By Village Missionary Movement
Monday, 27-Feb-2023இன்றைய தியானம்(Tamil) 28-02.2023
தேவனின் தெரிந்தெடுப்பு
“உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும் தேவன் தெரிந்து கொண்டார்” - 1 கொரிந்தியர் 1:28
சர்வ வல்லமையுள்ள இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள்! நான் எனது குடும்பத்தில் மூன்று சகோதரர்களுடன் நான்காவது பெண் பிள்ளையாக பிறந்தேன். ஆண் பிள்ளையை எதிர்பார்த்து இருந்த என் பெற்றோருக்கு என் பிறப்பு மிகவும் வெறுப்பைத் தந்தது. அதனால் எனக்கு பெற்றோரின் அன்பு கிடைக்கவில்லை. அன்பைத் தேடி உலக மாய வலைகளில் சிக்கி ஏமாந்தேன். என் வாலிப வயதில் படிப்பில் ஆர்வம் இருந்தது. என் பெற்றோர் என்னை வேலைக்கு அனுப்பினார்கள். அதிலும் எனக்கு மகிழ்ச்சி இல்லை. எனினும் என் வேதனை நேரத்திலெல்லாம் வேதமே எனக்கு ஆறுதல் தரும் பொக்கிஷமாக இருந்தது. “என் கஷ்டமான நேரங்களில் எல்லாம் ஏன் எனக்கு மட்டும் வேதனை?” என்று ஆண்டவரிடம் கேள்வி கேட்பேன். அவரும் “தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனை சிட்சிக்கிறார்” என்று பதில் தருவார். சிறிது காலம் சென்ற பின் மகிழ்ச்சியே இல்லாத என் வாழ்விலும் தேவன் மகிழ்ச்சியைத் தந்தார். எனக்கு நல்ல கணவரையும், இரு பிள்ளைகளையும், சிறந்த உறவுகளையும் தந்து வாழ வைத்து, அவருக்கு சாட்சியாக மாற்றி விட்டார். அதனால் இன்னும் அதிகமாக அவர் சித்தம் செய்யவும், நானும் என் குடும்பமும் சேர்ந்த ஊழியம் செய்யவும் எங்களை அர்ப்பணித்துக் கொண்டோம்.
வேதத்தில் கூட தாவீது என்ற தேவமனிதர் தன் சகோதரர்கள் மத்தியில் மறக்கப்பட்டவராய் தகப்பனால் ஆடு மேய்க்க அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அவர் அவ்விடத்திலும் தேவனோடு வாழ்பவராகவும், துதிப்பவராகவும், ஜெபிப்பவராகவும் இருந்தபடியால் தன்முன் “கோலியாத்” நின்ற போதும் பயமின்றி செயல்பட்டு வெற்றியும் பெற்றார். அது மட்டுமன்றி சமஸ்த இஸ்ரவேலருக்கும் ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்டு உயர்த்தப்பட்டார். இந்த முழு பூமியைப் படைத்த தேவனே, “தாவீதை தன் இருதயத்திற்கு ஏற்றவன்” என்று சாட்சி கொடுத்துள்ளார்.
நாமும் கூட இன்று மற்றவர்களால் புறக்கணிக்கப்பட்டவர்களாக, அசட்டை செய்யப்படுபவர்களாக, எதற்கும் உதவாதவர் என்று சொல்லப்படுபவராக கூட இருக்கலாம். ஆனால்,” எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி” (யோவான் 1:9) என்ற வார்த்தையின்படி இன்று நம்மையும் உலகிற்கே ஒளி கொடுக்கும் விளக்காக மாற்ற இயேசு இருக்கிறார். அவரைத் தேடுகிறவர்களை அவர் ஒருபோதும் கைவிடமாட்டார். இயேசுவிடம் நம் இருதயத்தை மட்டும் கொடுத்தால் போதும். வேதத்தில், “மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்” என்று கர்த்தர் சொல்கிறார். ஆம், இருதயத்தைப் பார்க்கும் இயேசுவின் இருதயத்திற்கு ஏற்றவர்களாய் நாம் வாழ்ந்தால் போதும். ஆண்டவர் நம்மையும் ஆசீர்வதித்து உயர்த்துவது உறுதி.
- Mrs. ஞானசெல்வம் செல்வராஜ்
ஜெபக்குறிப்பு:
7000 மிஷனெரிகள் ஒரு லட்சம் கிராமங்கள் என்ற இலக்கை அடைய ஆண்டவர் உதவி செய்ய ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864