By Village Missionary Movement
Monday, 30-Jan-2023இன்றைய தியானம்(Tamil) 31-01.2023
கைப்பிரதி ஊழியம்
“அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக் கூடுமா எனறான். அதற்குப் பிலிப்பு: வந்து பார் என்றான்” - யோவான் 1:46
75 வயதான ஜான் என்கிற முதியவர் ஒய்வு நாளில் சபைக்கு சென்று ஆராதனை முடித்து, தன்னுடைய வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். வழியில் ஒருவர் இயேசு நல்லவர் என்கிற கைப்பிரதிகளை அங்குள்ள சில நபர்களுக்கு கொடுத்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த அந்த முதியவர் அவரிடம் சென்று கைப்பிரதிகளை வாங்கி, “இதைக் கொடுத்து உன் உழைப்பையும் நேரத்தையும் தான் வீணாக்குகிறாய். இதனால் எந்த ஆத்துமாவும் கர்த்தரிடத்தில் சேரப்போவதில்லை. பாவத்திலிருந்து விடுதலை என்ற தலைப்பில் கைப்பிரதிகளை 30 வருடங்களுக்கு முன்பாக நானும் சுற்றியுள்ள கிராமங்களில், நகரங்களில் உள்ளவர்களிடம் கொடுத்தேன். ஆனால் மக்கள் எல்லோரும் கைப்பிரதியை வாங்கி யாரும் வாசிக்கவில்லை; சிலர் கிழித்தும் சிலர் கீழே வீசியும் சென்றனர். இதனால் எந்த பலனும் இல்லையென்று எண்ணி நானும் இந்த ஊழியத்தை நிறுத்தி விட்டேன்” என்றார். அதற்கு அந்த ஐயா “30 வருடங்களுக்கு முன்பாக நான் வாலிபனாக இருந்தபோது பாவத்திற்கு அடிமையாக இருந்தேன். நீங்கள் சொன்ன இந்த தலைப்பில் உள்ள கைப்பிரதியை படித்து இயேசுவை அறிந்துகொண்டு பாவ விடுதலை பெற்று அன்றிலிருந்து ஆண்டவருக்குள் வாழ்ந்து வருகிறேன்” என்றார். கடைசியில் பார்த்தால் அந்த முதியவர் தான் 30 வருடங்களுக்கு முன்பாக இவருக்கு கைப்பிரதி கொடுத்துள்ளார் என்பது தெரிய வந்தது.
இன்றைய வேதபகுதியில் பிலிப்புவின் சில வார்த்தைகள்தான் நாத்தான்வேல் என்கிற மனிதனை ஆண்டவரிடம் கொண்டு வந்தது. அவன் செய்த சிறு முயற்சி, “வந்து பார்” என்ற வார்த்தைகள் தான் நாத்தான்வேலை இரட்சிப்புக்குள் கொண்டு வந்தது. அதுபோல நாம் செய்யும் ஊழியத்தில் நம்முடைய சிறு முயற்சிகளிலும் நமது ஆண்டவர் பெரிய காரியங்களை செய்ய முடியும்.
அன்பானவர்களே, நம்முடைய கைப்பிரதி ஊழியம் கூட இப்படித்தான். பலனை உடனடியாக தேவன் காண்பிப்பதில்லை. ஆனால் அவைகளை எல்லாம் அவர் மறவாமல் தம்முடைய கணக்கில் வைத்திருக்கிறார். ஏற்ற வேலை வரும்போது அதன் பலனை நம்மை பார்க்க வைப்பார். ஒருவேளை பூமியில் நம்மால் காண முடியாவிட்டாலும் பரலோகத்தில் நம்மை காண வைப்பார். மக்களுக்கு நாம் கைப்பிரதிகளை தரும்போது சிலர் நம்மை உதாசீனப்படுத்தலாம்; சிலர் அவைகளை தூக்கி எறியலாம். இவைகளுக்காக சோர்ந்து போகாமல் ஜெபித்து இந்த ஊழியத்தை செய்யலாம். இதற்குரிய பலனை நிச்சயம் காண்போம்.
நினைவிற்கு: தினமும் 100 கைப்பிரதி கொடுத்தால், அதில் எத்தனை பேர் இரட்சிக்கப்படுவார்கள் என்பது உங்கள் ஜெபத்தில்தான் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
- S. மனோஜ் குமார்
ஜெபக்குறிப்பு:
நமது ஊழியர்களின் பிரயாண பாதுகாப்பிற்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864