By Village Missionary Movement
Wednesday, 01-Feb-2023இன்றைய தியானம்(Tamil) 02-02.2023
நிச்சயம் நிறைவேறும்
“குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது;... அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை” - ஆபகூக் 2:3
மூளை பாதிப்பால் டாக்டரால் கைவிடப்பட்ட கணவர், வனாந்தரத்தில் நின்றது போன்ற தனிமை! பல கேள்விகளைச் சுமந்து களைத்துப்போன மனதோடு நின்றிருந்தாள் அவள்! புதிய ஆண்டு 2016-ஐ சலிப்போடு நோக்கி இருந்த அந்த பெண்ணுக்கு தேவன் தந்த வாக்குத்தத்தம் “உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணை நிற்கிறேன் என்று சொல்லுகிறேன்.” (ஏசாயா41:13) என்பதே! அந்தப் பெண்ணும் தேவன் தன் நிலையை மாற்றுவார், கணவருக்கு நல்ல சுகத்தைத் தருவார் என்றிருந்தாள். ஆனால் பிப்ரவரி மாதமே கணவர் இறந்தார். வாழ்வே இருண்டது போலாயிற்று.
வாக்குத்தத்தம் எனக்கு தேவன் தந்ததல்ல, இதற்கு நான் தகுதியானவள் அல்ல என எண்ணி அந்த வாக்குத்தத்தத்தை விட்டு, வாக்களித்தவரை மட்டும்
“என்னை மறவாதிரும்“ என பற்றிக் கொண்டாள். கணவர் இறந்ததோடு எல்லாம் முடிந்தது என அவள் மாத்திரமல்ல, அவளது வீட்டாரும் எண்ணினர். துணை நிற்கிறேன் என வாக்களித்த ஆண்டவர் விட்டுவிடாமல் வாழ்வின் இருண்ட சூழலிலும் உடனிருந்து வாழ்வை முன்னேற்றினார். சிஎஸ்ஐ செவித்திறன் குறைவுடையோர் பள்ளியில் வேலை கிடைக்கவும், முடங்கிய சூழ்நிலையிலிருந்து வெளியே வரவும் மூன்றாண்டுகள் அங்கு பணி செய்யவும் அங்கு துணை செய்தார். செவித்திறன் குறைவுடையோருக்கான ஸ்பெஷல் பிஎட் முடிக்காவிட்டாலும் தற்காலிகமாக மூன்று ஆண்டுகள் பணி செய்ய துணை செய்தார். குறைந்த வருமானத்திலும் எந்த தேவைக்கும் யாரிடமும் நிற்காமல் தேவன் தேவைகளை சந்தித்தார். குடும்பத்திலும் நெருக்கடியான சூழ்நிலைகள் வந்தது. கண்ணீருடன் இருந்த போது தாயையும் பிள்ளையையும் ஏற்றுக்கொள்கிறேன் என மிஷனெரி ஒருவர் முன்வர திருமணம் செய்து மூவருமாக இணைந்து ஊழியத்தை நிறைவேற்றி வருகின்றனர். அந்தப் பெண் வேறு யாருமில்லை நானே!
பிரியமானவர்களே! கடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்கும் போது ஒன்றை புரிந்து கொண்டேன். நான் மன அழுத்தத்தால் பயந்து முடங்கிவிட கூடிய சூழ்நிலை வருகிறது என அறிந்த தேவன், வாக்குத் தந்து கரம்பிடித்து எனக்குத் துணை நின்று நடத்தி வந்துள்ளார். ஆம், வாக்கு பண்ணினவர் மாறாதவர்; எந்த சூழ்நிலையானாலும் சொன்ன வாக்கு நிறைவேறும். பார்வைக்கு அது நிறைவேறாதது போலும் வாழ்க்கை முடிவை நோக்கி செல்வது போலும் தோன்றும். ஆனால் தேவன் தாம் சொன்ன வாக்கை நம்மில் நிறைவேற்றியதை கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கும் போதுதான் உணர முடியும். மனம் தளர்ந்து போகாதிருங்கள். வாக்குப் பண்ணினவர் உண்மையுள்ளவர், நிறைவேற்றி முடிக்கும் மட்டும் உடனிருப்பார். ஆமென்.
- Mrs . அன்புஜோதி ஸ்டாலின்
ஜெபக் குறிப்பு:
VMM மூலம் ஸ்கூல் கட்ட வேண்டிய அவசியத்தில் உள்ளோம். ஆயத்த பணிகளுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864