By Village Missionary Movement
Friday, 20-Jan-2023இன்றைய தியானம்(Tamil) 21-01.2023
குழந்தையின் சார்பாக குழந்தைகளை தாங்குதல்
“அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக” - பிலிப்பியர் 2:4
தனிமரமாக இருந்து தன் பிள்ளைகளை தனியார் பள்ளியில் படிக்க வைத்துக் கொண்டிருந்த மேரி என்ற தாயாரைப் பார்த்து அந்த பள்ளி ஆசிரியர், “ஒரு சிறு கம்பெனியில் குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்து எப்படி இரண்டு பிள்ளைகளையும் நல்ல பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அந்த மேரி அம்மா, “என் கணவர் ஊழியர்களையும் ஊழியர்களின் பிள்ளைகளையும் தாங்குவதிலும் ஆர்வத்தோடு செயல்படுவார். நான் கூட கேட்பேன், ஏன் பணத்தை விரயமாக்குகிறீர்கள் என்று! ஆனால் அவரோ நான் செலவு செய்யும் பணங்கள் அனைத்தும் பரலோகத்தில் பொக்கிஷமாக சேர்த்து வைக்கப்படுகிறது” என்று சொல்லுவார். அதை அவர் இறந்த பின்தான் நான் உணர்ந்தேன். என் வருமானத்தில் குடும்பத்தை மாத்திரம் தான் நடத்த முடியும். என் பிள்ளைகளுடைய படிப்பு செலவிற்கு எனக்கு போதுமான சம்பளம் இல்லை. ஆனால் கர்த்தரோ ஆசிரியர் கண்களில் தயவு கிடைக்கச் செய்தார். ஒரு ஆசிரியர் ஒரு பிள்ளைக்கான படிப்பு செலவை பொறுப்பெடுத்துக் கொண்டார். இன்னொரு பிள்ளையின் படிப்பு செலவிற்கு அவர்கள் பள்ளியே பொறுப்பெடுத்துக் கொண்டது. ஒரு குறைவுமின்றி என் தேவன் நடத்தி வருகிறார்” என்று கூறினார்கள்.
நாம் இன்று வாங்குகிற சம்பளத்தைவிட கொஞ்சம் அதிகம் கிடைத்தால் குடும்பத்திற்கு நன்றாக இருக்குமே என்று நினைக்கலாம். ஆனாலும் அதிலும் நாம் திருப்தி ஆகிறது இல்லை என்பது தான் உண்மை! என்றைக்காவது நாம் இப்படி ஜெபித்திருக்கிறோமா? எனக்கு வருகின்ற வருமானத்தில் யாராவது ஒரு பிள்ளையை தத்தெடுத்து அவருடைய படிப்புச் செலவை நான் பொறுப்பெடுத்துக் கொள்வேன் என்று! பிறருக்கானவைகளையும் நோக்குவாயாக என்று வேதம் சொல்லுகிறது, அதைக் குறித்து நம்முடைய எண்ணம்தான் என்ன? மற்றவர்களை தாங்குவதில் உங்களுடைய பங்களிப்பு என்ன?
பிரியமானவர்களே! நாம் இல்லாதவர்களுக்கு உதவி செய்வது ஆண்டவருக்கே செய்வதாகும் என்று வேதம் சொல்கிறது. நீங்கள் ஆதரவற்ற, ஏழ்மை நிலையிலுள்ள ஒரு குழந்தையைத் தத்தெடுத்து படிக்க வைப்பீர்களானால், அதை பார்க்கும் உங்கள் பிள்ளைகளும் அதைக் கற்றுக்கொள்வார்கள். இந்த நற்கிரியை சந்ததி சந்ததியாய் தொடரும் என்பதில் சந்தேகம் இல்லை. இப்படி நாங்கள் கிராம மிஷனரி இயக்க குடும்பமாக தங்கள் குழந்தைகள் சார்பாக மற்றொரு குழந்தைகளை தாங்குவோரை ஊக்கப்படுத்தி வருகிறோம். இதன் மூலம் அநேக சிறுபிள்ளைகள் ஆசீர்வதிக்கப்படுகின்றனர். குறிப்பாக அநேக ஆதிவாசி பிள்ளைகள் இதில் அடங்குவர். இவர்களுக்காக ஜெபியுங்கள்.
நினைவிற்கு: நமக்கென்று சேர்த்து வைக்கும் சொத்து ஒரு நாள் அழிந்து போகும், மற்றவருக்கு உதவி செய்து அதில் நாம் அடையும் மகிழ்ச்சி என்னும் சொத்து அழியாத ஒன்று என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
- Mrs.அன்பு ஜோதி ஸ்டாலின்
ஜெபக்குறிப்பு:
“யோசுவாவே எழும்பு” முகாமில் கலந்து கொண்ட பிள்ளைகள் கடைசிக்கால ஆயுதமாக எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864