By Village Missionary Movement
Tuesday, 14-Mar-2023இன்றைய தியானம்(Tamil) 14-03.2023
இயேசுவின் தழும்புகளால் குணமாகிறோம்
“நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்;... அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.” - ஏசாயா 53: 5
ஒரு ஈஸ்டர் ஞாயிறு அன்று போதகர் ஒருவர் ஒரு பழைய கிளிக் கூண்டை ஆலயத்திற்கு கொண்டுவந்து பிரசங்க பீடத்திற்கு மேல் வைத்தார். ஆலயத்தில் இருந்த சபை மக்கள் அனைவரின் கண்களும் கேள்விக் குறியோடு பார்த்தது. அதைக் கண்ட போதகர் பேச ஆரம்பித்தார், “நான் ஆலயத்திற்கு வரும்பொழுது ஒரு சிறுவன் இந்த கிளிக் கூண்டை கையில் பிடித்தவாறு சுற்றிக்கொண்டே வந்தான். அக்கூண்டின் அடியில் மூன்று கிளிகள் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். அச்சிறுவனிடம் அதில் என்ன உள்ளது” என்று கேட்டபோது, “அது வயதான மூன்று கிளிகள்” என்று பதில் கொடுத்தான். இதை வைத்து என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டதற்கு அவன் சிரித்துக் கொண்டே, “இவைகளை வீட்டிற்கு கொண்டு சென்று விளையாடுவேன். அவற்றின் இறகுகளையெல்லாம் பிடுங்கியெடுத்து அவைகளை கோபமூட்டி ஒன்றோடொன்று சண்டையிடச் செய்து வேடிக்கை பார்ப்பேன். கடைசியில் அவைகளை நான் வளர்க்கும் பூனைக்கு உணவாகக் கொடுத்து விடுவேன்” என்றான். “மகனே இவைகளை எனக்கு விலைக்குத் தருவாயா?” என்று கேட்டேன். அதற்கு அவன், “ஐயா இவைகள் சாதாரண கிளி. இவைகள் பாடாது, அப்படி ஒன்றும் அழகாகவும் இல்லை” என்றான். அதற்கு நான் அவனை நோக்கி, “நீ விலையை மட்டும் சொல்” என்றேன். “ரூபாய் 100” என்றான். நான் கூண்டுடன் மெல்ல நடந்தேன். சிறுவனோ பணத்துடன் பறந்தான். நான் ஆலயத்தின் அருகில் இருந்த மரத்தில் பறவைகளை விடுதலையோடு பறக்கச் செய்தேன்” என்று சொல்லி பிரசங்கத்தைத் தொடர்ந்தார்.
ஒருநாள் ஏதேன் தோட்டத்தில் இருந்து வந்த சாத்தானும், இயேசுவும் பேசிக் கொண்டிருந்தனர். “இயேசுவே நான் முழு உலகத்தையும் என் ஆளுகைக்குள் கொண்டு வந்து விட்டேன். ஒருவராவது என்னை எதிர்க்கவில்லை. வயது வரம்பில்லாமல் அனைவரையும் பிடித்து விட்டேன்” என்றான் ஆணவத்தோடு! இயேசு அமைதியான குரலில் “அவர்களை வைத்து என்ன செய்யப் போகிறாய்?” என்று கேட்டார். “ஓ! அதுவா, நான் அவர்களுக்கு எப்படி சண்டையிடுவது, எப்படி குடிப்பது, புகைப்பது, என்றெல்லாம் சொல்லித் தருவேன். இது மட்டுமா, எப்படி துப்பாக்கிக் குண்டுகள் செய்வது, ஒருவர் மற்றவரை கொலை செய்வது எப்படி என்றும் சொல்லித் தருவேன்” என்றான். இயேசு வேதனையோடு அவனை நோக்கி “பிறகு?” என்றார். அதற்கு சாத்தான் “அவர்களை தற்கொலைக்கு நேராக நடத்திக் கொன்று விடுவேன்” என்றது. “விலைக்கிரயமாக நான் உனக்கு என்ன தந்தால் நீ எனக்கு இவர்களைத் தருவாய்” என்று கேட்டார் இயேசு. அதற்கு சாத்தான் “ஐயா, இவர்கள் உங்களுக்கு வேண்டாம். இவர்கள் நல்லவர்கள் இல்லை. உங்கள் முகத்தில் துப்புவார்கள், உங்களை சபித்து, காயப்படுத்தி, சிலுவையில் அறைந்து கொன்று விடுவார்கள்” என மூச்சு விடாமல் சொன்னான். இது எதையும் காதில் வாங்காமல் இயேசு சாத்தானை நோக்கி, “உனக்கு எவ்வளவு வேண்டும் அதை மட்டும் சொல்” என்றார். சாத்தான் ஏளனத்தோடு இயேசுவைப் பார்த்து, “ஐயா, விலைக்கிரயமாய் உம் கண்ணீர் முழுவதும், உம் சரீரத்தில் உள்ள ரத்தம் முழுவதும்” என்று கேட்டான்.
போதகர் அந்தக் கூண்டின் கதவுகளைத் திறந்து காலியாக உள்ள கூண்டை சபையினருக்குக் காண்பித்து ஜெபிக்க ஆரம்பித்தார். ஆம், சிலுவையில் சிந்தின இரத்தத்தின் மூலம் தேவன் விலைக்கிரயம் கொடுத்து நம்மை வாங்கியிருக்கிறார். பிசாசின் பிடியிலிருந்து நம்மை விடுவித்திருக்கிறார். அதை நாம் உணர்ந்திருக்கிறோமா?
- Bro. பாக்கியநாதன்
ஜெபக்குறிப்பு:
ஆமென் கிராமிய டிவி சேனலுக்கான தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864