By Village Missionary Movement
Wednesday, 21-Dec-2022இன்றைய தியானம்(Tamil) 21-12-2022 (Christmas Special)
பிறனுக்கானதை நோக்கும் அர்த்தமுள்ள கிறிஸ்துமஸ்
“அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக” - பிலிப்பியர் 2:4
ஏழைப் பெண்மணி ஒருவர் பணக்கார வீடு ஒன்றில் வேலை செய்து வந்தார். அந்த வீட்டு எஜமான் கிறிஸ்துமஸ் பரிசாக அவளது மகனுக்கு ஒரு அழகான Dress –ம், கையில் கொஞ்சம் பணமும் கொடுத்தார். மகிழ்ச்சியோடு வீடு திரும்பிய பெண் வழியிலே, அவளது மகனின் வயதிற்கு ஒத்த வயதில் நல்ல ஆடையில்லாமல் வறுமையினால் வாடிய ஒரு ஏழை சிறுவனைக் கண்டாள். அவளுடைய இருதயத்தில் உந்தப்பட்டதால், மகனுக்காக தந்த ஆடையை அச்சிறுவனிடம் கொடுத்தாள். பின்பு போகும் வழியில் ஒரு கடையில் மகனுக்கு ஒரு ஆடையை எடுக்க எண்ணினாள். எஜமான் கொடுத்த பணமும் கையிலிருந்தது. அதே போன்ற ஒரு ஆடையை எடுத்து கடைக்காரரிடம் தன் கையிலுள்ள பணத்தையும் கொடுத்து, மீதியை எப்படியாவது அடுத்த மாதத்திற்குள் கொடுத்து விடுகிறேன் என்றாள். அவரோ உன்னை எப்படி நம்புவது, எத்தனை பேர் இப்படி கிளம்பியிருக்கிறீர்கள் என பாராமுகமாய் பேசினார். இதைக் கவனித்த ஒரு சிறுபையன் தன் அம்மாவிடம், அம்மா எனக்கு எடுத்த Dress–ஐ இந்த Aunty–யிடம் கொடுத்து விடுவோமா? Sunday class–ல் கூட கொடுப்பதுதான் கிறிஸ்துமஸ் என்று சொல்லிக் கொடுத்தார்கள் என்றான். அம்மா அவனை புன் சிரிப்போடு பார்த்துவிட்டு இப்பெண்ணிடம் பையைக் கொடுத்தார்கள். திறந்து பார்த்தால் மிக விலையுயர்ந்த ஆடை அது! மகிழ்ச்சியோடு தேவனுக்கு நன்றி சொன்னார்கள். ஆம், பிறனுக்கானதை தேடின ஏழைத்தாயையும், அச்சிறுவனையும் கண்டு பரலோகம் மகிழ்ந்திருக்குமல்லவா!
இன்றைய வேதபகுதியிலே, கர்ப்பவதியான மரியாள், வயது முதிர்ந்த காலத்தில் கர்ப்பம் தரித்த எலிசபெத்தை பார்க்கச் சென்று வாழ்த்தி, மூன்று மாதம் அவர்களோடு தங்கியிருந்ததை வாசிக்கிறோம். அது வயது சென்ற எலிசபெத்திற்கு பேருதவியாக இருந்திருக்கும். யோசித்துப் பாருங்கள், மரியாளுக்கும் கர்ப்ப கால அசெளகரியங்கள் நிச்சயமிருந்திருக்கும். ஒரு வேளை மருத்துவரிடம் சென்றிருந்தால் முதல் மூன்று மாதம் மிக முக்கியம். கனத்த வேலை எதுவும் செய்யக்கூடாது. வாந்தி, தலைசுற்றல், குமட்டல் கட்டாயம் இருக்கும். இருந்தாலும் ஏதாவது சாப்பிட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். ஆக மொத்தத்தில் Bed rest எடுத்தால் நல்லது என்று சொல்லியிருப்பார். ஒருவேளை மரியாள் தனக்கானதை மாத்திரம் எண்ணியிருப்பாளானால் எலிசபெத்தை வாழ்த்திவிட்டு வந்திருப்பாள். மூன்று மாதம் உடனிருந்து எலிசபெத்திற்கு உதவியாய் இருந்திருக்கமாட்டாள்.
ஆம், பிரியமானவர்களே! கிறிஸ்து ஒருவருக்குள் உருவாகி விட்டாரென்றால் அதாவது பிறந்து விட்டாரென்றால், நாம் புறப்பட்டுப் போய் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக மாறிவிடுவோம். நமக்கானதையே சிந்தித்துக் கொண்டிராமல் பிறருக்கானதையும் சிந்தித்து செயல்படுவோம். நமக்கு கஷ்டங்கள் இருக்கலாம். ஆனால் நம்மைவிட கஷ்டப்படுவோர் அநேகர் உண்டு. அவர்களை இந்த கிறிஸ்துமஸ் நாட்களில் தேடிச் செல்வோம். நம் உழைப்பால், உதவியால், பொருளால் அவர்களுக்குத் தோள் கொடுப்போம். இந்த கிறிஸ்துமஸ் ஒரு அர்த்தமுள்ள கிறிஸ்துமஸ் ஆகட்டும்.
- Mrs. உமா வில்லியம்ஸ்
ஜெபக்குறிப்பு:
ஊழியர்களுக்காக வெளியிடும் கழுதைகள் கையேடு மூலம் ஊழியர்கள் புதிய பெலனைப் பெற்று தொடர்ந்து ஓட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864