின் சத்தம். ஏன் அவரை கொடுமைப்படுத்தினார்கள் என்று தானே நினைக்கிறீர்கள். நம்முடைய பாவங்களுக்காகத்தான்! ஏனென்றால் நம்மில் அவர் அதிகமான அன்பு வைத்ததினால், நம் மேல் விழவேண்டிய ஒவ்வொரு அடியையும் அவர் தன் மேல் ஏற்றுக் கொண்டார். அடியென்றால் சாதாரண பெல்ட் வைத்தோ அல்லது குச்சி வைத்தோ அடிக்கவில்லை. இயேசப்பாவை அடித்த வார் 7 பிரிவாக பிரிந்திருக்கும். அந்த வாரின் முனையில் இரும்பு கொக்கிகள் மாட்டியிருக்கும், அதை வைத்துத் தான் இயேசப்பாவை 40 அடிகள் அடித்தார்கள், அப்படி அடிக்கும் பொழுது அவர் முதுகில் உள்ள சதையெல்லாம் பிய்ந்து கொண்டு வந்ததாம். அவரது முதுகு உழுத நிலம் போல காணப்பட்டதாம். அது மட்டுமல்ல, அவர் தலையில் சூட்டின அந்த முள் முடியும் கம்பி போல் உறுதியாகவும் கூர்மையாகவும் இருந்ததாம். அதை தலையில் அழுத்திக் குட்டும்போது தலைக்குள் குத்தி கண்ணுக்குள் பாய்ந்ததாம். அப்படியானால் எவ்வளவு ரத்தம் சிந்தி இருக்கும்! இயேசப்பா எப்படி வேதனையிலே துடிச்சி இருப்பாங்க!
அப்படியே அந்த முள்முடி சூட்டப்பட்டவராய் பாரமான சிலுவையை சுமந்து கொண்டு கபாலஸ்தலம் என்னும் மலைக்குச் சென்றார். போகும் வழியெல்லாம் இரத்தம். அங்கு சென்று அவர் உடுத்தியிருந்த ஆடையையும் கழற்றிவிட்டு அவர் சுமந்து வந்த அந்த சிலுவையிலேயே அவரை அறைந்தார்கள். இரண்டு கைகளிலும் கால்களிலும் ஆணிகள் பாய்ந்தவராய் நமக்காக சிலுவையில் தொங்கி ஜீவனை விட்டார்.
அன்பான தம்பி தங்கச்சி, உனக்காக இத்தனை வேதனைகளையும் பாடுகளையும் சுமந்த அந்த இயேசப்பாவை நீ பாவம் செய்து இன்னும் அழ வச்சு கஷ்டப்படுத்த போறியா அல்லது சந்தோஷப்படுத்த போறியா?
- Mrs. சாராள் சுபாஷ்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864