By Village Missionary Movement
Tuesday, 28-Feb-2023இன்றைய தியானம்(Tamil) 01-03.2023
ஓட்டத்தை நிறுத்தாதே
“நீ காலாட்களோடே ஓடும்போதே உன்னை இளைக்கப் பண்ணினார்களானால், குதிரைகளோடே எப்படிச் சேர்ந்து ஓடுவாய்?...” - எரேமியா 12:5
ஹரால்ட் ஆபிரகாம் இங்கிலாந்தின் தலை சிறந்த ஓட்டப்பந்தய வீரன். 100 மீட்டர் ஓடும் ஓட்டப்பந்தயத்தில் மிகவும் தேர்ச்சி பெற்றவன். மேலும் தான் எல்லா போட்டியிலும் ஜெயிக்கிறவனாகவே இருக்க வேண்டும் என்ற குறிக்கோளை உடையவனாயிருந்தான். இவனுக்குப் போட்டியாளராக அந்நாட்களில் எரிக் லிடில் என்ற ஓட்ட வீரனும் இருந்தார். எரிக் 400 மீட்டர் ஓட்டத்தில் மிகவும் தேர்ச்சி பெற்றவர். 1924 இல் பாரீசில் நடக்கவிருந்த ஒலிம்பிக் போட்டிக்கு இருவரும் தீவிர பயிற்சி மேற்கொண்டனர். ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டருக்கான ஆயத்தப்போட்டியில் ஹரால்டை எரிக் லிடில் முந்திவிட்டார். இதனால் எரிச்சலடைந்த ஹரால்ட் இனிமேல் தான் ஓடப்போவதில்லை என தீர்மானித்தான். இதைக் கண்ட அவனது நண்பரொருவர் ஹரால்டை தைரியப்படுத்தி பேச முயன்றார். அவனோ கோபமாக, “ஜெயிப்பதற்காகவே நான் ஓடுகிறேன். நான் ஜெயிக்க முடியவில்லை என்றால் ஓடவும் மாட்டேன்” என ஆவேசமாக பதில் அளித்தான். ஹரால்டின் நண்பர் விவேகமாய் அவனைப் பார்த்து இப்படியாக கூறினார், “நீ ஓடவில்லையென்றால் உன்னால் ஜெயிக்க ஒருக்காலும் முடியாது” என்றார். இவ் வார்த்தையில் உள்ள அர்த்தத்தைப் புரிந்தவனாய் ஹரால்ட் உணர்வடைந்து கொண்டான்.
போட்டிகள் நிறைந்த உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமது தோல்வியான தருணங்களால் நாம் மிகவும் பெலவீனமடைந்து விடுகிறோம். ஹரால்டைப் போன்று “நானும் இனிமேல் இப்படித்தான்” என்று பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறோம். ஆனால் இது ஒரு சரியான அணுகுமுறை அல்ல. ஒரு தோல்வியை சந்திப்போமென்றால் அதிலிருந்து அடுத்து எப்படி மீள வேண்டும். இதில் நான் கற்றுக் கொண்டது என்ன? என்று சற்று நிதானித்தறிதல் அவசியம்.
கிறிஸ்தவ வாழ்வின் நமது ஆவிக்குரிய ஓட்டத்திலும் நாம் சோர்வுறாது ஓடும்படி தேவன் நம்மை அறிவுறுத்துகிறார். எலியாவைப் போன்று, “போதும் கர்த்தாவே” என்று சொல்லும் சூழல் நம்மைச் சுற்றி இருக்கலாம். ஆனால் தேவனோ நம்மைப் பார்த்து, ”நீ எழுந்திரு, நீ பண்ண வேண்டிய பிரயாணம் வெகுதூரம்” என்கிறார். “உங்கள் பந்தயப் பொருளை நீங்கள் இழந்து போகும்படி உங்களை வஞ்சியாதிருக்கப் பாருங்கள்” என பவுல் நம்மை எச்சரிக்கிறார்(கொலோ. 2:19). நம்மைப் பார்த்து தேவன் கூறுகிறார், “நம்பிக்கையுடன் ஓட்டத்தைத் தொடருங்கள்” என்று. ஆம், நான் வீணாக ஓடினதும், வீணாகப் பிரயாசப்பட்டதுமில்லையென்கிற மகிழ்ச்சி கிறிஸ்துவின் நாளில் நமக்கு உண்டாகும். ஆமென்!
- P. ஜேக்கப் சங்கர்
ஜெபக்குறிப்பு:
இம்மாதம் முழுவதும் நடைபெறும் ஊழியங்களில் தேவகரம் உடனிருந்து வழிநடத்த ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864