By Village Missionary Movement
Thursday, 23-Feb-2023இன்றைய தியானம்(Tamil) 23-02.2023
நாணல்
“...நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்” - 1கொரிந்தியர் 10:12
ஆற்றோரமாய் பெரிய மரம் ஒன்று இருந்தது .அதன் அருகில் நாணல் செடிகளும் வளர்ந்திருந்தன. இந்த மரம் கிளைகள் விட்டு மிகப்பெரிய மரமாய் இருந்தது. அதற்கு தன்னுடைய கிளைகளைப் பார்த்தாலே பெருமையாக இருக்கும். அருகில் இருக்கும் நாணலை அற்பமாகப் பார்க்கும். நாணலைப் பார்த்து,”ஒரு சிறிய காற்று அடித்தால் அங்கும் இங்கும் வளையும் உனக்கு என் அருகில் இருக்க தகுதியே இல்லை” என்று ஏளனமாக பேசும். ஒரு நாள் சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மரம் நாணலைப் பார்த்து, “இந்த மழையில் நீ விழுந்து விடுவாய்” என்று சொல்லி கேலி செய்தது. சூறைக்காற்று சூறாவளியாய் வீச ஆரம்பித்தது. அந்த சூறாவளிக் காற்றில் பெரிய மரம் வேரோடு சாய்ந்தது. எல்லாம் ஓய்ந்த பின், “நாமே இப்படி விழுந்து விட்டோம், இந்த நாணல் இல்லாமல் போயிருக்கும்” என்று எண்ணிப் பார்த்தது. ஆனால் நாணலோ எப்போதும் போல அசைந்தாடிக் கொண்டிருந்தது. ஆச்சரியத்தில் மரம் கேட்டது, “உனக்கு ஒன்றும் ஆகவில்லையா?” என்று. “நான் காற்று அடிக்கும் போது அதன் திசைக்கு ஏற்ப குனிந்து கொண்டேன். என்மேல் தான் காற்று வீசி சென்றது. என்னை அது பாதிக்கவில்லை” என்றது நாணல். தன்னை தாழ்த்தத் தெரிந்த நாணல் காப்பாற்றப்பட்டது. பெருமை பேசின மரம் அழிந்துவிட்டது.
வேதத்தில் தாவீது கோலியாத்தை நோக்கி கையில் கவணுடன் வருகிறார். கோலியாத்தின் உடலிலும் கையிலும் அனேக பாதுகாப்பு ஆயுதங்கள் இருந்தன. ஆனால் தாவீதின் கையிலோ கூழாங்கற்கள் மட்டுமே! தாவீது கற்களை எறியும் போது கோலியாத் கையில் இருக்கும் கேடயத்தை வைத்து தடுத்திருக்கலாம். ஆனால் இந்தக் கல் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று பெருமையாக நின்றான். அந்தக் கல்லே கோலியாத்தை வீழ்த்தியது. ஆம் பெருமையே அவன் வீழ்கைக்கு காரணமானது.
இதை வாசிக்கும் அன்பு தேவனுடைய பிள்ளைகளே! நீங்கள் இருக்கும் இடத்தில் ஆலமரம் போல் காணப்படலாம். ஆனால் நாணலைப் போன்றவர்களை அற்பமாய் எண்ணாதபடி இருக்க எச்சரிக்கப்படுகிறோம். நான் யார் தெரியுமா? என் வேலை, என் சம்பளம், என் வீடு என்றும், இது என்னுடைய உழைப்பு, திறமை, பெலன் என்று எண்ணிக் கொண்டிருந்தால் இந்தப் பெருமை வரும்போது நம்மைச் சுற்றி இருப்பவர்களை நம்மையும் அறியாமல் அற்பமாய்ப் பார்க்க ஆரம்பித்து விடுவோம். இப்படி எண்ணம் வருவது விழுகையின் ஆரம்பம். இதைக் குறித்து நீதி.18: 12 ல், “அழிவு வரும் முன் மனுஷனுடைய இருதயம் இறுமாப்பாயிருக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை” என்று வாசிக்கிறோம். ஆம், இறுமாப்பு, பெருமையோடு வாழாமல் நம்மை நாமே தாழ்த்தக் கற்றுக் கொள்வோம். தேவன் நம்மை ஆசீர்வதிப்பார்.
ஜெபம்: அன்புள்ள ஆண்டவரே, நான் இந்த கோலியத்தைப் போல யாரையும் அற்பமாக எண்ணி வீழ்ந்து போய்விடாதபடி எச்சரிக்கையாக இருக்க உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில், ஆமென்.
- Mrs. தவமணி வைரவேல்
ஜெபக்குறிப்பு :
ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் மருத்துவமனைகளில் சந்திக்கப்படும் ஆத்துமாக்கள் இயேசுவை உறுதியாய் பற்றிக் கொள்ள ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864