By Village Missionary Movement
Friday, 03-Feb-2023இன்றைய தியானம்(Tamil) 04-02.2023
எழும்பி பிரகாசி
“உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.” - யோவான்1:9
இருபது வருடங்களுக்கு முன் நான் கல்லூரிக்குச் சென்ற போது கல்லூரி படிப்பைத் தொடர முடியாமல் சுமார் ஆறு மாத காலமாக வீட்டிலேயே ஒரு பைத்தியக்காரியைப் போல இருந்தேன். எனது தாயாரின் ஜெபத்தினால் எனது சுகவீனம் மாறியது. என்னைக் குறித்து ஏளனமாய் நினைத்தவர்கள் மத்தியில் தேவன் என்னை உயர்த்தினார். நான் சந்தித்த சவால்களின் மூலம் மோசேயை தேவன் வனாந்தரத்தில் பழக்குவித்ததைப் போல என்னை பழக்குவித்தார். ஊழியங்களிலும் தேவன் என்னை ஆச்சரியமாய் நடத்தினார். இருளில் இருந்த என்னை பிரகாசிக்க செய்தார். ஆம் எந்த மனிதனையும் பிரகாசிப்பிக்கின்ற மெய்யான ஒளி அவரே!
வேதத்திலே இயேசுவுக்கு முன்னோடியாய் வாழ்ந்தவர் யோவான் ஸ்நானன். இவர் சகரியா–எலிசபெத்துக்கு மகனாய்ப் பிறந்தார். இந்த யோவானைக் குறித்து “அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான்” என்று வேதம் நமக்கு அடையாளப்படுத்துகிறது. வனாந்தர வாழ்வு, எளிய உடை, எளிய உணவு இவைகள் அவரை மற்ற மக்களிடம் இருந்து வேறுபடுத்திக் காண்பித்தது. இவருடைய எளிமையான வாழ்க்கை முறையும், பாவத்தைக் கண்டித்து உணர்த்திய விதமும் மக்களை மனந்திரும்பும்படி அழைப்பு விடுத்த யோவானுடைய போதனைகளும், எருசலேம், யூதேயா மற்றும் யோர்தானைச் சுற்றி இருந்த மக்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு ஞானஸ்நானம் பெற வைத்தது. நான் சிறுகவும் கிறிஸ்து எனக்குள் பெருகவும் வேண்டும் என்ற ஜெபம் அவருடைய தாழ்மையை நமக்கு கற்றுக் கொடுக்கிறது. கிறிஸ்துவுக்காக அவர் கொண்ட தைரியம் இரத்த சாட்சியாய் மரிக்கவும் அவரைத் தகுதிபடுத்தியது. ஆம், அவர் கிறிஸ்துவுக்காக எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தார்.
ஆம், அருமையானவர்களே உங்களுக்குள்ளும், என்னால் பிரகாசிக்க முடியுமா, என் வாழ்க்கையும் அநேகருக்கு வெளிச்சம் தரக்கூடியதாக மாறுமா? என்று தோன்றுகிறதா? நம்மை நாமே வேதவசனங்கள் மூலம் சரிப்படுத்திக் கொள்வோம், யோவான் ஸ்நானனிடத்தில் காணப்பட்ட எளிமை,தாழ்மை, கிறிஸ்துவை குறித்த வைராக்கியம் நம்மிடத்திலும் காணப்படுமானால், நாமும் எரிந்து பிரகாசிக்கிற விளக்குதான். நம்முடைய வாழ்க்கையும் வாழ வழி தேடுகிற அநேகருக்கு Light House ஆக மாறும்.
- Mrs. ஞானசெல்வம் செல்வராஜ்
ஜெபக்குறிப்பு:
ஒவ்வொரு பணித்தளத்தில் நடைபெறும் 24 மணிநேர சங்கிலித் தொடர் ஜெபம் மூலம் தேசத்தில் பெரிய மாற்றம் உண்டாக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864