By Village Missionary Movement
Tuesday, 31-Jan-2023இன்றைய தியானம்(Tamil) 01-02.2023
நன்றியறிதல்
“தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்” - கொலோசெயர் 3:15
தேவன் பற்பல நன்மைகளை நம் வாழ்வில் செய்து கொண்டே இருக்கிறார். நமக்கு உண்ண உணவு, உடுத்த உடை, தங்குமிடம் ஆகியவற்றைக் கொடுத்திருக்கிறார். நம் சரீரத்தை எவ்வளவு அதிசயிக்கத்தக்க விதமாய் உருவாக்கியிருக்கிறார். நாம் உண்ணுவதற்கு ஏற்ற பயிர் வகைகளையும், பழ வகைகளையும், காய்கறி வகைகளையும் உருவாக்கி நாம் அவற்றை உண்டு பெலனடையும் படி நமக்கு கொடுத்திருக்கிறார். நாம் உணவு உண்ணும் போது இவை எல்லாவற்றையும் நமக்குக் கொடுத்த கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறவர்களாக இருக்க வேண்டும்.
வேதாகமத்திலும் சங்கீதக்காரன் தாவீது, “நான் ஒளிப்பிடத்தில் உண்டாக்கப்பட்ட போது, என் எலும்புகள் உமக்கு மறைவாயிருக்கவில்லை, என் கருவை உம்முடைய கண்கள் கண்டது. என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாத போதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும் உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது” என்று கூறுகிறார். ஆம், நம் தாயின் வயிற்றில் உருவாகும் முன்பே நம்மை அறிந்து நமக்கு தேவையான எல்லாவற்றையும், உருவாக்கி மகிழ்ந்திருக்கிறார். எத்தனை அதிசயமான சிருஷ்டிகர் அவர்! அவரை நன்றியுடன் நினைவு கூருவோம் என்று தாவீது பாடுகிறார். புதிய ஏற்பாட்டிலும் பத்து குஷ்டரோகிகளில் ஒருவன் மட்டுமே பெற்ற நன்மைக்காக நன்றி செலுத்துகிறவனாய் திரும்பி வந்தான். சுத்தமானவர்கள் பத்து பேர் அல்லவா, மற்ற ஒன்பது பேர் எங்கே? என்று ஆண்டவர் நன்றியை எதிர்பார்க்கிறார். ஆகவே நாமும் நன்றியுள்ளவர்களாய் இருக்க கற்றுக் கொள்வோம்.
எனக்கன்பானவர்களே! நாம் நடக்கிறபோதும், உட்காரும்போதும், எழுந்திருக்கும்போதும் அவர் நமக்கு பாராட்டின கிருபைகளை குறித்தே பேச வேண்டும், சிந்திக்க வேண்டும். அப்படிச் செய்யும் போது ஆண்டவருக்கு நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது. “எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்களை; திரும்பி பார் அவர் செய்த நன்மைகளை” என்று கண்ணீரோடு கர்த்தருக்கு நன்றி சொல்வோம். நன்றி என்ற உணர்வை நம் பிள்ளைகளுக்கும் கருத்தாய் போதித்து, அவர்களையும் தேவனுக்கு நன்றியறிதலுள்ளவர்களாய் வளர உற்சாகப்படுத்துவோம். மனிதர்கள் உங்களுக்கு செய்த நன்மைகளுக்காக அவர்களுக்கு நன்றியையும், அவர்கள் உங்களுக்கு செய்த தீமைக்காக ஆண்டவருக்கு நன்றியையும் செலுத்துங்கள். ”நன்றி” என்ற மூன்று எழுத்தை முழுமனதோடு சொல்லப் பழகலாமே! நன்றி நிறைந்த உள்ளத்தோடு ஆண்டவரை ஆராதித்து அவரை மகிமைப்படுத்துவோமாக! ஆமென்.
- Mrs. புவனா தனபாலன்
ஜெபக் குறிப்பு:-
இம்மாதம் முழுவதும் நடைபெறும் ஊழியங்களில் தேவகரம் உடனிருந்து வழிநடத்த ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864