By Village Missionary Movement
Friday, 23-Dec-2022இன்றைய தியானம்(Tamil) 24-12-2022 (Christmas Special)
எளிமையில் அர்த்தமுள்ள கிறிஸ்துமஸ்
“ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்…” - மத்தேயு 5:3
இந்த நாகரீகம் நிறைந்த உலகத்தில், எளிமை என்கிற வார்த்தையே மறந்து போகும் அளவுக்கு மக்கள் தங்கள் மனதளவிலும் சரி, தாங்கள் பயன்படுத்தும் பொருள்களிலும் சரி, ஏன் அவர்கள் பேசும் வார்த்தைகளிலும் கூட ஆடம்பரத்தின் தாக்கம்தான் உள்ளது. இதற்கு கிறிஸ்தவர்களும் விதிவிலக்கல்ல. அதிலும் பண்டிகை காலங்களில் இது அதிகமாகவே காணப்படுகிறது. ஆனால் நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்து பிறப்பிலிருந்து இறப்புவரை எளிமையாய் வாழ்ந்து நமக்கு மாதிரியை வைத்துச் சென்றுள்ளார்.
வானமும் பூமியும் கொள்ளாத தேவன் தன் குமாரன் பிறக்கும்படி தேர்ந்தெடுத்தது தலை சிறந்த நகரத்தை அல்ல, சாதாரண கிராமமான பெத்லகேமைத்தான். அதிலும் அரண்மனையையோ மாளிகையையோ அல்ல, மாட்டுத்தொழுவத்தைதான் தெரிந்து கொண்டார். அவருக்கு தாயாகப் போகிற மரியாள் என்கிற பெண் அத்தேசத்தின் ராணியோ இளவரசியோ பேரழகியோ அல்ல, சாதாரண ஒரு ஏழை கன்னிப்பெண். இப்பூமியில் இரட்சகர் பிறந்துவிட்டார் என்ற செய்தியை தேவதூதர்கள் அத்தேசத்தின் செல்வந்தர்களுக்கோ, ராஜாவுக்கோ சொல்லவில்லை; மாறாக சமுதாயத்தில் நாடோடிகளாக எண்ணப்பட்ட மேய்ப்பர்களுக்கு தரிசனமாகி சொன்னார்கள். அவர் பூமியில் இருந்து ஊழியம் செய்யும் நாட்களில் தலை சாய்க்க இடமில்லை, அவர் இறந்தபோது கூட அவருக்கு சொந்தமாக கல்லறை இருக்கவில்லை. இதற்காக அவர் ஏழைகளுக்கு மட்டும் கடவுள் என்று அர்த்தமல்ல, அவர் ராஜாதி ராஜா! இந்த பூமியில் உள்ள ஐசுவரியங்கள், பொன், வெள்ளி, அதிகாரங்கள், ராஜ்யங்கள் என எல்லாம் அவரால்தான் உண்டாக்கப்பட்டன. இவ்வளவு பெரியவராயிருந்தும் அவரைப் பின்பற்றுகிற நமக்கு இவ்வுலகத்தின் வாழ்வு நிரந்தரமல்ல என்பதை அவர் பிறப்பிலிருந்து இறப்பு வரை எளிமையாய் வாழ்ந்து நமக்கு மாதிரியை வைத்துப் போயுள்ளார்.
பிரியமானவர்களே! வேதம், நம்முடைய வாழ்வில் செல்வம், ஐசுவரியம், பணம் இருப்பது தவறு என்று போதிக்கவில்லை. ஆனால் இவைகள் மட்டும் முக்கியம் என்கிற சிந்தனைதான் தவறு என்று எதிர்க்கிறது. எளிமை என்பது உலகத்தின் வளங்களையே முதன்மையாய் எண்ணாமல் உன்னதத்தின் ஆசீர்வாதங்களை நோக்கி பயணம் செய்வதாகும். இப்படிப்பட்ட சிந்தனை கொண்டிருப்போமானால் வீணான ஆடம்பரம் நம்முடைய ஜீவியத்தில் இல்லாமலே போய்விடும். நாமும் இந்த பண்டிகை நாட்களில் தேவையற்ற ஆடம்பர செயல்களை, செலவுகளைத் தவிர்ப்போம். எளியவர்களும் நம்முடன் எளிதில் பழகக்கூடிய வகையில் நமது வாழ்வு எளிமையாய் இருக்கட்டும். ஆமென்.
- S.மனோஜ்குமார்
ஜெபக்குறிப்பு
நாளை நடைபெறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் அநேகர் பங்குபெற. அவர்களின் பெயர் ஜீவபுஸ்தகத்தில் இடம்பெற ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864