By Village Missionary Movement
Monday, 13-Feb-2023இன்றைய தியானம்(Tamil) 13-02.2023
இரட்சிக்கப்பட்டவர்களே புறப்பட்டுப் போங்கள்
"உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள்,... கழுதைக்குட்டியைக்
கட்டியிருக்கக் காண்பீர்கள்: அதை அவிழ்த்துக்கொண்டு வாருங்கள்." – லூக்கா 19:30
ஒரு மிஷனெரி வட மாநிலத்தில் ஊழியம் செய்து வந்தார். ஒரு நாள் கிராமத்திலுள்ள ஒரு குடும்பத்தை சந்திக்க நேர்ந்தது. அந்தக் குடும்பத்தினர் தங்களுக்குத் தெரிந்த ஒரு வயதானவரை அறிமுகப்படுத்தினர். அவர் ஒரு ரேடியோவிற்கு மாலை அணிவித்து அதை வணங்கிக் கொண்டிருந்தார். அதிர்ந்த மிஷனெரி, "இது என்ன" என்று கேட்டதற்கு அவர், "இதுதான் என்னுடைய குரு" என்றார். "ஏன் அப்படி சொல்லுகிறீர்கள்?" என்று மிஷனெரி கேட்டார். "இதில் காலையிலும் மாலையிலும் இயேசுவைப் பற்றிய செய்திகள் வரும். அதைக் கேட்டு வருகிறேன். அது எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் வரும் இயேசு கடவுளை வணங்குகிறேன்” என்றார். இதுவரை அவருக்கு ஆலோசனை சொல்லி தொடர்ந்து வழிநடத்த யாருமில்லையே என அங்கலாய்த்தார். அவருக்கு ஜெபிக்கவும் தெரியாது. இதனை அறிந்த மிஷனெரி அவருக்கு ஜெபிக்கக் கற்றுக் கொடுத்து பரிசுத்த வேதாகமத்தைக் கொடுத்து உதவினார்.
பிரியமானவர்களே! இந்நிகழ்வு நமக்கு எதைக் கற்பிக்கிறதென்றால், ஏதோ ஒரு வகையில் கர்த்தரால் தொடப்பட்டவர்கள் நம் அருகிலேயே இருக்கின்றனர். நாம் அவர்களைத் தொடர்ந்து வழிநடத்தி இயேசுவைக் குறித்து இன்னும் சொல்லும் போது அதை உடனே ஏற்றுக் கொள்ளும் இருதயம் உடைய மக்களும் திரளாய் நம் முன் இருக்கிறார்கள். நாம் தான் அவர்களை சந்திக்கப் புறப்பட்டுப் போக வேண்டும். இயேசு கிறிஸ்து தமது சீஷர்களிடம், "எதிரேயிருக்கிற கிராமத்திற்குப் புறப்பட்டுப் போங்கள்" என்றார். ஆம், நாம் புறப்பட்டுப் போகும்போதுதான் கட்டப்பட்டவர்களைக் காண முடியும், இயேசுவண்டை அவர்களை அழைத்து வர முடியும்.
நாம் இன்று இரட்சிக்கப்பட்டு இயேசுவை நமது இரட்சகராக ஏற்றுக் கொண்டிருக்கிறோம். இதற்கு காரணமென்னவென்று நிதானிப்போமென்றால் எத்தனையோ மிஷனெரிகள் தங்கள் சுகவாழ்வைத் துறந்து, தேவைகளைப் பொருட்டென்று எண்ணாமல் இரத்தம் சிந்தவும், மரிக்கவும் தங்களை ஒப்புக் கொடுத்ததின் விளைவேயன்றி வேறல்ல. மிஷனெரிகளின் இரத்தம், சரீரம் நமது பூமியில் விதையாக விதைக்கப்பட்டதால் விளைந்த விருட்சமே நமது இரட்சிப்பு! இதைத்தான் அப்போஸ்தலர் பவுல் தமது நிருபத்தில் இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக் குறித்து கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக் கொள்ள முடியுமென்று எழுதுகிறார்.
யாரோ ஒருவர் நம்மிடம் வந்து இரட்சிப்பின் செய்தியை சொன்னதால் தானே நரகத்திற்கு தப்பித்துள்ளோம் என்பதை உணர்ந்தால், எப்படி மற்றவர்களுக்கு சொல்லாமல் இருக்க முடியும்?
- Bro. ரூபன் கிறிஸ்டி
ஜெபக்குறிப்பு:
பசித்தோருக்கு உணவளிக்கும் திட்டத்தின் கீழ் சந்திக்கப்படும் ஒவ்வொரு ஆத்துமாக்களும் இரட்சிக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864