By Village Missionary Movement
Friday, 24-Feb-2023இன்றைய தியானம்(Tamil) 24-02.2023
கைவிடாத தகப்பன்
“நான் உன்னோடே இருந்து,.. நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார்.” - ஆதி. 28:15
எனது பெயர் பானு. நான் Bible Ccllege விடுதியில் தங்கிப் படித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு நாள் அம்மாவிடம் போனில் பேசும்போது “எனது காலில் ஏற்பட்ட காயம் இரண்டு வாரங்கள் ஆகியும் ஆறவில்லை. சுகர் இருப்பதால் பெரிதாகிக் கொண்டே வருகிறது. சீழ் வடிந்து கொண்டே இருக்கிறது. நாளைக்கு மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்துப் பார்க்க வேண்டும். மிகவும் பயமாக உள்ளது” என்று அம்மா சொன்னார்கள். நான் கர்த்தருடைய சமூகத்தில் மிகவும் பாரப்பட்டவளாய் கண்ணீரோடு, “ஆண்டவரே! நான் உமது வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, உமது ஊழியத்தைச் செய்ய வந்து விட்டேன். நான் அவர்களை அருகில் இருந்து கவனிக்க முடியாது. அங்கு என்னுடைய இடத்தில் மூத்த சகோதரனாக நீர் இருந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளும்” என்று ஜெபித்து விட்டு படுக்க சென்று விட்டேன். மறுநாள் எனது அம்மாவிடம் நான் விசாரிக்கும்போது இரவில் இருந்த காயம் காலையில் எழுந்து பார்க்கும் போது ஆறி சுருங்கிவிட்டது என்று ஆச்சரியமாகக் கூறினார்கள். நான் ஆண்டவருக்கு நன்றி செலுத்தினேன்.
வேதாகமத்தில் கூட நாம் ஆபிரகாமைப் பற்றி வாசிக்கிறோம். அவர் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து தனது சொந்த தேசத்தையும், இனத்தையும் தொழிலையும் விட்டு கர்த்தர் சொன்ன தேசத்திற்கு பிரயாணம் செல்கிறார். “நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னை கைவிடுவதில்லை “ (ஆதி.28: 15) என்று தேவன் அவருக்கு வாக்குத்தத்தம் கொடுக்கிறார். தாம் சொன்னபடியே எல்லாக் காரியத்திலும் நேர்த்தியாக நடத்தி அவரை ஆசீர்வதித்தார். தேவன் ஆபிரகாமிடம் ஈசாக்கை பலியிடச் சொன்ன போதும் எந்த கேள்வியும் கேட்காமல் கீழ்ப்படிந்தார். முடிவு ஈசாக்கிற்கு பதிலாக அந்த இடத்தில் ஒரு ஆட்டுக்குட்டி பலியிடப்பட்டது. அது வேறொன்றுமில்லை; நமக்காக பலியான தேவ ஆட்டுக்குட்டியாகிய இயேசுகிறிஸ்துவையே குறிக்கிறது. ஆபிரகாம் தேவனுக்கு கீழ்ப்படிகிறவரானதால் தேவன் அவரோடு கூட இருந்து, அவரை மென்மேலும் ஆசீர்வதித்தார். நாம் ஆபிரகாமை “விசுவாசத்தின் தகப்பன்” என்று அழைக்கிறோம்.
ஆம் பிரியமானவர்களே! நாம் நமது வாழ்வில் கர்த்தருக்கு முதலாவது இடம் கொடுக்கும் போது அவர் நம் வாழ்வில் நன்மை செய்கிறார். கர்த்தருக்காக ஏதாகிலும் ஒன்றை பிரயாசப்பட்டு செய்யும்போது, அவரது வார்த்தைக்கு கீழ்ப்படியும்போது அவர் உங்களை கைவிடாத தகப்பனாய் இருக்கிறார். அவர் சொன்னதைச் செய்யுமளவும் உங்களைக் கைவிட மாட்டார். உங்களுக்காக அவர் யாவையும் செய்து முடிப்பார். கர்த்தருடைய சித்தத்தின்படி வாழ ஒப்புக்கொடுத்த உங்கள் வாழ்வில் இதுவரை நீங்கள் கண்டிராத அதிசயங்களைச் செய்ய வல்லவராய் இருக்கிறார். ஆமென்.
- M. எப்சிபா
ஜெபக்குறிப்பு:
நாம் அனுப்பும் ஜெபக்குறிப்புகளுக்கு பரிந்து பேசி ஜெபிக்கும் எஸ்தர் போன்ற பெண்கள் அநேகர் எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864