By Village Missionary Movement
Wednesday, 21-Dec-2022இன்றைய தியானம்(Tamil) 22-12-2022 (Christmas Special)
புறஜாதியார் மத்தியில் அர்த்தமுள்ள கிறிஸ்துமஸ்
“இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, … பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது” - மத்தேயு 5:16
ஒரு தேவ ஊழியர் எழுதிய கிறிஸ்துமஸ் பற்றிய ஒரு வேடிக்கைக் கதையை வாசித்தேன். ஒரு ஆலயத்தின் ஆல்டரில் முழங்காலிட்டு ஜெபித்துக் கொண்டிருந்த ஒரு மனிதனின் ஜெபத்தைக் கேட்க ஒரு தேவதூதன் அவனருகில் சென்றாராம். அவன், “ஆண்டவரே, கிறிஸ்துமஸ் தினத்தில் சமைக்க எனக்கு ஒரு கோழி தேவை. எங்கள் போதகர் வீட்டில் அநேக கோழிகள் உண்டு. இரண்டு அங்கிகளை உடையவன் ஒரு அங்கியை இல்லாதவனுக்கு கொடுத்துவிட போதிக்கும் அவர், எனக்கு ஒரு கோழி தரமாட்டார். எனவே ஒரு கோழியை அவர் வீட்டிலிருந்து திருடிக்கொள்கிறேன்’’ என்று ஜெபித்தானாம். அதிர்ச்சியடைந்த தேவதூதன் ஒர் கல்லறை அண்டையில் அழுது ஜெபித்துக்கொண்டிருந்த ஒருவனிடத்தில் சென்றாராம். அவன், ‘’நண்பா சென்ற கிறிஸ்துமஸ் தினத்தில் நாம் இருவரும் சேர்ந்து குடித்து சந்தோஷமாக கிறிஸ்துமஸை கொண்டாடினோமே, இந்த கிறிஸ்துமசுக்கு நீ இல்லையே. எனவே இந்த மது பாட்டிலை உனக்கு சமர்ப்பிக்கிறேன்’’ என்று கூறி ஒரு மது பாட்டிலைக் கல்லறையின் மேல் வைத்தானாம். திகைப்படைந்த தூதன் மின் விளக்குகளால் ஜொலித்துக்கொண்டிருந்த ஒரு வீட்டருகே சென்று பார்த்த போது ஏக்கத்துடன் அலங்காரத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ஏழைச் சிறுவர்களை விரட்டி அடித்தாராம் அந்த வீட்டின் சொந்தகாரர். மனிதர்களின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தைப் பார்த்து தூதன் வேதனையுடன் பரலோகம் திரும்பிச் சென்றானாம்.
இன்றைய வேத பகுதி மனுஷர் தம் நற்கிரியைகளைக் கண்டு தேவனை மகிமைப்படுத்த வேண்டும் என்கிறது. புறஜாதியார் உங்களை அக்கிரமக்காரர் என்று பேசும் விஷயத்தில் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு சந்திப்பின் நாளில் தேவனை மகிமைப்படுத்தும்படி நல்நடக்கை உள்ளவர்களாக இருங்கள் என்று 1பேதுரு 2:12 ல் காண்கிறோம். எனவே மேற்கண்ட கதையில் கண்ட பிரகாரம் தேவ நாமம் தூஷிக்கப்படும்படியாக எந்த காரியத்தையும் செய்து கிறிஸ்துமஸ் கொண்டாடவே கூடாது. அநேக கிறிஸ்தவர்கள் மதுவுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறார்கள். என்ன வேதனை!
பிரியமானவர்களே! இயேசுவை அறியாத புறஜாதி ஏழை மக்களுக்கு உணவும் உடையும் கொடுத்து இயேசுவின் அன்பை அறிவியுங்கள். இயேசுவை அறியாத உங்கள் நண்பர்களை விருந்திற்கு அழைத்து நற்செய்தியைப் பகிர்ந்து கொள்ளுங்கள். கிறிஸ்துமஸ் குறித்த கைப்பிரதிகளை யார் யாருக்குக் கொடுக்கமுடியுமோ கொடுங்கள். துக்கம், வியாதி, தனிமையில் வாடும் புறமார்க்கத்தாரிடம் சென்று கிறிஸ்துமஸ் நற்செய்தியைக் கூறி நம்பிக்கையுள்ள வார்த்தைகளைப் பேசி உற்சாகப்படுத்துங்கள். வீட்டின் அலங்கார விளக்குகள் தரும் வெளிச்சத்தைவிட நம் நற்கிரியைகளாகிய வெளிச்சம் மனுஷர் முன் பிரகாசிக்கட்டும். தேவநாமம் மகிமைப்படும். பரலோகம் கெம்பீரிக்கும்.
- Mrs. கீதா ரிச்சர்ட்
ஜெபக்குறிப்பு:
வாலிபர்களுக்காக வெளியிடும் ‘’கண்மணியே கேள் ‘’ மற்றும் ‘’யோசுவாவே எழும்பு’’ பத்திரிக்கை மூலம் அநேக வாலிபர்கள் தொடப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864