By Village Missionary Movement
Wednesday, 15-Mar-2023இன்றைய தியானம்(Tamil) 15-03.2023
கிறிஸ்துவின் கைகள்
“இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது.” - ஏசாயா 49: 16
மூளை இடும் கட்டளைகளை நிறைவேற்றுவதே கைகள்! நண்பர்களிடம் அன்போடு கைகுலுக்கி மகிழ்ச்சியை தெரிவிப்பது, பாசத்தினால் கைகளை நீட்டி அரவணைத்துக் கொள்ளுவது, எழுதுவது இப்படி சகல வேலைகளையும் செய்கிறோம். எல்லா கைகளும் இடைவிடாது இயங்கிக் கொண்டிருக்கிறது. கைகள் சுத்தமாய் இருக்க வேண்டும் என்பதே வேதம் கூறும் ஆலோசனை. தாவீது குறிப்பிடும்போது, “யார் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவான். யார்அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான். கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும் கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே” என குறிப்பிடுகிறார்.
தேவபிள்ளையே இயேசுவின் கரங்களை சற்றே தியானிப்பாயாக! அவருடைய கரங்கள் மென்மையான கரங்கள். ஆயினும் கடின உழைப்புக்கு அஞ்சாத கரங்கள். தச்சு வேலையை மகிழ்ச்சியோடு செய்த கரங்கள். நம்முடைய வேலையை நாம் உண்மையும், உத்தமமுமாய் செய்ய ஊக்கப்படுத்தும் கரங்கள். இயேசுவின் கரங்கள் சிறு பிள்ளைகளை அரவணைத்துக் கொண்ட கரங்கள். யவீரு மகளின் கையைப் பிடித்து; சிறு பெண்ணே எழுந்திரு என்று உயிரூட்டிய கரங்கள், பேதுருவின் மாமியை, குஷ்டரோகிகளை, எண்ணற்ற வியாதியஸ்தர்களைத் தொட்டு குணமாகிய தெய்வீக வல்லமையுள்ள கரங்கள். ஆ! இயேசுவின் கரத்திலிருந்து புறப்படும் மனதுருக்கம் எத்தனை ஆழமானது. எத்தனை இனிமையானது.
கல்வாரிப் பாதையிலே இயேசுவின் கரங்கள் சிலுவையைத் தூக்க வேண்டியதாயிற்று. அவருடைய கரங்களால் அந்த பாரத்தை தாங்க முடியவில்லை. தன் பெலன் கொண்ட மட்டும் பாரச்சிலுவைத் தன்னுடைய கைகளில் தாங்கிக் கொண்டு எருசலேம் வீதி வழியாக தள்ளாடித் தள்ளாடி நடந்தார். அது மட்டுமா? அவருடைய கைகளில் சிலுவை மரத்தோடு கொடிய ஆணிகளால் அறைந்தார்கள். நம் கைகளில் ஒரு முள் குத்தி விட்டால் நாம் எவ்வளவு தவிக்கிறோம். கைகளைக் கடாவும் போது அவர் பொறுமையோடு சகித்தார். கைகளில் உள்ள நரம்புகள் எல்லாம் தாங்க முடியாத வலியினால் வலித்திருக்கும். அந்த வலி தலை வரை எட்டி மூளை எல்லாம் வேதனை எடுத்திருக்கும். ஏன் அவர் தன் கைகளில் ஆணி கடாவ ஒப்புக்கொடுத்தார்?
ஏசாயா தீர்க்கதரிசியின் மூலம் இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன் என்று கூறுகிறார் . தேவ பிள்ளையே! உன் எதிர்காலம் அவர் கையில் உள்ளது. உன்னை எப்போதும் கண்காணித்திருக்கும்படி உன்னை கைகளில் செதுக்கிக் கொண்டார். ஆ! ஆண்டவருடைய அன்பு எத்தனை மேன்மையானது!
- Mrs. கிரேஸ் ஜீவமணி
ஜெபக்குறிப்பு:
சுகமளிக்கும் ஆராதனையில் கலந்துகொள்ளும் நபர்கள் ஆவி, ஆத்துமா, சரீரத்தில் விடுதலையைப் பெற ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864