By Village Missionary Movement
Saturday, 25-Mar-2023இன்றைய தியானம்(Tamil) 25-03.2023
ஆசீர்வாதமான கண்ணீர்
“…கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்; உன் கண்ணீரைக் கண்டேன்;…” - ஏசாயா 38:5
இஸ்ரவேல் தேசத்தை எசேக்கியா ராஜா ஆண்டு வந்தார். அவர் தேவன் விரும்பியபடி நேர்மையான ஆட்சிசெய்தவர். தேவனுக்காக பக்தி வைராக்கியம் கொண்டவர். தேவன் அவரை ஆசீர்வதித்திருந்தார். திடீரென அவருக்கு ஒரு தீராத நோய் வந்தது. அதனால் அவர் மரணத்தருவாய்க்கு சென்றார். அப்போது தேவன் ஏசாயா தீர்க்கதரிசியை அனுப்பி, ஒரு செய்தியையும் சொல்லி அனுப்புகிறார். “உன் வீட்டின் காரியங்களை ஒழுங்குபடுத்தும்; இனி நீர் பிழைக்க மாட்டீர்” என்று. இதைக் கேட்ட எசேக்கியா கண்ணீரோடு ஜெபம் செய்தார். தன் மனதிலுள்ள காரியங்கள் அனைத்தையும் மனம் திறந்து தேவனிடம் கூறினார். தான் தேவனுக்கு முன்பாக மனஉத்தமமாய் நடந்ததையும் தேவனுக்கு முன்பாக நலமானதை செய்ததையும் கூறி ஜெபித்தார். எசேக்கியாவின் கண்ணீர் ஜெபத்தைக் கண்டு கர்த்தர் மனமிறங்கினார். தேவன் மீண்டும் ஏசாயா தீர்க்கனை அழைத்து ஒரு நற்செய்தியை கூறும்படி அனுப்பினார். எசேக்கியாவை சுகப்படுத்தி, அவருடைய ஆயுள் நாளில் 15 ஆண்டுகளை நீடித்துக் கொடுத்தார். அது மாத்திரமல்ல, உன்னையும் இந்த நகரத்தையும் அசீரிய ராஜாவின் கைக்குத் தப்புவிப்பேன் என்று வாக்கு கொடுத்தார். இறுதியாக எசேக்கியாவின் கண்ணீர் தேவனிடத்திலிருந்து ஒரு அடையாளத்தைப் பெற்றுத் தந்தது.
ஆம், இருதயத்தின் வேதனையிலிருந்து வெளிவந்த எசேக்கியாவின் கண்ணீர் ஆசீர்வாதமான மாற்றத்திற்கு காரணமானது. அவரை மரணத்திலிருந்து மீட்டது. ஆயுளை கூட்டிக் கொடுத்தது. நகரத்திலே பாதுகாப்பைக் கொடுத்தது. தேவனிடமிருந்து அடையாளத்தைப் பெற்றுத் தந்தது. இன்று நாமும் நம் வாழ்வில் வரும் அனைத்து பிரச்சனைகளையும், போராட்டங்களையும் ஆண்டவரிடம் சொல்லி உண்மையான இருதயத்தோடு கண்ணீர் விட்டு ஜெபிப்போமென்றால் நிச்சயம் அந்த சூழ்நிலைகளை தேவன் மாற்றுவார். துக்கத்தின் கண்ணீர், ஆசீர்வாதமான மாற்றத்தைக் கொண்டு வரும்.
ஆம், கண்ணீர் என்னும் சாவியைக் கொண்டு, அடைக்கப்பட்ட எந்த கதவுகளையும் திறக்க முடியும். கண்ணீரின் ஜெபத்தினால் அடைக்கப்பட்ட கர்ப்பங்களும் ஆசீர்வாதமாய் மாறும். வனாந்தரத்தில் நீருற்றும் உண்டாக்கும். அதற்கு அன்னாள் மற்றும் ஆகாரின் கண்ணீர் ஜெபம் உதாரணம். உங்களது கண்ணீருக்கும் நிச்சயம் பதில் உண்டு. அவை பரலோக கணக்கில் அல்லவோ உள்ளது. அது துருத்தியில் அல்லவோ சேமித்து வைக்கப்பட்டுள்ளது! எல்லாவற்றிற்கும் மேலாக நம் தேவன் கண்ணீரைக் காண்கிறவரல்லவா? ஆகவே உங்கள் கண்ணீருக்கு ஆசீர்வாதமான பதில் உண்டு. கலங்காதீர்கள்!
- K.M. பிரசாத்
ஜெபக்குறிப்பு:
நம் பணித்தளங்களில் நடைபெறும் வீட்டு ஜெபக்குழுக்களில் அநேகர் புதிதாக கலந்து கொள்ள ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864