By Village Missionary Movement
Saturday, 18-Mar-2023இன்றைய தியானம்(Tamil) 18-03.2023
மாறாத அன்பு
“அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்...” - 1யோ. 3:16
சில வருடங்களுக்கு முன்பாக ஒரு கொலை குற்றத்திற்காக வாலிபனொருவன் சிறையில் அடைக்கப்பட்டு மரண தண்டனைக்கு நியமிக்கப்பட்டான். அந்த சமயத்தில் தேவனுடைய ஊழியர் ஒருவர் சென்று இயேசுவினுடைய அன்பைக் குறித்து அவனுக்கு அறிவித்தார். “மகனே, உலகம் உன்னை கொலைகாரன் என்று எண்ணி புறக்கணித்துத் தள்ளலாம். மரணத்திற்குப் பின் உன் ஆத்துமாவின் நிலைமை என்ன? உன்னை உருவாக்கினவரும், உன்னைத் தேடி வந்தவரும், சிலுவையில் உனக்காக இரத்தம் சிந்தினவருமாகிய இயேசு உன்னை நேசிக்கிறார்” என்று கூறியபோது அவனுடைய கண்களில் கண்ணீர் வழிந்தது. அவன் அன்றைக்கு தன்னுடைய உள்ளத்தை கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுத்தான். அவனுடைய உள்ளத்தில் பெரிய சமாதானம் வந்தது. தண்டனை நிறைவேற்றப்பட வேண்டிய நாளும் வந்தது. கடைசியாக தான் கற்றுக்கொண்ட பாடலைப் பாடிக்கொண்டே சந்தோஷத்துடனே தண்டனையை ஏற்றுக்கொள்ள சென்றான்.
‘’இயேசு நேசிக்கிறார், இயேசு நேசிக்கிறார்
இயேசு என்னையும் நேசிக்க நான் செய்த என்ன மா தவமோ?
நீசன் நான் என்னைத்தான் இயேசு நேசிக்கிறார்
இதை உணர்ந்து அவர் அன்பின் கரத்துள் ஆவலாய்ப் பறப்பேன்’’
வேதத்தின் முதல் பக்கம் தொடங்கி கடைசிப் பக்கம் வரையிலும் தேவனுடைய அன்பை நாம் காணலாம். சிலுவையிலே அவருடைய தியாகமான அன்பைப் பார்க்கிறோம். அது கல்மனதையும் உருகச் செய்யும் கல்வாரியின் அன்பு. பூமியிலே இயேசுகிறிஸ்து மனிதனாய் வந்த போது எல்லோரையும் நேசித்தார். சிலர் அவருடைய அன்புக்கு பதில் அன்பு செலுத்தினார்கள். லூக்கா 10ம் அதிகாரத்தில் மார்த்தாளும், மரியாளும் அவரைத் தம்முடைய வீட்டிலே ஏற்றுக்கொண்டார்கள் என்று வாசிக்கிறோம். லாசரு அவருடைய சிநேகிதன் என்று அழைக்கப்பட்டான். லாசரு வியாதிப்பட்டு மரித்தபோது ‘’இயேசு கண்ணீர்விட்டார்’’ (யோவான் 11:35) என்று வாசிக்கிறோம். அவருடைய மனதுருக்கம் அவனை உயிரோடு எழுப்பினது.
உலகத்தில் பலவிதமான அன்பு உண்டு. சில அன்பு போலியான அன்பு, சுயநலமான அன்பு, மாய்மாலமான அன்பு. ஆனால் கல்வாரி அன்போ மகா தியாகமான அன்பு, பரிசுத்தமும் மனதுருக்கமுமான அன்பு, உண்மையான அன்பு. பிரியமான தேவனுடைய பிள்ளையே! அன்பற்ற இந்த உலகத்தில் நீ அநாதையைப் போல இருக்கின்றாயா? அந்தக் கல்வாரி சிலுவையை நோக்கிப்பார். அங்கே அவர் தம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தை சிந்தி உன்னை நேசிக்கிறார். கெட்ட குமாரனைப் போல பின்மாற்ற நிலையில் இன்றைக்கு நீ இருந்தாலும் இன்னும் இயேசு உன்னை நேசிக்கிறார். அவரிடத்தில் உன் வாழ்வை இன்று அர்ப்பணிப்பாயா? இயேசு கிறிஸ்துவாகிய அவருக்குள் அவருடைய இரத்தத்தினாலே, பாவ மன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.
- Mrs. ஜெபக்கனி சேகர்
ஜெபக்குறிப்பு:
நம் தலைமை அலுவலகத்தில் பசித்தோர்க்கு உணவளிக்கும் திட்டத்தின் மூலம் ஆதரிக்கப்படும் நபர்கள் இயேசுவின் அன்பை ருசிக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864