By Village Missionary Movement
Saturday, 18-Feb-2023இன்றைய தியானம்(Tamil) 18-02.2023
நிலைத்திருங்கள்
"நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம்.” - எபிரெயர் 3: 14
ஒரு வாலிபன் கண்ணீரோடு ஒரு வயதான போதகரை சந்திக்க வந்தான். அவன் “போதகரே, இந்த மாதமாவது எனக்கு ஆசீர்வாதமாக அமைய ஜெபியுங்கள்” என்றான். உடனே போதகர் “ஏன்? அப்படி என்ன உன் வாழ்வில் நடந்தது?” என்றார். உடனே வாலிபன் “நான் சென்ற மாதத்தில் புதிதாக தொழில் தொடங்கினேன். பெரிதாக லாபம் ஒன்றுமில்லை. எனவே வேறு தொழில் செய்யலாம் என்று இருக்கிறேன். அதற்காகத்தான் ஜெபிக்க வந்தேன்” என்றான். உடனே போதகர் சிரித்துக்கொண்டே, “தம்பி, தேவன் அற்பமான ஆரம்பத்தின் முடிவை சம்பூரணமாய் மாற்றுகிறவர். அதற்கு நிலைவரமான மனது வேண்டும். இதே தொழிலில் நிலைத்திரு. தேவன் ஞானம் தருவார் என ஜெபித்து அனுப்பினார்.
ஆம், தேவ பிள்ளைகளே! புதுப் புது செயல்களில் ஈடுபட்டிருப்போம். ஆனால் அதில் சிறு தடுமாற்றம், ஏமாற்றம் வந்ததும் “இதெல்லாம் நமக்கு ஒத்துவராது இதையெல்லாம் செய்வது கடினம்” என பின் வாங்காமல் அதற்கு முற்றுப்புள்ளி வைக்காமல், தொடர்ந்து செய்வோம், அதின் பலனை முழுமையாய் பெறுவோம். அதனால்தான் தாவீது நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும் என்கிறார் (சங் 51: 10) ஆரம்பத்திலே சில தடுமாற்றங்கள், ஏமாற்றங்கள் இருந்தாலும் விசுவாசத்தோடு நாம் முன்னோக்கி செல்லும் போது, கர்த்தரிடத்தில் நாம் பங்குள்ளவர்களாக மாற முடியும். இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வெளிவரும்போது, கானானுக்குள் செல்வோம் என்ற நம்பிக்கையில் சென்றனர். ஆனால் சிவந்த சமுத்திரம், குடிக்க தண்ணீர், உணவு என பல பிரச்சனைகளைக் கண்டு நம்பிக்கையை விட்டுவிட்டு முறுமுறுத்தனர். கானானை இழந்தனர். நீங்கள் உங்கள் ஆவிக்குரிய, உலக வாழ்வின் முன்னேற்றத்திற்கென எடுத்த தீர்மானத்தில் பின்வாங்காமல், கைவிடாமல் தொடர்ந்து முன்னேறுங்கள்.
நீங்கள் தொடங்கிய செயலில் சிறிது தொய்வு ஏற்பட்டதற்காக மனம் வருந்தி அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் விட்டுவிட முடிவு செய்து விட்டீர்களா? உங்களுடைய துவக்கம் அற்பமாயிருந்தாலும் உங்களுடைய முடிவு சம்பூரணமாயிருக்கும். நீங்கள் புதிதாய் தொடங்கிய செயல், தொழில் ஆரம்பத்திலே நன்றாக பிரச்சனையில்லாமல் சென்றால் அதிக கவனம் தேவை. ஏனெனில் “ஆரம்பத்திலேயே துரிதமாகக் கிடைத்த சுதந்திரம் முடிவிலே ஆசீர்வாதம் பெறாது” என்று நீதி. 20: 21 ல் வேதம் கூறுகிறது. தேவனிடத்தில் பூரணமான நன்மையைப் பெற நிலைவரமான ஆவியைக் கொண்டிருப்போம்.
- Mrs. அன்புஜோதி ஸ்டாலின்
ஜெபக் குறிப்பு:
சுகமளிக்கும் ஆராதனையில் ஜெபக்குறிப்பு கொடுக்கின்ற ஒவ்வொருவரும் ஆவி, ஆத்துமா சரீரத்தில் விடுதலையடைய ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864