By Village Missionary Movement
Saturday, 11-Feb-2023இன்றைய தியானம்(Tamil) 11-02.2023
இஸ்ரவேலர் செய்யத் தவறியவை
"உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே" - யாத்திராகமம் 20:2
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! இன்று, இஸ்ரவேலர் செய்யத் தவறிய இரண்டு காரியங்களைப் பார்ப்போம். ஆண்டவரால் விடுதலையும் நன்மைகளும் பெற்ற இஸ்ரவேலர்கள் அதற்கேற்றபடி நடவாமல் போன அநேக காரியங்களை நாம் வேதத்தில் காணலாம். அதில் ஒரு சம்பவத்தின் மூலமாக ஆண்டவர் இன்று நம்மோடு இடைப்படுவாராக.
மீதியானியரின் கை இஸ்ரவேலரின் மீது பலத்திருந்தது. மீதியானியர் இஸ்ரவேலரின் நிலத்தின் விளைச்சலைக் கெடுத்து, மிருக ஜீவன்களைப் பறித்துக் கொண்டார்கள். இப்படி மீதியானியர் இஸ்ரவேலரை சிறுமைப்படுத்தின நாட்களிலே கிதியோன் என்னும் இரட்சகனை தேவன் எழுப்பினார். அவன் கர்த்தரை சார்ந்து கொண்டு கர்த்தருடைய வார்த்தையின்படி மீதியானியருக்கு விரோதமாக யுத்தம் செய்தபடியால் தேவன் அவனுக்கு ஜெயத்தை கொடுத்தார். அதனால் மீதியானியர் திரும்ப தலையெடுக்கக் கூடாதபடிக்கு இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் தாழ்த்தப்பட்டார்கள். தேசமானது கிதியோனின் நாட்களில் நாற்பது வருஷம் அமைதியாக இருந்தது.
இப்படி கிதியோன் மூலமாக ஆண்டவரிடத்திலிருந்து நன்மையைப் பெற்றுக் கொண்ட இஸ்ரவேல் புத்திரர் இரண்டு முக்கியமான காரியங்களை செய்யத் தவறினர். ஒன்று, இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நினையாமல் போனார்கள். மற்றொன்று கிதியோன் செய்த சகல நன்மைக்குத்தக்க தயவை அவன் வீட்டாருக்குப் பாராட்டவில்லை. மாறாக அவன் வீட்டாருக்கு துரோகம் செய்தார்கள். ஆம், கிதியோனுடைய வேலைக்காரியின் மகனான அபிமெலேக்கு கிதியோனின் கர்ப்பப் பிறப்பாகிய எழுபது பேரைக் கொல்ல இஸ்ரவேலர் அபிமெலேக்குக்கு துணை நின்றனர். ஆனாலும் கிதியோனின் இளைய குமாரனாகிய யோதாம் ஒளிந்திருந்தபடியினால் அவன் தப்பினான். இஸ்ரவேலிலுள்ள சீகேம் மனுஷர் செய்த இப்படிப்பட்ட எல்லாப் பொல்லாப்பையும் தேவன் அவர்கள் தலையின் மேல் திரும்பும்படி
பண்ணினார். யெருபாகால் என்றழைக்கப்பட்ட கிதியோனின் குமாரன் யோதாமின் சாபம் அவர்களுக்குப் பலித்தது.
அன்பு சகோதர சகோதரிகளே, இஸ்ரவேலர் நன்றியில்லாதவர்களாக நன்மை செய்தவர்களுக்கு எதிராக துரோகம் செய்தனர். தங்கள் தேவனாகிய கர்த்தரையும் மறந்தனர். அவர்களின் முடிவு சாபத்திற்கு உள்ளானது. கிறிஸ்தவர்களாகிய நாமும், நன்மை செய்தவருக்கு தீமை செய்யாமல் சாபத்தை அல்ல ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள தகுதியானவர்களாய் வாழ்வோம்.
நினைவிற்கு: என் ஆத்துமாவே, அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே.
- K. பெஞ்சமின்
ஜெபக்குறிப்பு
நமது மீடியா ஊழியங்களில் தேவனுடைய கரம் உடனிருந்து வழிநடத்த ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864