By Village Missionary Movement
Thursday, 29-Dec-2022இன்றைய தியானம்(Tamil) 29-12-2022 (Christmas Special)
ஊக்குவிப்போம்
“அதற்கு அவர்: வா என்றார். அப்பொழுது, பேதுரு படவை விட்டிறங்கி, இயேசுவினிடத்தில் போக ஜலத்தின் மேல் நடந்தான்.’’ - மத்தேயு 14:29
3 ஆம் ஆண்டு பி.எஸ்சி. படிக்கும் குமார் ஒரு நல்ல கால்பந்து விளையாட்டு வீரன். பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே அநேக முறை சாம்பியன்ஷிப் பட்டத்தை மாவட்ட அளவில் வென்றிருக்கிறான். திடீரென ஒரு நாள் குமார் மிகவும் சோர்வுடன் இருப்பதைப் பார்த்த அவன் நண்பன் ராஜா அவனை விசாரித்தான். அப்பொழுது குமார், விளையாட்டின் மீது உள்ள ஆர்வத்தை தன் பெற்றோர்கள் அங்கீகரிக்காததால் கடந்த 3 வருடத்தில் கல்லூரியில் நடந்த எந்தப் போட்டியிலும் பங்குபெறாததைக் குறித்து வருத்தப்பட்டு பேசினான். பள்ளியில் படிக்கும் காலங்களில் விளையாட்டில் மட்டுமல்லாமல் படிப்பிலும் ஓரளவு நல்ல மதிப்பெண்கள் எடுத்து வந்தான். ஆனால் கல்லூரியிலோ தன் திறமையையும் வெளிக்கொண்டுவர முடியாமல், படிப்பிலும் தோல்வியடைந்து சோர்ந்து போனவனாகக் காணப்பட்டான். அப்பொழுது ராஜா, “உனக்கு விளையாட்டு என்ற ஒரு திறமையை உனக்குள் வைத்த இயேசப்பாவுக்கு படிப்பிலும் உன்னை வெற்றி பெற வைக்கமுடியும். மற்றவர்கள் பேசுவதை விட்டுவிட்டு, இயேசப்பாவால் உனக்கு உதவ முடியும் என்று நீ முதலில் நம்பு. அவருக்கென்று உன் வாழ்வில் தினமும் நேரத்தை ஒதுக்கு’’ என்று விசுவாச வார்த்தைகளைச் சொல்லி ஊக்குவித்தான். அன்றிலிருந்தே குமார் இயேசப்பாவுடன் பேசவும், வேதத்தை வாசிக்கவும், நேரம் கொடுக்கவும் ஆரம்பித்துவிட்டான். படிப்பில் வெற்றி பெற்றதைப் பார்த்த பெற்றோர்களும் அடுத்து மாநில அளவில் கால்பந்து விளையாடுவதற்கு அனுமதி கொடுத்துவிட்டார். அந்தப் போட்டியில் வென்று குமார் சாதனையாளராக மாறிவிட்டான்.
இயேசுகிறிஸ்து கடலில் நடப்பதைப் பார்த்த பேதுரு, ‘’நானும் வருகிறேன்’’ என்று சொன்னவுடன், இயேசுகிறிஸ்து ‘’வா’’ என்று சொல்லி ஊக்குவிக்கிறார். ஒருவேளை இயேசுகிறிஸ்து பேதுருவைப் பார்த்து, ‘’உன்னால் முடியாது’’ என்று கூறியிருப்பாரானால் அவனால் செயல்பட முடிந்திருக்காது. மாறாக இயேசுகிறிஸ்துவின் நம்பிக்கையுள்ள வார்த்தையினால் அவனால் கடலின் மீது நடக்க முடிந்தது.
நம்மைச் சுற்றியுள்ள அநேகர் ஏதோ ஒரு சூழ்நிலையின் காரணமாக திறமைகளைப் புதைத்து வைத்துள்ளனர். நாமும் அவர்களை சோர்ந்து போகச் செய்யாமல் ராஜாவைப்போல விசுவாச வார்த்தைகளைக் கூறி ஊக்குவித்தால், குமாரைப் போல் அநேகர் செயல்பட ஆரம்பித்து விடுவார்கள். இயேசுகிறிஸ்துவும் நமக்கு முன் உதாரணமாக, சீஷர்கள் அவிசுவாசமாக இருந்தபோதிலும், இவர் விசுவாச வார்த்தைகளை மட்டுமே பேசினார். ஆகவேதான், தேசத்தைக் கலக்கும் சீஷர்கள் எழும்பினார்கள். நாமும் நம்முடன் இருப்பவர்களை ஊக்குவித்து தேசத்தைக் கலக்குகிறவர்களாக உருவாக்குவோம்.
- Dr. விசாலி
ஜெபக்குறிப்பு
இராக்லாண்டு பைபிள் காலேஜில் பயிலும் மாணவர்களுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864