By Village Missionary Movement
Friday, 30-Dec-2022இன்றைய தியானம்(Tamil) 30-12-2022 (Christmas Special)
நன்றி நிறைவுடன்...
“என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே,அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி’’ - சங்கீதம் 103:1
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள ஒரு பிரபல பத்திரிக்கை ஒன்றில் சிறப்பாக எழுதும் ஆசிரியர் யோனத்தான். இவர் ஒருமுறை தன் வாசகர்களுக்கு “மகிழ்ச்சியில் முதலீடு செய்ய ஒன்பது குறிப்புகள்’’ என ஒரு கட்டுரை எழுதினார். அதில் ஒரு குறிப்பு “பெற்ற நன்மைகளை எண்ணிப்பார்” என்பதாகும். இது ஜான்சன் ஓட்மன் எழுதிய “எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள்’’ என்ற கிறிஸ்தவப் பாடலினுடைய கருத்தின் அடிப்படையில் எழுதப்பட்டதாகும். மகிழ்ச்சியான ஒரு புதிய ஆண்டை எதிர்பார்க்கும் நமக்கும் இக்குறிப்பு மிகவும் அவசியமானது. ஆம், நன்றியறிதல் உள்ள இருதயம் நமக்கிருக்குமானால் மகிழ்ச்சியாய் வாழ முடியும். தேவனிடமிருந்து நாம் பெற்ற நன்மைகளை எண்ணிப்பார்க்கும் போது, அது நமக்கு வியப்பைத் தந்து, நமது சோர்வை நீக்குமல்லவா? ஆகவே வருடத்தின் இக்கடைசி நாட்களை தேவனுக்கு நன்றி செலுத்துவதற்காகவே ஒதுக்குவோம். நம் இருதயம் நன்றியால் நிரம்பியிருக்கட்டும்.
ஆடுகளை மேய்ப்பவராக இருந்த எளிமையான தாவீதை தேவன் தெரிந்தெடுத்து, சகல இஸ்ரவேலருக்கும் இராஜாவாக உயர்த்தி மேன்மைப்படுத்தினார். இந்த தாவீதின் இருதயம் எப்போதும் தேவனுக்கு முன்பாக நன்றியுள்ளதாகவே இருந்தது. இதைக்குறித்து தாவீது ராஜா கூறும்போது, “கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டு வந்ததற்கு நான் எம்மாத்திரம்? என் வீடும் எம்மாத்திரம்?” என துதி நிறைந்த உள்ளத்தோடு தேவனுக்கு நன்றி செலுத்துகிறார். மேலும் இவர் தனது சங்கீதங்களிலே, பலவாறு தனது பிரச்சனைகளை புலம்பினாலும் அச்சங்கீதத்தை முடிக்கும்போது தேவனை துதித்தே முடிப்பதை காணமுடியும். நாமும் இவ்வருடத்தில் பல பிரச்சனைகளையும், பாடுகளையும் கடந்து வந்திருக்கலாம். ஆனாலும் அதன் மத்தியிலும் தேவன் நமக்குக் கொடுத்த சமாதானத்தையும், சந்தோஷத்தையும் எண்ணி நன்றி நிறைவோடு இவ்வாண்டை முடிப்போம்.
கிறிஸ்துவில் பிரியமானவர்களே! நம்மிடம் நம் தேவனுக்கு நன்றி செலுத்த நிறைய காரியங்கள் உள்ளன அல்லவா? நம்மை பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தமைக்காக, நம் கண்ணைக் கண்ணீருக்கும், நம் காலை இடறுதலுக்கும் நம் ஆத்துமாவை மரணத்துக்கும் தப்புவித்தமைக்காக, எத்தனையோ விபத்துகளிலுமிருந்தும் தப்புவித்தாரே! அவை ஒவ்வொன்றாய் நினைத்து நன்றி செலுத்துவோம். மேலும் இவ்வருடத்திலே எத்தனையோ அசெளகரியங்கள் இருந்தாலும் அவரே நம் ஆத்துமாவிற்கு நித்திய வெளிச்சமாய் இருந்து அமரிக்கையாய் வாழும் இருதயத்தை தந்தாரே அதற்காய் துதிப்போம். இதுபோல இன்னும் எத்தனை நன்மைகள் ! ஆம், ‘’தேவன் அருளிய சொல்லி முடியாத ஈவுகளுக்காய் அவருக்கு ஸ்தோத்திரம்’’ ஆமென்.
- P.ஜேக்கப் சங்கர்
ஜெபக்குறிப்பு
இவ்வருடம் முழுவதும் நம்மை வழிநடத்தி வந்த தேவனை மனதார துதிப்போம்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864