Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 17-02.2023
Share:

By Village Missionary Movement

Friday, 17-Feb-2023

இன்றைய தியானம்(Tamil) 17-02.2023

 

மகத்தான மண்புழு

 

"நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு” - ரோமர் 12: 21

 

இரண்டு சிறுவர்கள் விடுமுறை நாட்களில் மண்ணை எடுத்து சேறு உண்டாக்கி விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கையில் மண்புழு வந்து சிக்கியது. அதை நான்கு துண்டுகளாக்கி அதை அப்படியே போட்டுவிட்டு வேறு இடத்திற்கு விளையாடச் சென்று விட்டனர். வலியினால் துடித்தது புழு. சில நாட்களில் வெட்டப்பட்ட நான்கு துண்டுகளும் நான்கு மண்புழுக்களாக உருமாறி இருந்தன. மண்ணுக்கடியில் வாழ்ந்தாலும், மண்புழுவின் செயல்பாடுகள் மகத்தானது. மண்ணை மிருதுவாக்கி, நிலம் இறுகிப் போகாமல், பூமியின் மேலுள்ள தண்ணீர் பூமிக்குள் செல்வதற்கும், தாவரங்களின் வளர்ச்சிக்கும் மிகவும் பயனுள்ளதாய் விளங்குகிறது. வெட்டப்பட்ட சூழ்நிலையிலும் வெளியே தெரியாமல் பூமிக்கு அடியில் வாழ்ந்தாலும் மற்றவர்களுக்குப் பிரயோஜனமான இந்த மண்புழுவின் வாழ்க்கை மிகவும் ஆச்சரியமானதே! தனக்கு தீமை நேரிட்ட போதிலும், அதையும் பிறருக்கு நன்மையாக பிரயோஜனமாக மாற்றியது.

 

வேதத்திலும் 2 இராஜாக்களின் புத்தகத்தில் சீரிய ராஜாவின் இரதங்களும் படைகளும், இஸ்ரவேலுக்கு விரோதமாய் படையெடுப்பதற்கு முற்றுகை போட்ட போது, இஸ்ரவேலின் ராஜா அவர்களோடு எதிர்த்து நிற்காதபடி அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொண்டு போய் அவர்களுக்கு விருந்து பண்ணி அவர்களை அனுப்பிய செயல், “சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்” என்ற வசனத்தை நினைவு படுத்துகிறதல்லவா? அவர்கள் அப்புறம் இஸ்ரவேல் தேசத்திற்கு வரவில்லை என்று வாசிக்கிறோம். தனக்கு எதிராய் வந்தவர்களை விருந்து வைத்து சமரசம் செய்த செயல் வியக்க வைக்கிறது. இதே போல் யோசேப்பும் தன்னை அடிமையாக விற்றுப் போட்ட தன் சகோதரர்களைத் தண்டிக்காமல் அவர்களுக்காக ஜீவரட்சணை செய்தார். தன்னை கல்லெறிந்தவர்களைக் கூட மன்னித்து “இந்தப் பாவத்தை இவர்கள் மேல் சுமத்தாதிரும்” என்று ஸ்தேவான் சொன்னார். புதிய ஏற்பாட்டிலே நீதிமானான யோசேப்பும், மரியாளை அவமானப்படுத்த நினைக்கவில்லை. இவர்கள் வாழ்வில் இருந்தது போல கிறிஸ்துவின் சிந்தை நமக்குள்ளும் வளர்ந்து பெருகட்டும்.

 

ஆம்! மண்புழுவைப் போல நம்முடைய செயல்களும் மற்றவர்களை சிந்திக்க வைக்கட்டும். நமக்கு எதிராய் எழும்புகிறவர்களையும் நேசிக்கும் இருதயம் நமக்குத் தேவை. யோசேப்பைப் போல சகோதர சிநேகம் நமக்குள் பெருகட்டும். ஸ்தேவானைப் போல துன்பத்தின் நடுவிலும் மற்றவர்களுக்காக ஜெபிக்கிற அனுபவம் உருவாகட்டும். யோசேப்பைப் போல பிறரை அவமானப்படுத்தாத இயேசுவின் சிந்தை நாம் எல்லோருக்குள்ளும் வளரட்டும். தேவன் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக!

- Mrs. மஞ்சுளா

 

ஜெபக்குறிப்பு:

வாரந்தோறும் திங்கள்கிழமை இரவு நடைபெறும் முழு இரவு ஜெபத்தில் அனேகர் பங்குபெற ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al