By Village Missionary Movement
Monday, 13-Mar-2023இன்றைய தியானம்(Tamil) 13-03.2023
பாரச் சிலுவை
“...ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்” - மாற்கு 8:34
பீட்டர் ஒருநாள் இரவு மனபாரத்தோடு தூங்க சென்றான். அன்று இரவு அவனுக்கு ஒரு சொப்பனம் வந்தது. அதில் தான் ஒரு சிலுவையை சுமந்து கொண்டு அழுது கொண்டே நடந்து போகிறான். வழியிலே இரு பெரிய மலைகளுக்கு இடையே பாலமாக போடப்பட்டிருந்த ஒரு பெரிய சிலுவை வழியாய் கடந்து அடுத்த மலைக்கு சென்று சேர்ந்தான்.
தன்னால் இந்த பாரமான சிலுவையை சுமக்க முடியவில்லையே, ஏன் இந்த உலகத்தில் பிறந்தேன். எதற்கு இந்த சிலுவை? என்று பல கேள்விகளோடு நடந்து கொண்டிருந்த அவன் செவிகளில், அன்பான குரலின் சத்தம் ஒன்று கேட்டது. “பீட்டர்! இந்த மலையில் அதோ தெரிகிறது பார்! அந்தப் பெரிய அறையிலே உன் சிலுவையைக் கொண்டு போய் வை” என்றது. அவன் சிந்தித்தவனாய் அந்த அறைக்கு சென்று உள்ளே பார்த்தபோது, பல சிலுவைகள் அந்த அறையில் இருக்கக் கண்டான்.
அதே குரல் மறுபடியும் அவனுக்கு கேட்க ஆரம்பித்தது. “மலைகளுக்கு இடையே நீ கடந்து வந்த பாலமாக அமைக்கப்பட்டிருந்த சிலுவை நான் சுமந்தது. அதை இலகுவாக கடந்தாய் அல்லவா? இப்பொழுது இந்த அறையில் இருக்கும் மற்ற சிலுவைகளையும், உன் சிலுவையையும் ஒப்பிட்டுப் பார். எது பெரியதாய் இருக்கிறது?” அவன் பார்த்தபொழுது அனைத்து சிலுவைகளிலும் இவனது சிலுவை மிக சிறியதாய் இருப்பதைக் கண்டு, வெட்கி தலை குனிந்தான். அப்பொழுதுதான் அது இயேசுவின் குரல் என்பதை உணர்ந்தான்.
நாமும் கூட அனுதின வாழ்க்கையிலே சோதனைகள், போராட்டங்கள், கலக்கங்கள், நெருக்கங்கள், பிரிவுகள் இவைகள் வரும்பொழுது, நமக்கு மட்டும்தான் இத்தனை பாரம் என்று நினைத்துக் கொண்டு வேதனைப்பட்டு தேவன் மேல் உள்ள விசுவாசத்தை இழக்க ஆரம்பிக்கிறோம். அவர் ஏற்கனவே நம் அனைவரின் பாரங்களையும் சிலுவையில் சுமந்து தீர்த்து விட்டார். பிதாவினிடத்தில் பிரவேசிக்க வழியும் உண்டாக்கி விட்டார். “ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும் தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.” (எபிரெயர் 4:16)
பீட்டரைப் போல இல்லாதபடி பாரச் சிலுவை என்று எண்ணாமல், என் சிலுவையின் பாரம் என் இயேசு சுமந்து என்னை விடுதலை ஆக்கியிருக்கிறார் என்ற நிச்சயத்தோடு நமக்கு நியமித்திருக்கிற விசுவாச ஓட்டத்திலே பொறுமையாய் ஓட தேவன் கிருபை தருவாராக. ஆமென்.
- Mrs. ஜெயந்தி பாக்கியநாதன்
ஜெபக் குறிப்பு:
ஆந்திரா, ஒடிஸா, கர்நாடகா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் செய்யப்படும் பணித்தள ஊழியங்களை தேவன் ஆசீர்வதிக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864